ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2024-ல் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2023ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவாகும். 1899ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக குழந்தைகள் பிறப்பு 7 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 27 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதில் நான்கில் ஒரு பகுதிதான் தற்போது பிறந்துள்ளது.
அதிகரித்து வரும் வயது மூப்பு மற்றும் சுருங்கி வரும் மக்கள் தொகை ஆகியவை ஜப்பானின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைத்தன்மை குறித்து கவலை அடையச் செய்துள்ளது.
இந்த சூழ்நிலை அமைதியான எமர்ஜென்சி எனத் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திருமண தம்பதிகள் வேலை மற்றும் குடும்பத்தை பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் வேலை செய்யும் இடத்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.