ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கடைசி உலகக் கோப்பைப் பயணத்தை நிறைவு செய்தார்.
போட்டியின் இரண்டாவது பாதி கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ அடித்த கோல் ஆட்டத்தின் ஒரே கோலாக அமைந்தது. இதன் மூலம் ஸ்பெயின் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. போட்டி முடிந்ததும் டல்லாஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி கைதட்டிய ரொனால்டோ, கண்கலங்கியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
41 வயதான ரொனால்டோ, உலகக் கோப்பை வரலாற்றில் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் பட்டியலில் 30 போட்டிகளுடன் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார். எனினும், தனது புகழ்மிகு கால்பந்து வாழ்க்கையில் உலகக் கோப்பை மட்டுமே அவரால் வெல்ல முடியாத கோப்பையாகவே இருந்து வந்தது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, “இப்படி உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவது வேதனையாக இருக்கிறது. ஆனால் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். எனது மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை.
இது எனது கடைசி உலகக் கோப்பை என்பது உண்மை. ஆனால் தேசிய அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, அமைதியாக யோசித்த பிறகே முடிவு எடுப்பேன்,” என்று தெரிவித்தார்.
சர்வதேச கால்பந்தில் 146 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரராகவும், 233 போட்டிகளில் விளையாடிய வீரராகவும் சாதனை படைத்துள்ள ரொனால்டோ, போர்ச்சுகலுக்காக 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டு முறை யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை பட்டம் மட்டும் அவருக்கு எட்டாத கனவாகவே இருந்து வந்தது.
“நான் போர்ச்சுகலுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளேன். மூன்று முக்கிய பட்டங்களை வென்றுள்ளேன். 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வெற்றி எனக்குப் பொறுத்தவரை உலகக் கோப்பை வெற்றிக்கு இணையானது,” என்று ரொனால்டோ கூறினார்.
உலகக் கோப்பையில் ரொனால்டோவின் சிறந்த சாதனை 2006ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியதுதான். இந்தத் தொடரில் அவர் மூன்று கோல்கள் அடித்தார். மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் ஆறு வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளார். மொத்தமாக 11 உலகக் கோப்பை கோல்களுடன் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்த ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸ், ரொனால்டோவைப் பாராட்டி, “அவர் ஒரு முன்மாதிரி கேப்டன். நான் போர்ச்சுகல் அணிக்கு வந்தபோது அவரைப் பற்றிய பல சந்தேகங்கள் இருந்தன. ஆனால் தனது அர்ப்பணிப்பு, அணிக்காக செய்த உழைப்பு மற்றும் விளையாட்டின் மீதான காதலால் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார். கால்பந்து உலகில் ரொனால்டோ போன்றவர்கள் அரிது. இந்த உலகக் கோப்பையில் அவர் செய்த பங்களிப்புக்கு நாங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்,” என்றார்.
மேலும், போட்டி முழுவதும் ரொனால்டோவை களத்தில் வைத்திருந்த தனது முடிவை நியாயப்படுத்திய மார்ட்டினஸ், “ஒரு கோல் தேவைப்படும் சூழலில் ரொனால்டோவை வெளியேற்ற முடியாது. அவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். கூடுதல் நேரம் சென்றிருந்தால் வேறு மாற்றங்களைப் பற்றி யோசித்திருக்கலாம். ஆனால் 90 நிமிடங்களுக்குள் அணியின் அதிக கோல் அடித்த வீரரை வெளியேற்றுவது சரியான முடிவாக இருக்காது,” என்று கூறினார்.



