சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதில் பல்வேறு வசதிகளையும் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக பெரம்பூர் தொகுதியில் முக்கிய இடங்களில், சிசிடிவி, வைபை வசதியை ஏற்படுத்த வேண்டும், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க வேண்டும், சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், இ-சேவை மையத்தையும் நேற்று திறந்து வைத்தார். அதேபோல் நேற்று வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரனுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.
அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:
எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர் (2 இடங்கள்), எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் CCTV கேமரா, Wi-Fi வசதி மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இணைப்புடன் 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.
மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.25 லட்சம் செலவில் கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பிட்ச்கள், கபடி மைதானம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. புதிய விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட உள்ளன.
சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.
எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ‘தற்காலிகப் பணியாளர்களுக்கான’ (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும்.
அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும். அங்கன்வாடி மையங்கள்
அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.
மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் பரிந்துரைத்துள்ளார்.



