No menu items!

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ

சொத்து தகராறில் மகனே தந்தையை கொலைவெறியுடன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த குழந்தை வேலு என்பவர்தான் வைரல் வீடியோவில் மகனால் தாக்கப்பட்ட தந்தை. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் சக்திவேல் தான் தந்தையை கொடூரமாக தாக்கியவர்.

ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலையை குழந்தை வேலு நடத்தி வந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ்மில் ஒன்றும் இவருக்கு இருந்துள்ளது.

இதில் ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலையை கடந்த ஐந்து வருடங்களாக, சக்திவேல் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் தொழில் ரீதியாக அதிக கடனை சக்திவேல் வாங்கியுள்ளார். மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலை ஏற்பட்டு, இந்த விஷயம் குழந்தை வேலுக்கு தெரியவரவே, மகனுக்கும் தந்தைக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

கடன் பிரச்சினையில் இருந்த சக்திவேல் ஒரு கட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்த ரைஸ் மில்லையும் தன்வசம் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால், அதில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித ஷேரும் குழந்தை வேலுவின் மாமனார் சுந்தரத்துக்கு 50 சதவிகித ஷேரும் இருந்துள்ளது. வங்கி கணக்குகள் முழுவதும் குழந்தைவேலுவின் பெயரில் இருந்ததால், சக்திவேலால் தான் நினைத்ததை செய்ய முடியவில்லை. இதனால், தந்தை மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 16.02.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, அங்கு வந்த சக்திவேல், தந்தை குழந்தைவேலுவை இரண்டு கைகளால் முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்துள்ளனர். ஆனால், அவர் கடைசி வரையிலும் மீண்டும் மீண்டும் வந்து குழந்தைவேலுவை கொலைவெறி நோக்கத்துடன் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி ஒருபக்கம் விசாரணை நடத்தி வந்துள்ளார். ஆனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக, “சிகிச்சை முடிந்து வந்த குழந்தைவேலு தனக்கும் தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக்கொள்வதாக எழுதிக் கொடுத்தார்” என்று கூறப்படுகிறது.

ஆனால், சிகிச்சை முடிந்து வந்த இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

காட்டிக்கொடுத்த வைரல் வீடியோ

இந்நிலையில் குழந்தைவேலுவை 16.02.2024 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தந்தையை இப்படி கொடூரமாக தாக்கிய மகன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்த நிலையில், இப்போது கைகளத்தூர் காவல்துறையினர் சக்திவேலினை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெரம்பலூர் மாவட்ட  எஸ்.பி. சியாமளாதேவி, “ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி என்பவர் சரியாக விசாரிக்காததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும், இந்த வழக்கை மறு விசாரணை செய்யவும் மருத்துவ பரிசோதனையை மீண்டும் ஒருமுறை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

தற்போது  வெளிவந்த இந்த வீடியோ சம்பவத்தன்று கிடைத்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருப்போம். சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த வீடியோ பரவ தொடங்கியதும் சக்திவேல் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...