No menu items!

தி ஒடிசி கதை இதுதான் !

தி ஒடிசி கதை இதுதான் !

‘தி ஒடிசி’ இத்தாகா நாட்டின் மன்னனான ஒடிஸியஸ் தனது வீட்டுக்கு திரும்ப மேற்கொள்ளும் பத்து ஆண்டு கால பயணத்தைப் பேசுகிறது.

மேற்கத்திய இலக்கியத்தின் மிகப் பழமையான, புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான ஹோமரின் ‘ஒடிசி’ புராணக் கதையை தற்காலத் தலைமுறைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ’தி ஒடிசி’ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி இருகிறது.

ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கதை, போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாகக் கொண்டது. தேவதைகள், அரக்கர்கள், கடவுள்கள் மற்றும் மனிதர்கள் நிறைந்த ஒரு விசித்திரமான உலகை இக்கதை சித்தரிக்கிறது.

கிரேக்க கவிஞர் ஹோமரால் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் இரண்டு மாபெரும் காப்பியங்களில் ஒன்று ‘ஒடிசி’. மற்றொன்று ‘இலியட்’ (Iliad). இந்த இரு பெரும் கதைகளை எழுதியவர் ஹோமர் தானா என்ற விவாதம் ஆய்வாளர்களிடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது ‘ஹோமரிக் கேள்வி’ (Homeric Question) என்று அழைக்கப்படுகிறது.

ஹோமர் என்பது ஒரு வரலாற்றுத் தனிநபரா அல்லது வாய்மொழி வழியாகக் கடத்தப்பட்ட இலக்கியப் பாரம்பரியத்துக்கு வழங்கப்பட்ட ஒரு பொதுப் பெயரா என்ற சந்தேகம் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது.

ஹோமரின் ‘இலியட்’ கதை டிரோஜன் போரின்போது நிகழ்ந்த ஒரு சிறிய பகுதியை மட்டுமே விவரிக்கிறது. ஆனால், ‘தி ஒடிசி’யோ போர் முடிவடைந்த பின்னர், இத்தாகா நாட்டின் மன்னனான ஒடிஸியஸ் தனது வீட்டுக்கு திரும்ப மேற்கொள்ளும் பத்து ஆண்டு கால பயணத்தைப் பேசுகிறது. இதுவே உலக இலக்கியத்தின் மிக முக்கியமான ‘ஹீரோஸ் ஜர்னி’ வகை புராணமாக கருதப்படுகிறது.

மூலக் கதை ஒடிஸியஸின் கடல் பயணத்தின் நடுப்பகுதியில் இருந்துதான் தொடங்கும். ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படமோ டிரோஜன் போரை முடிவுக்குக் கொண்டு வந்த புகழ்பெற்ற ‘டிரோஜன் குதிரை’ சதித்திட்டத்திலிருந்தே தொடங்குவதாகத் தெரிகிறது.

அதீனா கடவுளுக்குக் காணிக்கையாக வழங்குவதாகக் கூறி, மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்ட குதிரைக்குள் கிரேக்க வீரர்களை மறைத்து வைத்து டிராய் கோட்டைக்குள் அனுப்பும் தந்திரத்தை ஒடிஸியஸ் திட்டமிடுவதாக கதையில் வரும்.

நோலனின் திரைப்படம் ஹோமரின் ஒடிஸியைப் பக்கத்துக்கு பக்கம் அப்படியே திரைக்குக் கொண்டுவராமல், ரோமானியக் கவிஞர் விர்ஜிலின் ‘The Aeneid’ மற்றும் ஏசுக்கிலஸின் கிரேக்க நாடகமான ‘Agamemnon’ போன்ற பிற இலக்கியங்களில் பகுதிகளை தழுவி டிரோஜன் போர் குறித்த பின்னணியை விரிவாகக் காட்டுகிறது.

ஒடிஸியஸ் அதீத அறிவுத்திறன், தந்திரம் மற்றும் ராணுவ பலம் கொண்ட ஒரு வீரன். எனினும், இவன் தன் பயணத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறான். பெனிலோப் ஒடிஸியஸின் மனைவி. பல ஆண்டுகள் கணவனைக் காணாமல் தவிக்கும் அவளது பலவீனத்தைப் பயன்படுத்தி, இத்தாகா நாட்டின் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தும் பேராசை பிடித்த பல ஆண்களைத் தனது மதிநுட்பத்தால் அவள் தனி ஆளாக எதிர்கொள்கிறாள். வெறும் கணவனுக்காகக் காத்திருக்கும் சாதாரணப் பெண்ணாக இல்லாமல், ஆளுமைமிக்க கதாபாத்திரமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டெலிமாக்கஸ் ஒடிஸியஸின் மகன். இவர் ஒடிஸியஸ் போருக்குச் சென்றபோது குழந்தையாக இருந்தவன். பின்னர் இளைஞனாக வளர்ந்துவிட்ட இவன், தனது தந்தையைத் தேடித் தானும் ஒரு பயணத்தைத் தொடங்குகிறான்.

ஒரு விசித்திரமான உலகில் இக்கதை பயணிக்கிறது. இந்த உலகில் மனிதர்களின் விதியைத் தீர்மானிப்பதில் கடவுள்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் நெறிமுறைகளுக்காக செயல்படாமல், தங்களின் சுயநல விருப்பங்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே மனிதர்களின் வாழ்வில் தலையிடுகிறார்கள்.

போர்க்கடவுளான அதீனா, ஒடிஸியஸின் ஒழுக்கத்துக்காக அவனுக்கு உதவவில்லை. மாறாக, அவனது அதீத அறிவுத்திறனையும் தந்திரத்தையும் விரும்புவதால் அவனது பயணத்துக்கு பல்வேறு கட்டங்களில் உற்ற துணையாக நிற்கிறார்.

கடல் மற்றும் புயல்களின் கடவுள் பொசைடன். ஒடிஸியஸ் தனது கடல் பயணத்தின்போது பொசைடனின் மகனான பாலிபெமஸ் என்ற ஒற்றைக் கண் அரக்கனை குருடாக்குகிறான். இதனால் கடும் கோபமடைந்த பொசைடன், ஒடிஸியஸை அழிக்கப் போர்க்கொடி தூக்குகிறார். அவனது பயண வழியில் கடும் புயல்களையும் கப்பல் விபத்துகளையும் உருவாக்கி, அவன் தன் தாய்நாடு திரும்புவதைப் பத்து ஆண்டுகள் தாமதப்படுத்துகிறார்.

ஒடிஸியஸின் பயணம் மத்திய தரைக்கடல் பகுதியை மையமாகக் கொண்டது. இதில் டிராய் மற்றும் இத்தாகா ஆகிய பகுதிகள் தற்கால துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் புவியியல் அமைப்புகளோடு ஒத்துப்போகின்றன. ஆனால், அவன் எதிர்கொள்ளும் சைரன் தேவதைகள், அரக்கர்கள் மற்றும் கலிப்ஸோ தீவுகள் ஆகியவை புராணக் கற்பனைகளாகவே இன்றும் கருதப்படுகின்றன.

பொதுவாக ஒரு வரலாற்று ரீதியான புராணக் கதை என்பது உலகைக் காக்கும் போர்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால், ‘The Odyssey’ அத்தனை ஆபத்துகளையும் தாண்டி, ஒரு மனிதன் தனது தாய்நாட்டுக்கு திரும்பி, தான் பிரிந்து சென்றபோது அனைத்தும் எப்படி இருந்ததோ அதே நிலைக்கு மீண்டும் கொண்டுவர முயலும் ஒரு சாதாரணமான கதைதான்.

அண்ட சராசரங்களின் பேராற்றல்களுக்கு முன்னால், ஒரு மனிதன் தப்பிப் பிழைத்துத் தன் குடும்பத்தோடு சேர்வதே உலகின் ஆகச் சிறந்த சாகசம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படமும் இந்த மனித உணர்வுகளின் ஆழத்தையும், இயற்கை கடந்த சக்திகளின் பிரம்மாண்டத்தையும் ஒருசேரக் காட்சிப்படுத்தவுள்ளது.

டாம் ஹாலண்ட், மேட் டாமன், ஸெண்டாயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவில் இப்படம் பெரும் சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...