No menu items!

இணையும் இசை ஜாம்பவான்கள்: ராஜா – ரகுமான் காம்போ!

இணையும் இசை ஜாம்பவான்கள்: ராஜா – ரகுமான் காம்போ!

இளையராஜா – ஏ.ஆர். ரகுமான் – யார் சிறந்த இசையமைப்பாளர்? என்று இன்றும் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் சூழலில், ரகுமான் இசைக் குழுவினருடன் இணைய ராஜா ஓகே சொல்லியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

துபாயில் கடந்த சில மாதங்களாக ‘துபாய் எக்ஸ்போ’ கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த தொடர் நிகழ்வில் நம்ம இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானும் ஸ்டார் அனிருத்தும் தங்கள் இசைக் கச்சேரியை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து இசைஞானி இளையராஜாவும் தனது இசை நிகழ்ச்சியை மார்ச் 5ஆம் தேதி நடத்தினார். இதில் ராஜாவும் கலந்துகொண்டு பல்வேறு பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

துபாய் எக்ஸ்போ கச்சேரிக்காக துபாய் சென்ற இசைஞானி, நிகழ்ச்சி முடிந்தபிறகு அங்குள்ள ஏ.ஆர். ரகுமானின் ‘ஃபிர்தோஸ் மியூசிக்கல் ஸ்டுடியோ’வுக்கு திடீர் விசிட் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், அங்கு ஒவ்வொரு இடத்தையும் மிகவும் ஆர்வமாக சுற்றிப் பார்த்த இளையராஜா அந்த ஸ்டுடியோ குறித்து புகழ்ந்து ரகுமானையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.

இந்த நெகிழ்வான தருணத்தை இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ட்விட் செய்தார் ஏ.ஆர். ரகுமான். அதில், ‘மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்’ என தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டும் இசைப் புயலும் இசைஞானியும் இணைந்திருக்கும் படமும் வைரலானது.

இதனால், உற்சாகமடைந்த இசை ரசிகர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஏ.ஆர். ரகுமானின் ட்விட்டுக்கு பதிலளித்த இளையராஜா, ‘கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இசை ரசிகர்கள்.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய ஏ.ஆர். ரகுமான், அதற்கு முன்பாக இளையராஜாவிடம்தான் ‘கீ போர்ட்’ வாசிப்பாளராக இருந்து வந்தார். அக்காலகட்டத்தில், இளையராஜா உடன் இணைந்து ஏறக்குறைய 500 படங்களில் ஏ.ஆர். ரகுமான் பணியாற்றி உள்ளார். ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராக ஆன பிறகு, பொது இடங்களில் இருவரும் இணைந்து வருவதைக்கூடத் தவிர்த்து வந்தனர். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை என்றுகூட கிசுகிசுக்கப்பட்டது. இன்னொரு பக்கம், ‘இளையராஜாவா ஏ.ஆர். ரகுமானா – இருவரில் யார் சிறந்த இசையமைப்பாளர்’ என இருவரின் இசை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டது இரு ஜாம்பவான்களின் சந்திப்பையும் நடக்கவிடாமல் செய்தது.

இந்நிலையில்தான், ஏ.ஆர். ரகுமானின் ஸ்டுடியோவுக்கு இளையராஜா திடீர் விசிட் செய்ததையும், தொடர்ந்து அவரது கோரிக்கைக்கு இளையராஜா ஓகே சொல்லியுள்ளதையும், அதை ஏ.ஆர்.ரகுமான் சந்தோஷமாக வரவேற்றுள்ளதையும் இசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு ரசிகர் இன்னும் குஷியாகி, ‘எப்போ சார் ஆரம்பிக்கறீங்க. எம்எஸ்வி – இளையராஜா இசையைக் கேட்டோம். இனி இளையராஜா – ஏ.ஆர். ரகுமான் காம்போவை புதிய படத்தில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்’ என ட்விட் செய்துள்ளார்.

இது அந்த ஒரு ரசிகரின் ஆசை மட்டுமல்ல, கோடிக்கணக்கானவர்கள் கோரிக்கையும்கூட; நிறைவேற்றுவார்களா இசைப் புயலும் இசை ஞானியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...