No menu items!

விஷம் குடித்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி: சீட் கிடைக்காத விரக்தியா?

விஷம் குடித்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி: சீட் கிடைக்காத விரக்தியா?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மிக நெருக்கமானவரும் ஈரோடு மக்களவைத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான கணேசமூர்த்தி, திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் தளத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. கணேசமூர்த்தி ஏன் விஷயம் குடித்தார்?

யார் இந்த கணேசமூர்த்தி?

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக வைத்துள்ள, ஈரோட்டைச் சேர்ந்தவரான கணேசமூர்த்தி (வயது 77), இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டம் படித்துள்ளவர். தனது அரசியல் வாழ்வை திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளராக தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, 1984இல் ஈரோடு மாவட்ட திமுக செயலாளரானார். 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1993ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது, அவரது தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் பதவியையும் பொருட்படுத்தாமல் திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவில் இணைந்தார். அன்று முதலே மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் வைகோவுக்கு பக்கபலமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறார். தீவிர ஈழ ஆதரவாளரான கணேசமூர்த்தி, பொடா வழக்கிலும் சிறை சென்றுள்ளார்.

1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். அதன்பின், 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 மக்களவை தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு இடம்தான் ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு இடத்தை கணேசமூர்த்திக்கு தான் வைகோ கொடுத்தார். அந்தளவு வைகோவுக்கு மிக நெருக்கமாக இருந்தார் கணேசமூர்த்தி. 2019 தேர்தலில் வெற்றிபெற்று தற்போது எம்பியாக உள்ளார்.

ஒரு முறை எம்.எல்.ஏ, மூன்று முறை எம்.பி.யாக இருந்துள்ள கணேசமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் மதிமுகவிற்கென தனிச் செல்வாக்கை உருவாக்கியிருந்தார். திமுகவில் இருந்து மதிமுக வந்த பல முன்னணி தலைவர்கள் மதிமுகவில் இருந்து வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்தபோதும் கூட கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வருகிறார் கணேசமூர்த்தி.

இந்நிலையில், இன்று (மார்ச் 24) காலையில் கணேசமூர்த்தி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்குப் பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணேசமூர்த்தி ஏன் விஷம் குடித்தார்?

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள், “மதிமுகவில் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி, 2019 தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவின்படி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இதனால், கணேசமூர்த்தி திமுக உறுப்பினராக மாறிவிட்டதால், அவரிடம் இருந்த மதிமுக பொருளாளர் பதவி திரும்ப பெறப்பட்டு செந்திலதிபனிடம் வழங்கப்பட்டது. பொருளாளர் பதவி இல்லாத நிலையில், இந்த முறையும் மதிமுக சார்பில் போட்டியிட தனக்குதான் வைகோ வாய்ப்பு வழங்குவார் என்று கணேசமூர்த்தி எதிர்பார்த்திருந்தார்.

இதனிடையே, சென்னிமலை முருகன் கோயில் தொடர்பாக இரு மதத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கணேசமூர்த்தி கருத்து தெரிவிக்காத நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. தன்னிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறுமாறு வைகோவிடம் கணேசமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். அதற்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கணேசமூர்த்தியிடம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வைகோ சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வைகோவிடம் கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் இந்த முறை மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தன்னை தேர்தல் பணியாற்றவாவது வைகோ அழைப்பார் என கணேசமூர்த்தி எதிர்பார்த்து இருந்தார். ஆனால், திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கும் மதிமுக தலைமையிடம் இருந்து கணேசமூர்த்திக்கு அழைப்பு வரவில்லை. `வைகோபோல எனக்கும் துரை வைகோ மகன்தானே… என்னை ஏன்? திருச்சி மாநாட்டுக்கு அழைக்கவில்லை’ என சகாக்களிடம் வேதனை தெரிவித்துள்ளார், கணேசமூர்த்தி.

இதனிடையே, கடந்த சில நாள்களாக ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ் அறிமுகக் கூட்டத்தில் கணேசமூர்த்தி கலந்துகொண்டார். ஆனாலும், மதிமுகவில் தனது முக்கியத்துவம் குறைவதுடன், வைகோவும் சரியாக தன்னிடம் பேசுவதில்லை என்ற மன வருத்தத்தில் இருந்த கணேசமூர்த்தி, இந்த முடிவை எடுத்திருக்கலாம்” என்கிறார்கள் கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.

வைகோ என்ன சொல்கிறார்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவையில் கணேசமூர்த்தி சிகிச்சை பெற்றுவரும் கே எம் சி ஹெச் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “நான் உயிராக நேசித்த, கண்ணின் மணியாக திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேச மூர்த்தி, தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தொடர்பில் உள்ளார். மாணவர் அணியிலிருந்த அவர், சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுக்கலாம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு நடந்தது. 99% அவரை (துரை வைகோ) நிறுத்த வேண்டும் என்றனர்.

சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன்.

இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். இன்று காலை 10 நிமிடம் மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதான அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர்.

அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார். அங்கு வந்த கபிலனிடம் ‘இதை குடித்துவிட்டேன், நான் போய் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்ய வேண்டிய முதன்மையான முதலுதவிகள் அனைத்தும் செய்துள்ளனர்.

தலைமை மருத்துவ நிபுணரிடம் கணேச மூர்த்தியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். “முதலுதவி சரியாக செய்ததால் தான் நாங்கள் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். ஆதலால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்கோவும் கொடுக்கப்படுகிறது என்றார்” என்று வைகோ தெரிவித்தார்.

கணேசமூர்த்தியை நேரில் சந்தித்த துரை வைகோ

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கணேசமூர்த்தியை வைகோ சந்திக்க சென்றுபோது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் உடன் சென்றுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும் அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் பதிலளித்தார்.

அப்போது, ‘‘கணேசமூர்த்தி உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’’ என்றார்.

தொடர்ந்து, கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், “கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை” என்று துரை வைகோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...