கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையை ஈரான் தாக்கியதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கிருந்த ராணுவ நிலைகளை முற்றிலுமாக அழித்தது.
கடந்த 2 நாள்களில் ஈரானின் முக்கிய தலைவர்களான தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லார்ஜானி உள்பட மூவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஈரானின் தெற்கு பார்ஸில் உள்ள எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையான ராஸ் லஃபான் தொழில் நகரம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மிகப்பெரிய சேதமடைந்திருப்பதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
ராஸ் லஃபான் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது அமெரிக்காவுக்கு தெரியாது என்றும், ஈரான் எரிவாயு வயலை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



