No menu items!

எல் நினோ தமிழகத்திற்கு ஆபத்து

எல் நினோ தமிழகத்திற்கு ஆபத்து

எல் நினோ என்ற வார்த்தையின் தாக்கம் இப்போதுதான் தேசத்தின் கடைக்கோடி மக்களை வாட்டத் தொடங்கியிருக்கிறது. இதன் உக்கிரம் போகப்போகத் தெரியும் என்று வானிலை தன்னார்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

தேசத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், வேளாண்மை, அன்றாட வாழ்க்கையில் இனி ‘எல் நினோ’வின் தாக்கம் நேரடியாக தலையிடத் தொடங்கும் அபாயம் காணப்படுகிறது.

இந்தியாவின் பெரும் பகுதி மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும் தென் மேற்கு பருவமழை ஜூனில் காலதாமத்துடனே கேரளாவில் தொடங்கியது. வட மாநிலங்கள், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் பெரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழல் நிலவியது. ஜூன் மாதம் முடிந்த நிலையில், 40% மழை பற்றாக்குறையாக இருக்கிறது என்றும், ஜூலை மாதத்தில் மழை ‘இயல்புக்கும் குறைவாக’ இருக்கும் அல்லது 94% அளவு அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இயல்புக்கும் குறைவான மழை என்றபோதே, பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும். குறிப்பாக, வேளாண்மைக்கு நீர்பாசனப் பற்றாக்குறை, நீர் மின் உற்பத்தி, குடிநீர் பிரச்சினை என பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் புள்ளிவிவரங்கள்படி, ஜூன் மாதத்தில் நீண்டகால சராசரி மழை அளவான 165.33 மிமீ அளவில் இந்து 38.8% குறைந்து, 99.5 மி.மீ அளவுதான் இருக்கிறது எனத் தெரிய வருகிறது.

மோசமான பருவமழை இந்தியப் பொருளாதாரத்தை 3 வழிகளில் பாதிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அவை:

முதலாவது, வேளாண் உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண் துறையின் பங்களிப்பு குறையும்.

இரண்டாவது, கிராமங்களில் உள்ள மக்களின் வருமானத்தை பெருமளவு பாதிக்கும். பருவமழை மோசமடையும்போது அல்லது பொய்க்கும்போது வேளாண்மை நடக்காது. வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகள் வருமானம் இன்றி வாடுவார்கள். இது அவர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

மூன்றாவது, பருவமழை பற்றாக்குறை அல்லது மழை பொய்த்ததால் உணவுப் பொருட்கள் உற்பத்தி நிறைவாக இருக்காது. இதனால் தேவைக்கு ஏற்றார்போல் உணவுப் பொருட்கள் சப்ளை சந்தையில் இல்லாதபோது, இயல்பாகவே தேவை காரணியை தூண்டிவிட்டு, விலைவாசியை உயர்த்தும். இதனால் பணவீக்கம் உயர்வதற்கு முக்கியக் காரணியாக பருமழை பற்றாக்குறை தூண்டிவிடும்.

2024-25 கரீப் பருவத்தில் இந்தியாவின் உணவுதானிய உற்பத்தி 357.73 மில்லியன் மெட்ரிக் டன்னாகும். இது முந்தைய ஆண்டின் உற்பத்தியைவிட 25.43 மில்லியன் மெட்ரிக் டன் அதிகமாகும். ஆனால், இந்த ஆண்டில் இதுபோன்ற கூடுதல் உற்பத்தியை எதிர்பார்ப்பது கடினம்.

ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் விடுத்த அறிக்கையில் ‘தெற்கு மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்’ என எச்சரித்துள்ளது.

மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.9% உயர்ந்தது. இது, ஏப்ரலில் 3.5% மட்டுமே இருந்தது. உணவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பணவீக்கம் அதிகரித்தது. வரும் காலங்களில் பருவமழை பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

கிராமப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு, மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்கும். இரு சக்கர வாகன விற்பனை, டிராக்டர் விற்பனை, சரக்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கும். சிறு நகரங்களில் ரியல் எஸ்டேட் விற்பனையும் மந்தமாகும்” என்றார்.

கிரிசில் அமைப்பின் முதன்மை பொருளாதார வல்லுநர் தீப்தி தேஷ்பாண்டே கூறுகையில் “வரலாற்று ரீதியாக பார்த்தால் எல் நினோ இதற்கு முன் வந்த 1972, 1982, 2009, 2015-ம் ஆண்டுகளில் கடும் வறட்சியைத்தான் கொடுத்திருக்கிறது. 2000-ஆம் ஆண்டு இந்திய அளவில் இயல்பை விடக் குறைவான அல்லது பற்றாக்குறையான பருவமழை பதிவான 11 நிகழ்வுகளை ஆய்வு செய்த இந்திய வானிலை மையம், அதில் 6 நிகழ்வுகளை எல் நினோ ஆண்டுகளாக வகைப்படுத்தியது. இதில் 5 நிகழ்வுகளில் மழை பற்றாக்குறையாக இருந்தது.

2009, 2015-ம் ஆண்டுகளில் மோசமான பருவமழையால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டதை உணர்த்துகிறது. இந்த இரு ஆண்டுகளில் தேசிய அளவில் மழைப்பொழிவு குறைந்து, சராசரி நீர்பாசன வசதி என்பது 45% குறைவாகி, வேளாண் உற்பத்தி கடுமையாகப் பாதித்தது. 2009, 2010-ம் ஆண்டுகளில் இந்த நிலை இருந்ததால், பணவீக்கம் இரட்டை இலக்கமாக உயர்ந்தது” எனத் தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அளித்த பேட்டியில் “தேசிய அளவில் 315 மாவட்டங்கள் மோசமான பருவமழையால் பாதிக்கப்படலாம். 12 மாநிலங்களின் 111 மாவட்டங்களில் வேளாண் நீர்பாசனம் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கும். இந்திய வேளாண் நிலங்களில் பெரும்பகுதி மழையை நம்பியும், நிலத்தடி நீரை நம்பியும் இருக்கிறது. இதில் பருவமழை பொய்ப்பு மேலும் அழுத்தத்தை வேளாண் துறைக்கு ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

பருவமழை பொய்த்ததால் இருபோகம் விளையக்கூடிய கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் ஜூன் மாதம் வேளாண் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஆண்டு 130 அடி நீர் இருந்ததால், ஜூன் முதல் வாரத்தில் வேளாண்மைக்கு நீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 110 அடி நீர் மட்டுமே இருப்பதால், குடிநீருக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் வறண்டு கிடக்கிறது.

இதேபோன்று மேட்டூர் அணையில் இருந்தும் ஜூன் 12-ம் தேதி வழக்கமாக திறக்கப்படும் நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களிலும் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இந்த மாவட்டங்களில் குறுகியகாலப் பயிர்களை பயிரிடவும் விவசாயிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் ஸ்கூல் ஆப் டெவலப்மென்ட் பிரிவின் பேராசிரியர் ஆர் ராமகுமார் கூறுகையில் “வறட்சியைத் தாங்குமாறு இந்தியப் பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். இடர்பாடுகளைக் குறைக்கும் வகையில் பயிர்க் காப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆபத்தைக் குறைக்கக் கூடிய கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அதிக முதலீடு தேவை. ஆனால், அது போதுமானதாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

பேரழிவுகளை தாங்க நம்முடைய தயாரிப்பு நிலை, முன்னெச்சரிக்கை நிலை மோசமாக இருக்கிறது. பயிர்க் காப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செலவிட வேண்டும்.

இதில் அதிகமாக செலவிடாதபோது, விவசாயிகளுக்கு எவ்வாறு பலன் சென்று சேரும்? பயிர்க் காப்பீட்டை மட்டுமே நாம் நம்பியிருக்க முடியாது. அரசு வறட்சி நிவாரணத்தையும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...