இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியான்டோ வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று இந்தோனேசியா சென்றார். தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்த அவரை, அதிபர் பிரபோவோ சுபியான்டோ விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். இந்தோனேசியா வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தொடங்கும் விதமாக அதிபர் மாளிகையான இஸ்தானா மெர்டேகாவில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அதிபர் பிரபோவோ சுபியான்டோ மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் தூதுக்குழு உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்கள் முன்னிலையில் இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் பிரபோவோ சுபியான்டோ வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “மிகுந்த அன்போடும் மரியாதையோடும் இந்தோனேசியாவின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது. இந்த கவுரவம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உரியது. அதிபர் பிரபோவோவுக்கும் இந்தோனேசிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா – இந்தோனேசியா இடையே 2018-ல் தொடங்கப்பட்ட விரிவான கூட்டாண்மை, இப்போது புதிய உயரங்களை எட்டி வருகிறது. வளர்ச்சி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாச்சாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் நாங்கள் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இன்று முதல் இரு நாடுகளின் கூட்டாண்மையின் பொற்காலம் தொடங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் உயர்தர, குறைந்த விலை கொண்ட மருந்துகள் இந்தோனேசிய மக்களுக்கு இன்னும் எளிதாகக் கிடைக்கும். இந்தோனேசியாவில் மருத்துவர்கள் மற்றும் சகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கும் நாங்கள் பங்களிப்போம்.



