மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று விக்டோரியாவில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு நவ சக்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று, உலக அமைதி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், ‘சீஷெல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியாவில் உள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். பகவான் ஸ்ரீ கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் வளத்தை அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “சீஷெல்ஸ் நாட்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் சீஷெல்ஸ் இந்துக் கோயில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி இன்று அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீஷெல்ஸ் அதிபர் ஃபெட்ரிக் ஹர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டின் 50-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சீஷெல்ஸின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – சீஷெல்ஸ் இடையேயான தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் அந்நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. இந்த சிறப்பான நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் நடைபெறும் தேசிய அணிவகுப்பில் இந்திய ஆயுதப்படைக் குழுக்கள் பங்கேற்றன. இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில், அசாம் ரைபில்ஸ், இந்திய கடற்படை அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றின் வீரர்கள் அடங்கிய இந்தியக் குழு இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.



