கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் “திமுகவால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்க மறுக்கின்றனர். அதனால்தான் இதுபோன்ற ‘குதிரை பேரம்’, ‘கழுதை பேரம்’ போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றன.
விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என சில நாட்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கான பின்னணி என்னவென்பது இப்போது தான் தெரிகிறது.
திமுகவினர் அதற்கான ஒரு தீவிர முயற்சியில் இருக்கிறார்கள் என்பதையே சட்டப்பேரவை உறுப்பினரை பேரம் பேசி வாங்கும் செயல்கள் காட்டுகின்றன. பேர முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ஒரு கட்சியில் இருந்து விலகி வேறொரு கட்சியில் சேர்வது இயல்பானது. தமிழ்நாட்டில், இடதுசாரிகளை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியை நோக்கி மாறுவது என்பது இதற்கு முன்னரும் பலமுறை நடந்துள்ளது.
ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி ஒருவரை வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இதில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்று தரும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து தவெகவில் இணைவது ஓர் ஆரோக்கியமற்ற அரசியல் என்பதை நான் முன்னரே கூறியிருக்கிறேன். இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பகிரங்கமாக வலியுறுத்தி இருந்தேன். தவெக தலைமையிடமும் இதுதொடர்பான கருத்துகளை தெரிவித்திருக்கிறேன்.
அதற்கு அவர்கள், “தாமாக முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு எங்களுடன் இணைகின்றனர். அதை எப்படி நாங்கள் தடுக்க முடியும்” என விளக்கமளித்தனர்.



