No menu items!

மணல் – ஐ.நா. எச்சரிக்கை!

மணல் – ஐ.நா. எச்சரிக்கை!

உலகம் விரைவில் மற்றொரு நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்று எச்சரித்துள்ளது ஐ.நா சபை. “உலகில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது. மணல் உற்பத்தியைவிட நுகரப்படுவது அதிகமாக உள்ளது. இதனால், இந்த உலகம் விரைவில் மணல் பற்றாக்குறையை சந்திக்கும். இது பல்வேறு சூழல் நெருக்கடிகளை உருவாக்கும்” என்று கூறுகிறது அந்த ஐ.நா அறிக்கை.

ஏன் மணல் அவசியம்? மணல் வளம் குறைந்தால் என்ன நடக்கும்?
பாலைவனம், கடற்கரை, ஆறுகளில் பொதுவாக நாம் மணலை பார்த்திருப்போம். இந்த எல்லா இடங்களிலும் யாராவது வந்து அள்ளிக்கொண்டு போவதற்காக சும்மா கிடக்கவில்லை மணல். சுற்றுச்சூழலை சீராக்கும் வேலையை அந்த மணல்கள் எல்லாம் சத்தமின்றி செய்து கொண்டிருக்கின்றன. அதுவும் பருவநிலை மாற்றத்தால் பூமி புதுப்புது நெருக்கடிகளை சந்திக்கும் இன்றைய நிலையில், இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள மணல் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.

கடற்கரைகளில் மண் அரிப்பை கட்டுப்படுத்துவதுடன், புயல் எழுச்சி, கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் ஏற்படும் தாக்கங்களை தடுக்கும் வேலையை கடற்கரை மணல்கள் செய்கின்றன.

கடற்கரையில் மணல் அளவு குறையும் நிலையில்தான் அலைகளால் நிலங்கள் அரிக்கப்படுகின்றன. கடற்கரை அருகில் உள்ள வீடுகளிலும் விவசாய நிவங்களிலும் கடல்நீர் புகுந்து அவை சேதமடைகின்றன.

கடற்கரையிலும் சரி, ஆற்றங்கரைகளிலும் சரி மனிதர்களையும் சேர்த்து எண்ணற்ற உயிரினங்களின் வாழிடமாகவும் மணல் இருக்கிறது. ஆற்றங்கரை ஓரங்களில் மணலில் உள்ள கரிம பொருட்கள்தான் சிறிய மீன்களின் உணவு. இந்த சிறிய சிறிய மீன்கள்தான் ஆற்றில் வாழும் பெரிய மீன்களுக்கு உணவு, பெரிய மீன்கள் மனிதர்களுக்கு உணவு. எனவே, ஆற்றங்கரை மணல் அள்ளப்பட்டால் இந்த சங்கிலி தொடர் பாதிக்கப்படும்.

ஆற்றில் நிகழும் அதிகப்படியான மணல் நுகர்வு ஆற்றின் படுகை மற்றும் ஆற்றின் போக்கை மாற்றி கரைகளை அரித்து வெள்ளத்திற்கு வழிவகுக்கும். இது நிலத்தடி நீர் பாதிப்பை தவிர நீர்வாழ் விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளின் வாழ்விடத்தையும் அழிக்கும்.

ஓடும் நதி நீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும் ஆற்று மணல். ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இதுதான் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. இந்த மணலை முழுமையாக அகற்றினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். மேலும், மீண்டும் மணல் உருவாகி பழைய நிலைமைக்கு வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மணல் எப்படி உருவாகிறது?

நதிகளின் ஓட்டத்தில் மலைகளில் இருந்து இழுத்து வரப்படும் பாறைகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் மெதுவாக பயணித்து வழியெங்கும் உடைபட்டு மணலாக உருவாகின்றன. இப்படி ஆற்றங்கரை, கடற்பகுதி மற்றும் கடற்கரைகளில் குவிந்திருக்கும் மணல் திட்டுகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதிலும் படிகப் பாறைகள், களிமப் பாறைகள் உருக்குலைந்து மணலாக லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்.

இத்தனை ஆண்டுகளாக உருவாகி வந்த மணல் திட்டுகளைத்தான் ஜேசிபி போன்ற ராட்சச இயந்திரங்கள் கொண்டு நாம் ஒரு சில நாட்களில் சிதைத்துவிடுகிறோம். குறிப்பாக உலகளவில் கான்கிரீட் கட்டுமானம், கண்ணாடிச் சுவர்கள் மற்றும் இவை தொடர்புடைய தொழில்களில் முக்கிய ஒரு மூலப்பொருளாக மணல் இருப்பதால் கடற்கரைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் மணல்தான் முதல் இலக்காகின்றன. பாலைவன மணல் மெல்லியதாக இருப்பதால் அவற்றை யாரும் சுரண்டுவதில்லை.

உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் டன்னுக்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது; இது நமது பூமியை சுற்றி 27 மீட்டர் அகலமும் 27 மீட்டர் உயரமும் கொண்ட சுவரைக் கட்ட போதுமானதாக இருக்கும் என 22 அறிஞர்கள் தயாரித்த ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் மட்டுமே ஆண்டுதோறும் சராசரியாக 1.2 பில்லியன் டன் மணல் அள்ளப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்த மணல் மாஃபியாக்கள் பரந்திருக்கிறார்கள். இவர்களால், “உலகின் முக்கிய நதிகளில் பெரும்பாலானவை அவற்றின் இயற்கை மணலில் 50 முதல் 95% வரை இழந்துவிட்டது. குறிப்பாக மொராக்கோ, இந்தியாவில்தான் மணல் சுரண்டல் மிக அதிகமாக நடக்கிறது” என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்த மணல் சுரண்டலின் தாக்கங்கள் ஏற்கெனவே உணரப்பட்டு விட்டன என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது. “மணல் அள்ளுவதால் ஆறுகளும் கடலோரங்களும் பாதிக்கப்படுவதோடு பல சிறு தீவுகள் முற்றிலுமாக அழிந்து போய்விட்டன. தென் கிழக்கு ஆசியாவின் நீள நதியான மேக்கோங்கில் மணல் அள்ளியதன் காரணமாக கழிமுகம் தாழ்ந்து, வளம் மிக்க வயல்களில் உப்புத் தன்மை ஏறி அந்த பகுதி பயனற்றுப் போய்விட்டது. ஸ்ரீலங்காவின் ஒரு ஆற்றில் அதிகம் மணல் அள்ளியதன் காரணமாக நீரோட்டம் எதிராக மாறி கடல் நீர் ஊருக்குள் புகுந்ததோடு கடல்வாழ் முதலைகளையும் உள்ளே கொண்டுவந்து விட்டது” என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் எப்படி?

கேரளாவில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் மணல் அள்ள அரசு அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது.

அப்படியானால் இவர்கள் எல்லாம் கட்டுமான மணல் தேவைக்கு என்ன செய்வார்கள்? ஆம், இவர்களுக்காகவும் சேர்த்து தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில்தான் வரைமுறையற்று ஆற்று மணல் அள்ளப்படுகிறது.

வடமாநிலங்களுக்கும் மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கும்கூட தமிழக மணல் கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

“நிலமை இன்னும் கை மீறி போய்விடவில்லை; இப்போதே நடவடிக்கை எடுத்தால்கூட மணல் நெருக்கடியைத் தவிர்த்து விடலாம்” என்று கூறும் ஐ.நா. சபை, மணல் பற்றாக்குறையால் ஏற்பட உள்ள நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...