No menu items!

சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உயிரியல் ஆய்வு

சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உயிரியல் ஆய்வு

இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) அன்று சீறிப்பாய்ந்தது. 15 நிமிடத்தில், விண்வெளிப் பயணிகளைத் தாங்கிச் செல்லும் ‘க்ரூ டிராகன் C213’ என்னும் விண்கலத்தை விண்வெளியில் இந்த ஏவூர்தி நிலைநிறுத்தும்.

நீண்ட பயணம்: அதன் பின்னர், அந்த விண்கலத்தை இந்தியாவின் ஷுபன்ஷு சுக்லா செலுத்த, அமெரிக்​காவின் பெகி வைட்சன் இந்தப் பயணத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்​பார். இவர்கள் இருவருடன், போலந்தைச் சார்ந்த ஸ்வாவோஸ் உஸ்னைஸ்​கி​யும், ஹங்கேரியைச் சார்ந்த திபோர் கபுவும் பயணிகளாகச் செல்வார்கள். ஏறக்குறைய 28 முதல் 36 மணி நேரப் பயணத்​துக்குப் பிறகு, இந்த விண்கலம் 400 கி.மீ. உயரத்தில் பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடை​யும்.

துறைமுகத்தில் படகைச் சேர்த்துக் கட்டு​வதுபோல, அடுத்த சில மணித்​துளி​களில் சர்வதேச விண்வெளி நிலையத்​துடன் இவர்கள் செல்லும் விண்கலத்தை இணைப்​பார்கள். காற்று வெளியேற முடியாதவாறு உறுதிப்​படுத்த, ரயில் பெட்டிகளுக்கு இடையே இருக்கும் நடந்துசெல்லும் இணைப்புப்​பாதையைப் போல் இந்த இணைப்பு ஏற்படுத்​தப்பட்ட பின்னர், விண்கலத்தில் சென்ற நான்கு பயணிகளும் விண்வெளி நிலையத்​துக்குச் சென்று தற்காலிக​மாகக் குடியேறு​வார்கள்.

விண்வெளி வாழ்க்கை: நாசா விண்வெளிப் பயணிகள் அன்னே மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், ஜானி கிம், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மஸ் விண்வெளிப் பயணிகள் கிரில் பெஸ்கோவ், செர்ஜி ரைஜிகோவ், அலெக்ஸி ஜூப்ரிட்​ஸ்கி, ஜப்பானிய ஜாக்சா விண்வெளிப் பயணி டகுயா ஒனிஷி ஆகியோர் ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களுடன் இந்த நால்வரும் இணைந்து​கொள்​வார்கள். இந்த நால்வரும் குறைந்த​பட்சம் 14 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்​வார்கள். பின்னர், தாங்கள் சென்ற அதே க்ரூ டிராகன் C213 மூலம், ஏறக்குறைய 17 முதல் 20 மணி நேரப் பயணத்​துக்குப் பிறகு பூமிக்குத் திரும்​பு​வார்கள்.

தங்கி​யிருக்கும் நாட்களில், இந்த நால்வர் குழு கிட்டத்தட்ட 60 அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்​ளும். இந்தச் சோதனை​களில் ருசிகர​மானது, விண்வெளியில் தாவரங்களை முளைக்க வைக்கும் ஆய்வு​தான். தார்வாடு வேளாண் அறிவியல் பல்கலைக்​கழகமும் தார்வாடு இந்தியத் தொழில்​நுட்ப நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்தப் பரிசோதனை​யில், பச்சைப்​பயறு, வெந்தயம் போன்ற குறைந்த காலத்தில் முளைவிட்டு வளரும் சாலட் போல உண்ணத்​தகுந்த தாவரங்களை வித்திட்டு சோதனை செய்யப்​போகிறார்கள்.

உருண்டு புரண்டு எப்படி மண்ணில் விழுந்​தா​லும், முளை வளரும்போது வேர் கீழாகவும் தளிர் மேலாக​வும்தான் வளரும். விண்வெளியில் ‘மேல்’, ‘கீழ்’ எதுவும் கிடையாது. எனவேதான் விண்வெளி நிலையத்தில் பயணிகள் எப்போதும் மிதந்தபடி உள்ளனர். கீழ்நோக்கிய ஈர்ப்பு விசை இல்லாத நிலையிலும், வேர் எந்தத் திசை நோக்கிச் செல்லும், முளைத் தளிர் எந்தத் திசை நோக்கிச் செல்லும் என ஆய்வு செய்யப்​படும். நீண்ட கால விண்வெளிப் பயணம் மேற்கொண்​டால், விண்வெளியில் விவசாயம் தேவைப்​படும். விண்வெளி விவசாய அறிவியல் வளர்ச்சிக்கு இந்த ஆய்வுகள் துணைபுரி​யும்.

விண்வெளி ஆய்வுகள்: இதேபோல, விண்வெளிக்கு அரிசி போன்ற ஆறு வகையான உணவுப் பயிர் விதைகளை எடுத்துச் செல்வார்கள். விண்வெளியில் முளைவிட்​டதும், அதைத் திரும்ப எடுத்து​வந்து பூமியில் வளர்ப்​பார்கள். அதன் விதைகளைக் கொண்டு அடுத்த தலைமுறை எனப் பல தலைமுறை விதைகளை உருவாக்கி ஆய்வு செய்வார்கள். தலைமுறை தலைமுறையாக வளர்க்கும் விதைகளை மரபியல் பகுப்​பாய்வு செய்வார்கள். விருப்பமான பண்பு​களைக் காட்டும் பயிர் வகை எது என இனம் காண்பார்கள்.

மேலும், கண்விழியின் இயக்கம் குறித்தும் உடலியல் ஆய்வு​களையும் மேற்கொள்​வார்கள். குறிப்​பிட்ட காட்சித் திரையில் உள்ள புள்ளியில் கண்ணைக் குவித்து வைக்கக் கூறுவார்கள். கண்விழி அங்கும் இங்கும் அலைபா​யும். நாள்பட விண்வெளியில் தங்கி​யிருக்​கும்​போது, கண்விழி இயக்கத்தில் உள்ள மாற்றங்​களைப் பதிவுசெய்து ஆய்வு செய்வார்கள். இதுபோல, சக பயணிகள் உதவியோடு, மொத்தம் ஆறு உயிரியல் ஆய்வுகளை ஷுபன்ஷு சுக்லா மேற்கொள்​வார்.

தனியார் திட்டம்: சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் நம்மிடம் இருந்து பணத்தைத் திரட்டி, பேருந்து, தங்கும் விடுதிகள், உணவு போன்ற​வற்றுக்கு ஏற்பாடு செய்து தருவதுபோல, தாமே விண்வெளிக்குச் செல்லும் அளவுக்கு வளர்ச்சி அடையாத நாடுகளைச் சேர்ந்த பயணிகளை விண்வெளிக்கு அழைத்​துச்​செல்லும் வணிக நிறுவனம்தான் ‘அக்ஸியம் ஸ்பேஸ்’ என்னும் தனியார் நிறுவனம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்​துடன் ஒப்பந்தம் செய்து​கொண்டு, அவர்களின் ஏவூர்தி, விண்கலம் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுசெய்ய நாசாவுடன் ஒப்பந்தம் செய்து​கொண்டு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளை வணிகத் திட்டமாக விண்வெளிக்கு அழைத்துச் செல்வதே அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் பணி. இதுபோன்ற விண்வெளிப் பயணத்தை இந்நிறுவனம் நான்காவது முறையாக ஒருங்​கிணைக்​கிறது.

இதன் அடிப்​படை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஷுபன்ஷு சுக்லா, பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய இருவரும் அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் மேற்பார்​வையில் விண்வெளிப் பயணம் மேற்கொள்​வதற்கான தீவிரப் பயிற்சியை மேற்கொண்​டார்கள். இந்த அனுபவங்கள், ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை இந்தியா மேற்கொள்​ளும் போது உதவும் எனக் கருதப்படுகிறது.

மறு வாய்ப்பு: 1984இல், சோவியத் ஒன்றி​யத்தின் உதவியோடு, ராகேஷ் சர்மா இன்டர்​காஸ்மஸ் பயணமான ‘சோயுஸ் டி-11’ விண்கலத்தில் பறந்து, ‘சல்யுட் 7’ விண்வெளி நிலையத்தை அடைந்​தார். இதன் மூலம், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். ஏழு நாள்கள் 21 மணி நேரம் விண்வெளியில் தங்கி ஆய்வுகள் செய்து, பின்னர் வெற்றிகர​மாகப் பூமிக்கு அவர் திரும்​பி​னார்.

இதேபோல, 1978இல் போலந்து நாட்டைச் சேர்ந்த மிரோஸ்லாவ் ஹெர்மாஷெவ்ஸ்கி, 1980இல் ஹங்கேரியைச் சேர்ந்த பெர்டலான் ஃபர்காஸ் ஆகியோரும் சோவியத் ஒன்றி​யத்தின் உதவியோடு விண்வெளிக்குச் சென்றார்கள். 1990களில் சோவியத் ஒன்றி​யத்தின் சிதைவுக்குப் பிறகு, இதுபோன்ற வாய்ப்பு கிடைக்க​வில்லை. 40 ஆண்டு​களுக்குப் பிறகு, உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் விண்வெளிப் பயணிகளை விண்ணுக்குச் செலுத்த வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் என்கிறது அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம்.

விண்வெளி வணிகம்: தற்போது ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டு​முயற்​சியாக சர்வதேச விண்வெளி நிலையம் செயல்​பட்டு வருகிறது. இதைத் தவிர, சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையமும் செயல்​பட்டு வருகிறது. அதில் தற்போது மூன்று சீனப் பயணிகள் உள்ளனர்.

இவற்றுக்குப் போட்டியாக, தாழ் புவிச் சுற்றுப்​பாதையில் தனியார் விண்வெளி நிலையத்தை உருவாக்க அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் திட்ட​மிட்​டுள்ளது. நாசாவுடன் இணைந்து மேற்கொள்​ளப்​படும் இந்தப் பயணங்கள், போதிய விண்வெளிப் பயண ஒருங்​கிணைப்பு அனுபவத்தைப் பெற உதவும் எனப்படு​கிறது.

கடந்த மே இறுதி​யில், அக்ஸியம் மிஷன் 4 (Ax-4) விண்வெளிக்கு ஏவப்பட இருந்தது. இதுவரை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மொத்தம் நான்கு க்ரூ டிராகன் விண்கலங்​களைத் தயார் செய்து நாசாவுக்கு அளித்​துள்ளது. அந்த வகையில் தயாரிக்​கப்பட்ட விண்கலமே ‘க்ரூ டிராகன்​-C213’.

இதன் தயாரிப்​பின்போது ஏற்பட்ட சில பழுதுகள் காரணமாக, அக்ஸியம் மிஷன் 4 (Ax-4) தள்ளிப்​போனது. இறுதியாக, தற்போது சென்றுள்ளது. இந்​தியக் குடிமகன் ஒருவர் மீண்டும் ​விண்​வெளிக்குச் செல்வதை ஒரு வளரும் ​நா​டாகப் பெரு​மித​மாகவே கருத வேண்​டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...