No menu items!

ஆஸ்கர் விருதை கொண்டுவருமா ‘2018’

ஆஸ்கர் விருதை கொண்டுவருமா ‘2018’

ராஜமௌலி இயக்கிய ‘RRR’ திரைப்படம் ஆஸ்கரில் விருதுகளை வென்றதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்திய படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருதுகளில் இந்திய திரைப்படங்கள் பெருமளவு சாதிக்கும் என்ற என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பிரபல மலையாள படமான ‘2018’ அனுப்பப்பட்டுள்ளது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ள ‘2018’ திரைப்படத்தில் டொவினோ தாமஸ், சீனிவாசன், குஞ்சாக்கோ கோபன், நரேன், ஆசிப் அலி உள்ளிட்ட பல பிரலபல மலையாள நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த ஆண்டில் கேரளாவில் வெளியான திரைப்படங்களில் அதிகமாக வசூல் செய்த 2-வது திரைப்படம் (முதல் திரைப்படம் ‘ரோமாஞ்சம்’) என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது. இப்படம் தியேட்டர்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

தங்களுக்கு நேர்ந்த துயரங்களை திரைப்படமாக எடுத்து ஆவணப்படுத்துவதில் கேரளாவைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் முன்னணியில் நிற்கிறார்கள். நிஃபா வைரஸ், பணமதிப்பிழப்பு, நிலச்சரிவு என்று கேரளாவை பாதித்த பல விஷயங்கள், ‘வைரஸ்’, ‘புத்தன் பணம்’, ‘மலையன்குஞ்ஞு’ என படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவில் பெய்த பெருமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான மலையாளம் படம்தான் 2018 everyone is a hero (2018 – எவரிவன் ஈஸ் அ ஹீரோ).

இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரிய கதையெல்லாம் இல்லை. ராணுவ வேலை பிடிக்காமல் ஊருக்கு ஓடிவரும் டொவினோ தாமஸ், அப்பா மற்றும் அண்ணனுடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட விரும்பாமல் மாடலாக விரும்பும் ஆசிப் அலி, அவரது அண்ணன் நரேன், கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை வெள்ளத்தில் இழந்த குஞ்சாக்கோ கோபன் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்வுகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாறுகிறார்கள் என்பதுதான் கதை. முக்கிய கதையில் நுழைவதற்கு முன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுமார் 45 நிமிடங்களில் அறிமுகப்படுத்துகிறார்கள். அதன் பிறகு கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

‘சேவ் கேரளா’ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் அரசு அதிகாரிகள் விட்ட அழைப்பை ஏற்று உதவ குவியும் இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற ராணுவம் இன்னும் வரவில்லையே என்று முதல்வர் கவலைப்படும்போது நாங்கள் இருக்கிறோம் என்று படகுகளுடன் வந்து நிற்கும் மீனவர்கள் என்று நாம் இந்தியர்கள் என நிமிர்ந்து உட்காரவைக்கும் பல காட்சிகள் இந்த பட்த்தின் சிறப்பம்சம்.

சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

துன்பமான சம்பவத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், வன்முறைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் மழையை மட்டுமே வில்லனாக்கி, மக்கள் அனைவரையும் ஹீரோவாக்கி அழகுபார்க்கிறது ‘2018’ திரைப்படம்.

இப்படம் ஆஸ்கரில் இந்தியாவை ஹீரோவாக்கும் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...