No menu items!

சிங்கப்பூர் அதிபர் ஆவாரா தமிழர்?

சிங்கப்பூர் அதிபர் ஆவாரா தமிழர்?

உலகளவில் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓ பதவி உட்பட, பல்வேறு துறைகளிலும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது நமக்கு தெரிந்த தகவல். இதுபோல், இப்போது பல நாடுகளில் அரசியலிலும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் இருக்கும் விவேக் ராமசாமியை “மிகவும் நம்பிக்கைகுரிய வேட்பாளர்” என எலான் மஸ்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இப்படியென்றால் சிங்கப்பூரில் அடுத்த அதிபராக ஒரு தமிழர் தேர்வு செய்யப்படுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது!

யார் அவர்?

சிங்கப்பூரில் அதிபரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதன்படி தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் பதவி காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் சிங்கப்பூரில் தொடங்கிவிட்டது. இதற்கான தேர்தல் நாளை மறுதினம் (01-09-23) நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் (30-08-23) நிறைவுபெறுகிறது.

சிங்கப்பூர் அதிபரை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் 1991-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபெறும் மூன்றாவது தேர்தல் இது. இந்த தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், தற்போதைய அதிபரான ஹலிமா யாகூப் போட்டியிடவில்லை. சிங்கப்பூர் முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (வயது 66), காக் சோங் (75), டான் கின் லியான் (75) ஆகிய மூவர் களத்தில் இருக்கின்றனர்.

பெயர்களை படித்ததுமே உறுதி செய்திருப்பீர்கள். ஆன், தர்மன் சண்முகரத்னம் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். மற்ற இருவரும் சீன வம்சாவளியினர்.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா, யுராஷியன் வம்சாவளியினர். ஆனாலும், மூவரில் தர்மன் சண்முகரத்னத்துக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சீன இனத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும், சீனர்களில் பெரும்பகுதியினர் தர்மன் சண்முகரத்னத்தையே விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் என்பதால், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக இவர் தேர்வுசெய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இரு வேட்பாளர்களும் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.

மேலும், 2016ஆம் ஆண்டிலேயே யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சரி, யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

தர்மன் சண்முகரத்னம், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்தத் தொகுதியிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தனது 22 ஆண்டுகள் கால அரசியல் பயணத்தில் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர்.

இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. ஜப்பான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

2019இல் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைகள் வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதால், தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருப்பதோடு, மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகியிருக்கிறார். அதோடு, தான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளையும் துறந்திருக்கிறார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூரிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான ஒரு பிரசாரத்தை எதிர்நோக்குவோம். அது நம்மைப் பிரிக்காது. நியாயமான, அதிக இரக்கமுள்ள மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நான் நம்புகிறேன். என் வாழ்க்கை அதற்கே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் நாம் எதிர்கொள்ளும் கடினமான மற்றும் சவாலான எதிர்காலம் இதுவாக இருக்கும். அதற்காக தேசிய, சர்வதேச அளவில் எனது அனைத்து அனுபவங்களையும், திறன்களையும் வழங்குவதற்காக இந்தப் போட்டியில் நுழைந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மற்ற இரு வேட்பாளர்களில், இங் கொக் சொங், 1970ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் நிதியமைச்சக முதலீட்டு ஆய்வாளராகப் பணியைத் தொடங்கினார். 2007ஆம் ஆண்டில் ஜிஐசி என்றழைக்கப்படும் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றார். 2013ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அந்தப் பதவியை வகித்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர் இவர்.

மற்றொரு வேட்பாளரான டான் கின் லியான் சுமார் 30 ஆண்டுகள் என்டியுசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவிவகித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய டான் கின் லியான், “அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தான் எனக்கு ஒரு கடுமையான போட்டியாளராக விளங்குவார். தர்மன் சண்முகரத்னம் போன்ற மூத்த அதிகாரிகளுடன் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம்தான் வெல்வார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

பெஸ்ட் ஆஃப் லக் சார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...