No menu items!

இந்தியா இரண்டாகப் பிளவு படுகிறதா?

இந்தியா இரண்டாகப் பிளவு படுகிறதா?

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், இமயமலைக்கு அடியில் இந்திய நிலத்தட்டு ஆழத்தில் பிளவுகள் உருவாகி வருவதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த தகவல் உண்மையில் என்ன சொல்கிறது? இந்தியா இரண்டாகப் பிளவுபோகிறதா? எதிர்காலத்தில் நிலநடுக்கம் அல்லது எரிமலை அபாயம் அதிகரிக்குமா? என்பதற்கு ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் இளங்கோ லட்சுமணன் விளக்கம் அளித்தார்.

கேள்வி: சமீபத்தில் வெளியான ஆய்வில், இமயமலைக்கு அடியில் இந்திய நிலத்தட்டு ஆழத்தில் பிளவுகள் உருவாகி வருவதாகவும், இந்தியா இரண்டாகப் பிளவுபோகும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த ஆய்வு உண்மையில் என்ன சொல்கிறது?

பதில்: முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பூமியின் கண்டங்கள் நிலையாக ஒரே இடத்தில் இருப்பதில்லை. அவை தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்திய துணைக்கண்டமும் ஆண்டுக்கு சுமார் 1 முதல் 2 சென்டிமீட்டர் வரை வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இந்த நகர்வினால் அது திபெத்திய மற்றும் யூரேசிய நிலத்தட்டுகளுடன் மோதுகிறது. இந்த மோதலின் விளைவாகவே இமயமலை உருவானது மட்டுமல்ல, இன்றும் ஆண்டுதோறும் சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இது புதிதாக நடைபெறும் சம்பவமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் இயற்கையான புவியியல் செயல்முறையின் ஒரு பகுதிதான்.

ஹீலியம் ஆய்வு என்ன சொல்கிறது?

கேள்வி: இந்த ஆய்வில் ஹீலியம் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு என்ன அர்த்தம்?

பதில்: ஆய்வாளர்கள் இமயமலைப் பகுதியில் உள்ள பல நிலத்தடி நீர் ஊற்றுகளில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். அந்த மாதிரிகளில் ஹீலியம் ஐசோடோப்புகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. சாதாரணமாக ஹீலியம் போன்ற வாயுக்கள் பூமியின் ஆழமான பகுதிகளிலிருந்து மட்டுமே மேலே வருகின்றன.

இதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் ஆழமான பாறை பிளவுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இதை வைத்து இந்தியா விரைவில் இரண்டாக உடைந்துவிடும் அல்லது மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறு.

இந்தியா இரண்டாகப் பிளவுபடுகிறதா?

கேள்வி: பொதுமக்களிடையே அதிகமாக எழும் கேள்வி இதுதான். இந்தியா உண்மையில் இரண்டாகப் பிரியுமா?

பதில்: புவியியல் ரீதியாக மாற்றங்கள் நிகழலாம். ஆனால் அவை மனித வாழ்க்கை அளவுகோலில் நடைபெறுவதில்லை. இந்த மாதிரியான மாற்றங்கள் பல மில்லியன் ஆண்டுகள் எடுத்தே நிகழும்.

550 முதல் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்த அனைத்து கண்டங்களும் ஒரே பெருங்கண்டமாக இருந்தன. பின்னர் அவை மெதுவாகப் பிரிந்து இன்று நாம் காணும் கண்டங்களாக மாறின. அதே செயல்முறை இன்னும் தொடர்கிறது. எனவே எதிர்காலத்தில் கண்டங்களின் அமைப்பு மீண்டும் மாறலாம். ஆனால் அது நம் காலத்தில் நிகழப்போவதில்லை.

நிலநடுக்கங்களுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா?

கேள்வி: இந்த நகர்வுகளால் நிலநடுக்கங்கள் அதிகரிக்குமா?

பதில்: நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் எல்லைப் பகுதிகளில்தான் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இமயமலை அப்படிப்பட்ட டெக்டானிக் எல்லைப் பகுதியாக இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் அதிகம் நிகழ்வது இயல்பானது.

இந்திய நிலத்தட்டு முழுவதும் வடக்கு நோக்கி நகர்வதால் அதன் அழுத்தம் பல இடங்களில் பகிரப்படுகிறது. அதனால் இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறிய புவியியல் பிளவுகள் இருக்கலாம். ஆனால் அதனால் உடனடியாக பெரிய பேரழிவு ஏற்படும் என்று அர்த்தமில்லை.

சென்னை போன்ற நகரங்களுக்கு ஆபத்து உள்ளதா?

கேள்வி: தென்னிந்தியாவுக்கும், குறிப்பாக சென்னைக்கும் இதனால் ஏதேனும் அபாயம் உள்ளதா?

பதில்: இந்தியாவில் நிலநடுக்க அபாயத்தை கருத்தில் கொண்டு நாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்தான் மிக அதிக அபாய மண்டலத்தில் உள்ளன. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நடுத்தர அல்லது குறைந்த அபாய மண்டலங்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், இந்திய நிலத்தட்டு முழுவதும் நகர்ந்து கொண்டிருப்பதால் சில சிறிய புவியியல் பிளவுகள் பல இடங்களில் இருக்கலாம். அவை குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

எரிமலை உருவாகும் வாய்ப்பு இருக்கிறதா?

கேள்வி: இந்த பிளவுகள் எதிர்காலத்தில் எரிமலை உருவாக வழிவகுக்குமா?

பதில்: எல்லா பிளவுகளும் எரிமலையை உருவாக்காது. எரிமலை உருவாகுவதற்கு குறிப்பிட்ட வகை பாறை அமைப்புகளும், பூமிக்கடியில் உருகிய பாறைகளின் இயக்கமும் தேவைப்படும்.

இமயமலைப் பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் பெரும்பாலும் எரிமலை உருவாக ஏற்றவை அல்ல. எனவே அங்கு புதிய எரிமலை உருவாகும் வாய்ப்பு மிகவும் குறைவு.

பூமிக்கடியில் என்ன நடக்கிறது என்பதை விஞ்ஞானிகள் எப்படி அறிகிறார்கள்?

கேள்வி: ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் ஆழத்தில் என்ன நடக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

பதில்: மனிதர்கள் இதுவரை பூமிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் ஆழம் வரை மட்டுமே துளையிட்டுள்ளனர். அதற்கு கீழே நேரடியாகச் செல்ல முடியவில்லை.

ஆனால் நிலநடுக்க அலைகள், செயற்கைக்கோள் தரவுகள், ஜிபிஎஸ் கருவிகள், நிலத்தடி வாயுக்கள் மற்றும் புவியியல் ஆய்வுகள் மூலம் பூமியின் உள் அமைப்பைப் பற்றி விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் மூலம் உடலின் உள் உறுப்புகளைப் பார்ப்பது போல, புவியியலாளர்கள் நிலநடுக்க அலைகளைப் பயன்படுத்தி பூமியின் உள் அமைப்பை ஆய்வு செய்கிறார்கள்.

ஆப்பிரிக்கா பிளவுபடுவது உண்மையா?

கேள்வி: ஆப்பிரிக்கா கண்டமும் பிளவுபடுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. அது உண்மையா?

பதில்: ஆம், கிழக்கு ஆப்பிரிக்காவில் புவியியல் பிளவுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதுவும் கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுத்தே ஒரு புதிய கடல் அல்லது கண்ட அமைப்பை உருவாக்கும்.

நாம் இன்று காணும் சிறிய நிலப்பிளவுகள், நாளை ஒரு கண்டம் உடைந்துவிடும் என்பதற்கான அடையாளம் அல்ல. அவை நீண்டகால புவியியல் மாற்றங்களின் ஆரம்ப அறிகுறிகள் மட்டுமே.

மக்கள் அச்சப்பட வேண்டுமா?

கேள்வி: இந்த தகவல்களால் பொதுமக்கள் பயப்பட வேண்டுமா?

பதில்: தேவையில்லை. அறிவியல் ஆய்வுகள் புதிய தகவல்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சமூக வலைதளங்களில் பரவும் தலைப்புகளை மட்டும் நம்பி அச்சப்படக் கூடாது.

பூமி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. கண்டங்கள் நகர்கின்றன. இமயமலை உயர்கிறது. நிலநடுக்கங்கள் இயற்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் மனிதர்கள் கண்முன்னே சில நாட்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ நடைபெறப்போவதில்லை.

மனித சமுதாயம் கவனம் செலுத்த வேண்டியது, இயற்கையை மதித்து வாழ்வதில்தான். மலைப்பகுதிகளில் கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், அதிகளவு நிலத்தடி நீர் உறிஞ்சுதல், சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்கள் போன்றவை இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தை அதிகரிக்கக்கூடும். எனவே அறிவியல் விழிப்புணர்வுடன், இயற்கையுடன் இணைந்து வாழ்வதே பாதுகாப்பான எதிர்காலத்திற்கான சரியான வழியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...