No menu items!

தவறும் தமிழ் சினிமா – ’டாப் 5’ பஞ்சாயத்துகள்!

தவறும் தமிழ் சினிமா – ’டாப் 5’ பஞ்சாயத்துகள்!

உச்ச நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் அறிமுகங்கள் நடிக்கும் படங்களுக்கும் கூட இப்போது பலவிதமான ப்ரமோஷன் சமாச்சாரங்களை கையிலெடுக்கிறார்கள். ஃபர்ஸ்ட் சிங்கிள், மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் என பல நகாசு அம்சங்கள் மூலம் கவனத்தை ஈர்க்கிறார்கள். ட்விட்டரில் ட்ரெண்டிங், யூட்யூப்பில் பல மில்லியன் வியூக்கள் என கலவரப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த ப்ரமோஷன் ஹனிமூன் எல்லாம் படம் வெளியாகும் வரை மட்டுமே நீடிக்கும்.

ஆனால். ஒரு திரைப்படத்தின் தலைவிதி, இன்று ஒரு சில நொடிகளில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களானாலும், முதல் பாதியிலேயே படம் இப்படிதான் என பெரும்பாலோனோர் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஒரு ரசிகருக்குள் இருக்கும் விமர்சகர், தான் பார்க்கும் திரைப்படத்தின் சுய விமர்சனத்தை வெறும் 140 வார்த்தைகளுக்குள் அடக்கி அதை ட்விட்டரில் பதிய, அடுத்த சில விநாடிகளில் அப்படத்தின் முடிவு தெரிந்துவிடுகிறது. இது போதாதென்று வாட்ஸ் அப் க்ரூப்களில், இன்னும் விவரமான விமர்சனங்கள், சில மைக்ரோ விநாடிகளில் நூற்றுக்கணக்கானோருக்கு ஃபார்வேர்ட்களாக பறக்கின்றன.

இதன் விளைவு, 100 கோடிகளைக் கொட்டி எடுத்த திரைப்படமும், சனி ஞாயிறுக் கிழமைகளின் முன்பதிவுகளைத் தாண்டி ஓடுமா இல்லை தடுமாறுமா என்பதை வெறும் 120 முதல் 180 நிமிடங்களில் (ஒரு படத்தின் கால அளவு 3 மணி நேரமாக இருக்கும் பட்சத்தில்) முடிவு செய்வதுதான் இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்.

ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் படங்களாக அமையும் பட்சத்தில், மேற்கூறிய அனைத்து அம்சங்களும் அப்படத்திற்கான பாஸிட்டிவான, இலவச விளம்பரங்களாகவே அமைகின்றன.

அதனால் நல்லப் படமாக இருந்தால் ‘தெரி மாஸ்’ என கொண்டாடத் தயாராக இருக்கும் ரசிகர்கள், நம்மூர் படைப்பாளிகள் கொஞ்சம் சறுக்கினாலும் அவர்களை ’செத்தான்டா சேகரு’ என படையல் போடவும் தயாராக இருக்கிறார்கள்.

அப்படியானால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் படமெடுக்க, மிக அவசியமான அம்சங்கள் என்ன?

தமிழ் திரைப்பட உலகம் மீண்டும் புத்துயிர் பெற்று எழ அவசியமான ’டாப் 5’ அம்சங்கள் இதோ…

1.மீண்டும் கதை இலாகா:

முன்பெல்லாம் கதையை யோசிப்பதற்கென்றே தனி இலாகா இருந்தது தமிழ் சினிமாவின் வரலாறு. ஆனால் இந்த கோல்டன் ட்ரெண்ட், உலகெங்கும் கல்லா கட்டும் ஹாலிவுட்டில் இன்றும் கூட தொடர்கிறது. தமிழ் சினிமாவில் கதை இலாகா இல்லாமல் போனதற்கு காரணம், கதை திரைக்கதை வசனம் என அனைத்தையும் ஒருவரே எழுதினால்தான் அவர் திறமை வாய்ந்த இயக்குநர் என்ற மாயை உண்டாக்கப்பட்டதால்தான். சினிமாவின் காட்சி மொழியைக் கையாளும் நேர்த்தியில் நிபுணத்துவம் இருந்தால் போதும். அதுவே சிறந்த இயக்குநருக்கான அடையாளம். அவரது படைப்பாற்றலுக்குத் தீனிப்போடும் வகையில் ஒரு கதை அவசியம்.

கதையைப் புதுமையாக யோசிப்பது, மக்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் தந்திரமாகும். எனவே கதை இலாகா மூலம் புதுமையான கதைகளை யோசித்து எழுதி, அதை படமாக்கும் நிலை வரவேண்டும்.

ஒரு இயக்குநரிடம் நல்ல கதை இல்லையென்றால், எந்தவித ஈகோ இல்லாமல் மற்றவர்களின் கதையில், தன்னுடைய திறமை வெளிக்காட்டினாலும் போதும் ஒரு தரமான படத்தை கொடுத்துவிட முடியும். அருமையான கதைகளுடன் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடும் இளம் உதவி இயக்குநர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம். இதன் மூலம் அடையாளம் காணப்படாத திறமைசாலிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த புண்ணியமும் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும். மலையாள சினிமாவை போல நல்ல கதையம்சங்களும் திரைப்படங்களை இனி தமிழ் சினிமாவிலும் கொண்டாட முடியும்.

  1. மேஜிக் வேண்டாம் லாஜிக் போதும்:

1980, 90-களில் வெளியான படங்கள் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தன. காரணம் காட்சிகளுக்கு இருந்த முக்கியத்துவம். காட்சிக்களுக்கான பேக்ட்ராப் சமாச்சாரங்கள் காட்சியின் பின்னே மட்டுமே இருந்தன. இன்று, நிலைமை தலைக்கீழ். பேக்ட்ராப் அம்சங்களை முன் நிறுத்தி, காட்சிகளை அதன் உள்ளே நுழைத்து வித்தைக் காட்டுவது அதிகரித்து இருக்கிறது.

உதாரணத்திற்கு ரஜினியின் எந்திரனுக்கும், சந்திரமுகிக்கும் இருக்கும் வித்தியாசம். எந்திரனை இரண்டாவது முறை பார்க்கும் போது முதலில் இருந்த வியப்பு இல்லாததும், சந்திரமுகியை நான்காம் முறை பார்க்கும் போது கூட இருக்கும் விறுவிறுப்பு இருப்பதும்தான்.

முன்பெல்லாம் கதையையும், இயக்குநர்களையும் நம்பி களமிறங்கிய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா ரஜினியும் கூட இன்று பிரம்மாண்டத்தையும், பிஸினெஸ் வேல்யூவையும் நம்பி இறங்கியிருப்பது வருத்தத்திற்குரியது. ரஜினியைப் பின்பற்றும் இதர கமர்ஷியல் ஹீரோக்களும் இந்த மாயை விழுந்திருப்பது தமிழ் சினிமாவை இன்னும் பாதாளத்திற்குள் தள்ளிவிடவே செய்யும். எனவே இதற்கு முன்மாதிரியாக கமர்ஷியல் ஹீரோக்கள் மேஜிக் சமாச்சாரங்களை கைக்கழுவி விட்டு, லாஜிக்கான காட்சிகளுக்கும், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிக அவசியம்.

  1. கலங்கடிக்கும் காம்பினேஷன் கணக்கு:

இந்த மாஸ் ஹீரோவும், அந்த மெகா டைரக்டரும் சேர்ந்தால், படத்திற்கு எதிர்பார்பு எகிறும். பிஸினெஸ்ஸில் லாபம் கொட்டும் என்ற காம்பினேஷன் கணக்கிற்காக படமெடுப்பது ரசிகர்களை ஏமாற்றும் வியாபார தந்திரம். இந்த காம்பினேஷன் கலாட்டா இனியும் தேவை இல்லை. இப்படி எதிர்பார்த்த பெரிய படங்களில் பெரும்பாலானவை ஒரு வெள்ளிக் கிழமையைத் தாண்டி ஓட முடியாமல் தவிப்பதை நாம் இன்று அதிகம் காண்கிறோம்.

எனவே தயாரிப்பாளர் கதாநாயகரின் மாஸ்ஸையும், இயக்குநரின் இமேஜையும் மட்டுமே நம்பி இறங்காமல், கதையை முதலில் கேட்கவேண்டும்.

இந்த கதை இவ்வளவு பட்ஜெட்டுக்கும், இவ்வளவு நட்சத்திர பட்டாளத்திற்கும் சரியான கதையா என்பதை முதலிலேயே தெரிந்து கொள்வது மிக அவசியம். இதனால் தேவையில்லாத நஷ்டத்தையும், அடுத்தடுத்து படமெடுக்கும் முயற்சிகளுக்கு முன்நிற்கும் பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

  1. ரியல் ஹீரோக்களின் அவசியம்:

நல்ல கதையோ, கதாபாத்திரமோ அமைந்தால், தங்களது சம்பளத்தைக் குறைத்து கொண்டு நடித்த ரியல் ஹீரோக்களும், ஹீரோயின்களும் தமிழ்சினிமாவில் இருந்திருக்கிறார்கள். விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பானுப்ரியா, குஷ்பூ மீனா என இந்தப் பட்டியல் பெரியது. இன்று இந்தப் பட்டியல் ஒரு சினிமா டிக்கெட்டின் அளவுக்குள் அடங்கும் வகையில் ரொம்ப சிறியது.

அடுத்து, ஒரு நல்ல படத்தின் பட்ஜெட்டுக்கு சவாலாக முன்நிற்பது மாஸ் ஹீரோக்களின் மெகா சம்பளம். இன்று பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் இருக்கும் முன்னணி நடிகர்களில் பலர், தங்களது புதியப்படம் துவங்கும் போது 25% சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொண்டு நடிக்கிறார்கள். மீத சம்பளத்தை படத்தை வெளியிடும் முன்னரோ அல்லது படத்தின் வெளியீட்டுக்குப் பின் கிடைக்கும் லாபத்தை அடிப்படையாக வைத்தோ பெறுகிறார்கள்.

இது அவர்களது பெரும் சம்பளம் மற்றும் அதற்கான வட்டிச் சுமை நெருக்கடி இல்லாமல் ஒரு தயாரிப்பாளரால் படத்தின் தயாரிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. இந்த ஆரோக்கியமான நிலை தமிழ் சினிமாவிலும் பின்பற்றப்பட வேண்டும்.

  1. திரைப்படம் திரையரங்குகளுக்கே:

சில வருடங்களுக்கு முன்பு படத்தயாரிப்பின் போது போனஸாக கிடைக்கும் அம்சங்களான, சாட்டிலைட் உரிமையும், எஃப்.எம்.எஸ் எனும் வெளிநாடுகளில் திரையிடும் உரிமையும், இதர டிஜிட்டல் உரிமைகளும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் இரண்டாம் வருமானமாக இருந்தது. ஆனால் இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.. இந்த லாப நோக்கை மட்டுமே முதல் குறிக்கோளாக வைத்து படமெடுப்பதால், நல்ல கதையோ, காட்சிகளோ இல்லாமல் வெறும் நகாசுகளை மட்டுமே வைத்து இரண்டரை மணி நேரம் சமாளிப்பது ட்ரெண்டாக மாறிவிட்டது..

இந்நிலை மாறி, திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்காக, நல்ல திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற கருத்து தயாரிப்பாளர்களிடமும், படைப்பாளிகளிடமும் நட்சத்திரங்களிடமும் உருவாகவேண்டும். அப்போதுதான் நல்லப் படத்திற்கான மெனக்கெடல் உருவாகும்.

மக்களின் மத்தியில் வெற்றி பெரும்போது, மற்ற உரிமைகளின் மீதான வருமானம் இன்னும் அதிகம் எகிறி லாபம் கொட்டும் என்பதே உண்மை.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஒடிடி அசுர வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், அது சினிமாவின் பிரபலமான கமர்ஷியல் நட்சத்திரங்களின் படங்களுக்கே இன்றும் முன்னுரிமைக் கொடுத்து வருகின்றன. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இரண்டாம் நிலை, மூன்றால் நிலை நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒடிடி நிறுவனங்கள் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே அந்நிறுவனங்கள் அப்படங்களை வாங்கினாலும், அவற்றை பெரிய நட்சத்திரங்களின் படங்களைப் போல் விளம்பரப்படுத்த்வதில்லை. இதனால் அப்படங்கள் ஒடிடியில் இருக்கின்றன என்பது கூட மக்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.

இதனால் சிறியப் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் தங்களது சொந்த செலவில் அப்படங்கள் இந்த ஒடிடி-யில் வெளியாகி உள்ளது விளம்பரப்படுத்த வேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையே தவிர எந்தவித பலனையும் கொடுப்பது இல்லை.

மேலும் பே பெர் வியூ என்ற நிபந்தைனையை ஒடிடி நிறுவனங்கள் விதிப்பதால், அவற்றுக்கான கமிஷன் போக் எஞ்சுவது சில பைசாக்களில்தான் இருக்கும். இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனாலேயே திரையரங்குகளின் முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்க வேண்டும். இதுவே சினிமாவை நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க உதவும்.

வெறும் இரண்டரை மணிநேரம் பொழுதுபோக்குக்காக, நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தில், திரையரங்களுக்கு வந்து வாங்கும் டிக்கெட்டிற்கு மதிப்பு அளிக்கும் விதமாக திரைப்படம் கொடுக்க வேண்டியது திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்கள் மற்றும் அனைத்து திரைப்பட தொழில் நிபுணர்களின் கடமை.

கொடுக்கும் படத்திற்கு தரமான பொழுதுபோக்கு படம் கேட்பது மக்களின் உரிமை. இந்த கடமையை மறந்து, உரிமை மறுக்கப்படும் போது, தற்போது இணையதள வர்த்தகத்தில் இருக்கும் ’திருப்தி இல்லாத பொருளுக்கு, பணம் திரும்பி வழங்கும்’ ரிட்டர்ன் பாலிஸி பாணியில் ரசிகர்கள் டிக்கெட் விலையைத் திரும்பி கேட்கும் நிலை எதிர்காலத்தில் எழுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...