No menu items!

கணவரை கார் ஏற்றி கொலை செய்த  மனைவி!சென்னை பயங்கரம்

கணவரை கார் ஏற்றி கொலை செய்த  மனைவி!சென்னை பயங்கரம்

திருமணத்தைக் கடந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, திரைப்பட பாணியில் காதலுடன் சேர்ந்து காரை ஏற்றிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 37). இவர் பழைய இரும்புப் பொருள், வீட்டு உபயோகப் பொருள் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் தொழிலை செய்து வந்தார். பிரேம்குமாருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ஷன்பிரியா (வயது 30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கீர்த்தனா(12), ஓவியா (7) என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கீர்த்தனா அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பும் இளையமகள் ஓவியா அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புத்தாண்டு அன்று (1-1-2024) காலை பிரேம்குமார் அயனாவரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் நியூ ஆவடி ரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே வரும் போது பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே காரை விரட்டிச் சென்றனர். இதனால் அந்த காரை அங்கேயே விட்டு விட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேம்குமார் உடலைக் கைப்பற்றி கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே பிரேம்குமாரின் சகோதரி சங்கீதா தனது சகோதரர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் அயனாவரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விபத்து தொடர்பாக பிரேம்குமாரின் மனைவி பிரியாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அதற்குக் காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரியா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பிரியாவிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அயனாவரம் செட்டித் தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 30) என்பவருக்கும் பிரியாவுக்கும் இடையே பல மாதங்களாக தகாத உறவு இருந்தது தெரியவந்தது.

இதையறிந்த பிரேம்குமார், பிரியாவை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா, தனது ஆண் நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி பிரியா, ஹரிகிருஷ்ணன் இருவரும் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளனர். சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது நண்பரான ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சரத்குமார் (வயது 27 ) என்பவருடன் காரில் பிரேம்குமாரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். நியூ ஆவடி சாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே வரும் போது காரை ஏற்றி பிரேம்குமாரை கொலை செய்து விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

ஏற்கெனவே இருமுறை பிரியா தனது கணவர் பிரேம்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றதும் மூன்றாவது முறையாக திட்டமிட்டப்படி காரை ஏற்றி கொலை செய்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான ஹரி கிருஷ்ணனை, செல்போன் எண்ணை வைத்து  இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். பிரியா, ஹரிகிருஷ்ணன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரத்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...