சராசரியாக ஒரு மனிதனின் வாழ்க்கை நேரம் வெறும் முப்பதாயிரம் நாட்கள் மட்டுமே; அந்த குறுகிய காலத்தை எப்படி அர்த்தமுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் வாழ்வது என்பதற்கான உளவியல் ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
“வாழ்க்கை ரொம்ப சின்னதுபா, அனுபவிச்சு வாழணும்” என்று நம்மில் பலரும் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், நிஜமாகவே நாம் அப்படி வாழ்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதுதான் உண்மை. சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் சுமார் 30,000 நாட்கள் மட்டுமே. நீங்கள் முப்பது வயதைக் கடந்தவர் என்றால், அதில் 11,000 நாட்களை ஏற்கனவே செலவழித்து விட்டீர்கள். மீதமுள்ள நாட்களை எப்படிப் பயனுள்ள வகையில் செலவிடப் போகிறோம் என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
‘நாளைக்குச் செய்யலாம்’, ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்ற வார்த்தைகள் நமது வாழ்வின் மிக மோசமான எதிரிகள். காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது மட்டும் முக்கியமல்ல; அந்த நேரத்தை எப்படி அனுபவித்து வாழ்கிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம். உங்களின் மீதமுள்ள வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்பதைப் பற்றி சில முக்கியமான விஷயங்களைக் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குழந்தைப் பருவத்தில் நாட்கள் மிகவும் மெதுவாக நகர்வது போலவும், வருடங்கள் முடிவதே இல்லை என்பது போலவும் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் பெரியவர்களாகிய பிறகு, நாட்கள் எப்படிப் பறக்கின்றன என்பதே நமக்குத் தெரிவதில்லை. இதற்கு ஒரு முக்கியமான அறிவியல் காரணம் இருக்கிறது. நமது மூளை எப்போதுமே புதிய அனுபவங்களை மட்டுமே மிகவும் ஆழமாகப் பதிவு செய்யும் தன்மையுடையது.
குழந்தைகளாக இருந்தபோது நமக்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆனால் பெரியவர்களான பிறகு, அதே காலை உணவு, அதே வேலை, அதே பயணம் என நமது வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிவிடுகிறது. மூளை இவற்றைப் பதிவு செய்வதை நிறுத்திவிடுகிறது. இந்த சுழலில் இருந்து வெளியே வர, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களிடம் பேசுவது போன்ற வித்தியாசமான அனுபவங்களை உருவாக்குவது அவசியம். இதன் மூலம் நேரத்தின் அருமையை உங்களால் மீண்டும் முழுமையாக உணர முடியும்.
நமது வாழ்க்கையின் மிக முக்கியமான சொத்து நமது வாழ்க்கை நேரம் மற்றும் நாம் சம்பாதித்து வைத்துள்ள உறவுகளும்தான். உறவுகளை ஒரு வங்கிக் கணக்கைப் போலக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு அன்பான செயலும் ஒரு Deposit, ஒவ்வொரு சிறு தவறுகளும் ஒரு Withdrawal. டெபாசிட் செய்யாமல் பணத்தை எடுக்க முடியாதது போல, நாம் அன்பைக் கொடுக்காமல் எதையும் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
உறவுகளைப் பேணுவதற்கு விலையுயர்ந்த பரிசுகள் தேவை என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஒரு சிறிய குறுஞ்செய்தி, துன்பமான நேரங்களில் உடனிருப்பது போன்ற சிறு செயல்களே உறவுகளை மிகவும் வலுவாக்குகின்றன.



