எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் இயக்கமாக இருந்த அதிமுகவை, எடப்பாடி பழனிசாமி ஒரு பெரு நிறுவனமாக மாற்றிவிட்டார் என்று தவெக மூத்த தலைவரும் வருவாய்த்துறை அமைச்சருமான செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தவெகவில் இணைய வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றிய செங்கோட்டையன், “துரோகம் எங்கே நடைபெற்று இருக்கிறது என்பதை நீங்கள் காண வேண்டும். திமுகவோடு இணைந்து முதல்வராகலாம் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறபோதுதான் அங்கு எல்லோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு அவர்கள் இங்கே வருகிறார்கள் என்றால், விஜய்யை நம்பினால் மட்டும்தான் நாடு வாழும், நாட்டு மக்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு இங்கே வந்திருக்கிறார்கள். துரோகம் செய்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். நல்லவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறேன். ஏனென்றால், நம்பிக்கை, நாணயம், எதிர்காலம் இங்கே (தவெகவில்) இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் வாக்களித்து வெற்றி பெற்றிருக்கும் இயக்கம் இது. இந்த இயக்கம் எங்காவது தடுமாறுமா என்று எதிர்பார்க்கும் நரியைப் போல திமுகவோடு பேசி, முதல்வராகலாம் என கனவு காண்கிறபோது அதை தகர்த்தெறிகிற சக்தியாகத்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நின்றவர்கள் நாம். இன்றும் எனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறது. இதை அனுமதித்தவர் விஜய். அதுமட்டுமல்ல, “நீங்கள் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி,” என்று சொன்னவர் விஜய். ஆனால், அங்கே எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லையென்றால், அவரை கீழும் மேலுமாகப் பார்ப்பார்கள். நான் தூக்கி எறியப்பட்டபோது என்னை தாங்கிப் பிடித்து இன்று வருவாய்த்துறை அமைச்சராக ஆக்கியவர் விஜய். நம்பியவர்களைக் காக்கிற அரணாகவும், வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார்.
நான் எல்லா தலைவர்களையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். அம்மாவை 21 நாட்கள் சிறைச்சாலையில் அடைத்த சதிகாரர்களோடு கூட்டணி வைப்பதை தகர்த்தெரிய வேண்டுமா வேண்டாமா? தகர்த்தெறிவதற்காகவே இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். துரோகம் இங்கே இல்லை. துரோகம் அங்கேதான் இருக்கிறது. அதை அடையாளம் காட்டியவர்கள் இவர்கள்.
ஏதோ கூட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று மகளிர் அணியை வைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். அங்கே இளைஞர்கள் இல்லை; வயதானவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், தவெகவில்தான் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது, அவருக்கு தேசியக் கொடி பறக்கும் கார் இல்லை; வீடும் இல்லை. கட்சிக்கார்களை வைத்து கம்பெனி நடத்தப் பார்க்கிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக ஒரு இயக்கமாக இருந்தது. இப்போது அதிமுக ஒரு பெருநிறுவனம். அந்த பெரு நிறுவனத்தைவிட்டு இவர்கள் மனித நேயத்தோடு வெளி வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.
விஜய் முதல்வராக பதவியேற்று இன்று 54வது நாள். இதன் கூட்டு எண் 9. எண் 9 என்பது நவக்கிரகங்களைக் குறிக்கும். இங்கே (தவெக) குரு இருக்கிறார். அங்கே (அதிமுக) சனி பிடித்திருக்கிறது. குருவை நம்பி வந்திருக்கிறீர்கள். வெற்றியைக் காணுங்கள்” எனத் தெரிவித்தார்.



