No menu items!

சங்கீத விருதுகள்! இது என்ன நியாயம்?

சங்கீத விருதுகள்! இது என்ன நியாயம்?

கர்நாடக சங்கீத வித்வான்கள் மற்றும் ப்ரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை மியுஸிக் அகடமியின் சங்கீத கலாநிதி விருது பட்டியல் ஒரு வழியாக வெளிவந்து விட்டது. கடந்த இரு வருடங்களாக ‘கொரோனா’ காரணமாக அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டவை இவ்வருடத்திற்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டி.டி.கே. விருது, நிருத்ய கலாநிதி ஆகிய நான்கு வகைகளுக்கும் வருடத்திற்கு தலா மூன்று விருதுகள்! மியுஸிகாலஜிஸ்ட் விருது மட்டும் ஒருவருக்கே!

எல்லாவற்றிலும் பெருமைக்குரிய சங்கீத கலா நிதி விருது வாய்ப்பாட்டு வித்வான் நெய்வேலி ஆர். சந்தான கோபாலன் (2020), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் (2021), வயலின் இசை கலைஞர்களான லால்குடி ஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன், அவரது சகோதரி விஜயலட்சுமி (2022) ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் அனைவருமே தகுதியானவர்கள் என்றாலும், இவர்களைவிட சீனியாரிட்டி அடிப்படையிலும் தகுதி அடிப்படையிலும் சிலர் பல காலமாக காத்திருக்கும்போது என்ன காரணத்திற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது பல புருவங்களை உயர்த்தியுள்ளது.

“நெய்வேலி சந்தான கோபாலன் பெரிய ஞானஸ்தர். ஆனால், அவர் குரல் போய் இருபது வருடம் ஆகிறது. அவரால் மேல் ஸ்தாயி பாடவே முடியாது. மேலே கையை காட்டி விடுவார். மத்திம ஸ்தாயியிலேயே பாடுவார்.

அவர் எப்போதுமே ஒரு Performer கிடையாது. நல்ல டீச்சர். நிறைய மாணவ மாணவிகளை உருவாக்கியவர். அவருக்கு ‘சங்கீத கலா ஆச்சார்யா’ வேண்டுமானால் தரலாம். ஓ.எஸ். தியாகராஜன், கே.ஜே. ஜேசுதாஸ், விஜய் சிவா போன்றவர்கள் கண்ணில் படவில்லையா? நமது சங்கீதத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரிய கூட்டத்திடம் கொண்டு போய் சேர்க்கும் ‘தாஸண்ணா’ வை எப்படி விட முடியும்?” என்று மிகவும் ஆதங்கப்பட்டார். இளம் வயதிலேயே பெரிய உயரங்களை தொட்ட ஒரு பாடகர்.

மறைந்த வயலின் ஜாம்பவான் லால்குடி ஜெயராமனுக்கு சங்கீத காலநிதி விருதை மிகவும் தாமதமாக அகடமி அறிவித்த போது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்பது இசையுலகம் அறிந்த ரகசியம்!

இப்போது அவரது மகனுக்கும் மகளுக்கும் சேர்த்து விருதை அறிவித்துள்ளதும் சர்ச்சைக்கிடமாகயுள்ளது.

“அப்பாவிற்கு உரிய நேரத்தில் தரவில்லை என்ற குற்ற உணர்வில் அவரது பிள்ளைகளுக்கு தருவது என்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை. இருவருமே நடுத்தர வயதினர். அவர்களைவிட மிகவும் சீனியர் வி.வி. சுப்பிரமணியம், நாகை முரளிதரன் போன்ற வயலின் கலைஞர்கள் உள்ளனர். வி.வி. சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்பலட்சுமிக்கு பல காலம் வாசித்தவர்” என்று வயலின் வித்வான்கள் சிலர் ஒரே குரலில் வருத்தத்துடன் நம்மிடம் சொன்னார்கள்.

தாள வாத்தியத்தைப் பொறுத்தவரை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தவில் மேதை ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் பெயர் சங்கீத கலாநிதி பட்டியலில் இருந்ததாக பரபரப்பாக சொல்லப்பட்டது! அப்புறம் என்ன ஆனதோ தெரியவில்லை.

ஏ.கே.பி., மிருதங்க வித்வான் குருவாயூர் துரை போன்ற சீனியர்களை இந்த வருடமும் ஓரங்கட்டியுள்ளது அகடமி. 2020 ஆண்டுக்கான சங்கீத கலா ஆச்சார்யாவிற்கு புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கீழ்வேளூர் என்.ஜி. கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. நல்ல விஷயம். அதேபோல் நிருத்ய கலாநிதி நாட்டிய விருது நர்த்தகி நடராஜுக்கு கிடைத்திருப்பதும்!

ஆக அகடமியின் விருது பட்டியலை கவனிக்கையில் சீனியாரிட்டியா, திறமையா, விஸ்வாசமா, லாபியா எதன் அடிப்படையில் தேர்வாகிறது என்பது புரியாத புதிர்தான்!

2 COMMENTS

  1. கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
    கடவுள் கொடுக்க தமதிப்பதை யாலும் விரைந்து கொடுக்கவும் முடியாது.
    எல்லாம் நன்மைககே.
    வாழ்க வளமுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...