No menu items!

புத்தகம் படிப்போம்: அமெரிக்காவைத் தேடி ஒரு பயணம் – ஜான் ஸ்டெய்ன் பெக்

புத்தகம் படிப்போம்: அமெரிக்காவைத் தேடி ஒரு பயணம் – ஜான் ஸ்டெய்ன் பெக்

ஜெகநாத் நடராஜன்

ஜான் ஸ்டெயின் பெக் (1902-1968) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை என்று 27 புத்தகங்களை எழுதியவர். நோபல், புலிட்ஸர் பரிசுகளைப் பெற்றவர். 1960ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தன் மனைவியின் ‘பூடில்’ (Poodle) ரக நாய் சார்லியுடன் பயணம் செய்து, அமெரிக்க மக்களின் வாழ்வு, அவற்றின் தரம், அவர்களின் மனநிலை குறித்து தன் தனிப்பட்ட ஆர்வத்தால் ஜான் ஸ்டெயின் பெக் எழுதிய நூல் ‘Travels with Charley In Search of America’.

இந்த நூல் 1962ஆம் ஆண்டு முதன்முதலில் வெளிவந்தது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஜான் ஸ்டெயின் பெக்கின் பயணம், அமெரிக்கர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை என்ன என்பதை அறிந்துகொள்ளும் விதமாகவே இருந்தது. இந்த பயணத்திற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பயண வண்டிக்கு ‘ரோசினான்ட்’ (Rocinante) என்று பெயர் சூட்டினார். அது புகழ்பெற்ற ‘மிகெல் டி செர்வாண்டிஸ்’ (Miguel de Cervantes) நாவலில் முக்கிய கதாபாத்திரமான ‘டான் குவிக்சாட்’ பயணம் செய்த குதிரையின் பெயர்.

நியூயார்க் மாகாணத்தின் லாங் ஐலாண்டில் தொடங்கிய ஸ்டெய்ன் பெக் பயணம் அமெரிக்காவின் எல்லைப் பகுதிகளிலேயே தொடர்ந்தது. வடமேற்கு பசிபிக், அவருக்குப் பிரியமான கலிஃபோர்னியாவின் சலினாஸ் பள்ளத்தாக்கு (Salinas Valley) வழியாக தென் பிராந்தியமான டெக்ஸாஸ் வந்தார். மீண்டும் நியூயார்க் செல்லும் போது அவரது பயணத்தில் 10,000 மைல்களைக் கடந்திருந்தார்.

பின்னாட்களில், இந்தப் பயணம் குறித்து அவரது குடும்பத்தினர் சொல்லிய விஷயங்கள் அதிர்ச்சிகரமாக இருந்தது. “இதய நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டெய்ன் பெக் எந்த நேரத்திலும் மரணம் தன் இருப்பை முடித்துக்கொள்ளும் என்று உணர்ந்துகொண்டார். இதனால், தன் நாட்டை, தான் நேசித்த தன் நாட்டு மனிதர்களைக் கடைசியாகக் காணும் பேராவலிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டார்” என்பதே அது.

தேசமெங்கும் அலைந்து திரிவதில் தனக்கிருந்த ஆர்வம் குறித்து இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஸ்டெய்ன் பெக் குறிப்பிடுகிறார். தன் பயண வண்டியில் கடைசி நேரத்தில் தன் மனைவியின் 10 வயது நாய் சார்லியையும் இணைத்துக்கொண்டார். தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள அது உதவியது என்கிறார். அமெரிக்காவில் தொழிலாளர் நாள் (Labor Day) என்று அழைக்கப்படும் செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமைக்குப் பின்னால் லாங் ஐலண்டின் சாக் துறைமுகத்திலிருந்து தன் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார், ஸ்டெய்ன் பெக். அப்போது டோனா என்ற புயல் லாங் ஐலண்டை கொடூரமாக தாக்கியது. அவரது படகு காப்பாற்றப்பட்டது. ஆனாலும், தன் பயணத்திற்காக கொண்டிருந்த துணிவையும் தன்னம்பிக்கையையும் ஸ்டெய்ன் பெக் இழக்கவில்லை.

பெரிய படகில் லாங் ஐலண்டிலிருந்து ‘நியூ இங்லாண்ட்’ என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட்டுக்கு செல்லும் வழியில், அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருப்பதைக் கண்டார். அவற்றில் பெரும்பாலானவைகள் அணுசக்திக் கப்பல்கள். மாலுமிகளிடம் பேச்சுக் கொடுத்த அவர், அவர்கள், எதிர்காலத்தின் எல்லா நவீன வசதிகளும் தங்களிடமிருக்கும் பெருமையில் இருப்பதைக் கண்டார்.

நவீன யுகத்தின் வேகத்தையும், அவற்றின் மாற்றத்தையும், அவற்றின் நிலையின்மையையும், அரசியல் மாற்றங்களையும் பற்றி குறிப்பிட்ட அவர் அமெரிக்க பெரு நகரங்களின் வீணடிப்பு மனநிலையை இந்த நூலில் குறை சொல்கிறார். ‘அதன் விளைவுதான் நம் வாழ்வு எல்லா தளங்களிலும் இயற்கைக்கு மாறான ஒருவித பேக்கேஜ் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது’ என்கிறார்.

அதன்பின் ஸ்டெய்ன் பெக் ‘நியூ இங்லாண்ட்’ விவசாயி ஒருவருடன் பேசினார். இருவருக்குமே நிரந்தரமற்ற எதிர்காலம் பற்றிய பயம் இருந்தது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. நிக்ஸனுக்கும் கென்னடிக்கும் இடையே நிகழ்ந்த தேர்தல் போட்டி பற்றியும் இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.

பின்னர் அவர் வடக்கே ‘மேய்ன்’ (Maine) நோக்கி பயணப்பட்டார். குளிர்காலத்தில் பூட்டப்பட்டு, கோடைகாலத்தில் மட்டும் திறந்திருக்கும் கடைகள் அங்கு திறந்திருப்பதைக் கண்டார். அவற்றில் பெரும்பான்மையானவை கலைப் பொருட்கள் விற்கும் கடைகள். சில பொருட்களை வாங்க நினைக்கிறார். அப்போது, அவர் வீட்டில் இது போன்று வாங்கிக் குவித்த பொருட்கள் அறை முழுதும் நிரம்பியிருப்பது ஞாபகம் வருகிறது.

‘மேய்ன்’ நகரிலுள்ள Deer Isle சென்றார். எலிஸ்பெத் ஓடிஸ் என்ற அவரது ஏஜண்ட் ஒவ்வொரு கோடைகாலத்திலும் செல்லும் இடம் அது. அது பற்றி அவர் அடிக்கடி பேசவும் கேட்டிருந்தார். ஆனால், ஒரு முறைகூட ஏன் அந்த இடம் தனக்கு பிடித்தமான இடமாக இருக்கிறது என்று அவரால சரியாக சொல்ல முடியவில்லை. Deer Isle–இல் ஒரு வீட்டில் இரவுத் தங்கலுக்கு ஏற்பாடாகியிருந்தது. சுத்தமான கடல் நீரோட்டத்தில் வளர்க்கபட்ட லாப்ஸ்டர் உணவு அவருக்கு கிடைத்தது.

அதன் பின் வடக்கு மேய்ன். அங்கு பிரெஞ்ச் மொழி பேசும், உருளைக்கிழங்கு எடுக்கும் குடியேறிகளோடு இரவு தங்கினார். அவர்களின் வாழ்வையும் துக்கங்களையும் சந்தோஷங்களையும் அவர் தன் ‘The Grapes of Wrath’ நாவலில் பதிவு செய்திருந்தார்.

பாங்கர் (Bangor) என்ற ஊருக்கு வெளியே இருந்த சிறிய ரெஸ்டாரெண்ட் ஒன்றில் உணவருந்த நிற்கும்போது, அடுத்தவர்களின் வாழ்வு பற்றிய கசப்பான எண்ணங்கள், நம் சொந்த வாழ்வின் நல்ல தருணங்களைப் பாதிக்கவல்லது என்று ஸ்டெய்ன் பெக்குக்கு தோன்றுகிறது.

அதன் பின் நியூயார்க், நாயகரா, பஃபல்லோ செல்ல திட்டமிட்டார். நியூயார்க்கின் மேற்குப் பகுதி வழியாக பென்சில்வேனியா, ஓஹியோ, இண்டியாணா பகுதிகள் வழியே செல்ல வேண்டியிருந்தது. நயகராவிலிருந்து கனடாவின் எல்லையைக் கடந்து டெட்ராய்ட் நகருக்கு வரத் திட்டமிட்டார். அப்படி வந்தால் சீக்கிரத்தில் சென்றுவிடலாம் என்பது அவர் திட்டம். ஆனால், அவரது நாய்க்கு நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட்டிருக்கும் சான்றிதழ்கள் இல்லாததால் அமெரிக்க எல்லை அதிகாரிகளுடன் அவர் விவாதம் செய்ய வேண்டியதாயிற்று. மனிதர்களை சாதாரணமாக மதிக்கும் அரசாங்கத்தின் நடைமுறைகளை அவர் குறை சொன்னார். அதிகாரிகளுக்கு தேவை ஒரு சான்றிதழ், அதில் ஒரு முத்திரை. உண்மை எப்படியிருந்தாலும் பரவாயில்லையா என்று விவாதித்தார்.

தொடர்ந்த பயணத்தில் எங்கு சென்றாலும் யாரைப் பார்த்தாலும் வெவ்வேறு குணங்களில், வெவ்வேறு நம்பிக்கைகளில் இருப்பதைக் காண்கிறார், ஸ்டெய்ன் பெக். ஒரு மனிதரோடு இன்னொரு மனிதர் நட்புறவு கொள்வதிலும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமான மனநிலையிலிருந்தது அவருக்கு ஆச்சர்யம் தந்தது.

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதிகளில் அவர் பிரயாணம் செய்த போது மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதையும் சிறு ஊர்கள் நகரங்களாகிக் கொண்டிருப்பதையும் கண்டார். சாலைகளில் போக்குவரத்து அதிகரித்திருப்பதையும் வேகம் அவசரம் அதிகமாகியிருப்பதையும், பிறந்த ஊர்களை விட்டு தெர்ந்தெடுத்த ஊர்களுக்கு செல்லும் மனநிலை அங்குள்ள மனிதர்களிடம் அதிகரித்திருப்பதையும் கண்டார்.

மத்திய மேற்கு நகரங்களில் புதிதாக வருபவர்கள் மூலம் புதிதாக ஒரு விஷயத்தை, புதிதான ஒரு கண்டுபிடிப்பை, புதிதான எதாவது ஒன்றை அறியும் முயற்சியில் மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் வாழ்வு அப்படி பயணியாக வந்த எதோ ஒருவர் மூலமாக மேம்பட்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஒரு பயணியாக அந்த மனநிலைகள் அவருக்கு ஆச்சர்யம் தந்தது.

ஆனால், ‘நியூ இங்கிலாண்ட்’ பகுதிகளிலுள்ள மக்கள் புதிய மனிதனின் வருகையை ஆர்வமின்றிப் பார்த்தார்கள். அவனோடு பேசவோ பழகவோ விரும்பவில்லை. அவனாக வந்து பேசட்டும் என்று காத்திருந்தார்கள்.

தொடர்ந்த பயணத்தில் தானியங்கி சூப், காபி இயந்திரங்கள் புழங்கத் தொடங்கியிருப்பதையும் வாழ்வை இயந்திரங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதையும் கண்டார். அவசரகதியில், உடனடி நிவாரணம் வேண்டும் வாழ்வை அமெரிக்க மனங்கள் விரும்பத் தொடங்கியிருப்பது அவருக்கு கவலை தந்தது.

அவர் விஸ்கான்சின், மின்சோட்டா வழியாக வடக்கு டகோட்டா வந்தார். அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘செயின்ட் பால்’ நகரின் நெடுஞ்சாலையான ‘ஹைவே 10’இல் பயணம் செய்தார். அமெரிக்கா மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் தப்பிக்கும் மார்க்கமாக அந்த விரைவுச் சாலை திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சாலையை பயத்தால் திட்டமிடப்பட்ட சாலை என்று அழைத்தார், ஸ்டெய்ன் பெக். அது மட்டுமில்லாமல் பல தளங்களில் அமெரிக்க வாழ்வை பயம் கவ்வியிருப்பதை, எது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத பயமொன்றிலிருந்து தப்ப அமெரிக்கர்கள் விரைந்து கொண்டிருப்பதாகவே அவர் உணர்ந்தார்.

செயின்ட் பால்  நகரில் இருந்து Sauk Centre சென்றார். அது எழுத்தாளர் சின்க்ளேர் லூயிஸ் (Sinclair Lewis) பிறந்த ஊர். அமெரிக்க எழுத்தாளர்களில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். ஆனால், அந்த நகரில் ஸ்டெய்ன் பெக் சந்தித்த மனிதர்கள் சின்க்ளேர் லூயிஸ் யார் என்பதையே அறிந்திருக்கவில்லை என்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

உணவு நேரங்களில் அவர் சந்தித்த மனிதர்கள், அமெரிக்க மக்கள் தங்கள் கலாச்சாரம் பற்றிய நுண்ணுணர்வு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வையே அவருக்குத் தந்தார்கள். ‘சுவைக்கு விலை கொடுப்பதை விட அமெரிக்கர்கள் சுத்தத்திற்கு விலை கொடுக்க வேண்டும்; சுகாதாரக் கேடுகளால்தான் பல அமெரிக்கர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார், ஸ்டெய்ன் பெக்.

அமெரிக்கர்கள் சொகுசாக வாழ விரும்புவதும் இந்தப் பயணத்தில் ஸ்டெய்ன் பெக் உணர்ந்த ஒன்றாக இருந்தது. “பெரு முயற்சிகளிலோ புரட்சிகரமாக ஒன்றை  செய்வதிலோ அவர்கள் ஏன் விருப்பமற்றுப் போனார்கள்? இந்த இரண்டும்தான் ஒரு நாட்டை சிறந்த நாடாக மாற்றும் காரணிகள்” என்கிறார்.

வடக்கு டகோட்டா வழியாக ‘மொன்ட்டானா’ வந்த ஸ்டெய்ன் பெக், ‘எனக்கு மிகவும் பிடித்த நான் நேசிக்கும் பகுதி மொன்ட்டானா’ என்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம், அந்த பகுதிதான் டெலிவிஷனால் சீரழிக்கப்படாத பகுதி என்பது. ‘அன்பான, நிறைவான மனிதர்களை இங்கு கண்டேன். திகிலூட்டும் பரபரப்பு இங்கு காணப்படவே இல்லை’ என்கிறார், ஸ்டெய்ன் பெக்.

1876 ஜூன் மாதத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு செயன்னே, அரபஹோ (Northern Cheyenne, Arapaho) பழங்குடியினருக்கும் யுத்தம் நிகழ்ந்த இடத்தைப் பார்த்தார். அந்த யுத்தம் பற்றிய நாவல் அவர் எழுதியிருக்கிறார். பின் அவர் அங்கிருந்து ‘யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா’ (Yellowstone National Park) வந்தார். அங்கு இயற்கையின் அற்புதங்கள் பாதுக்காகப்படுவதாக சொல்லியபோது டிஸ்னிலேண்ட்–ஐ விட இனி என்ன அற்புதம் அமெரிக்காவிலிருக்க போகிறது என்று துயரமாகச் சொன்னார். பூங்காவிலிருந்த போது சார்லி விடாமல் குறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். காரணம் புரியவில்லை. சற்று நேரத்தில் ஒரு கரடி தூரத்தில் தெரிந்தது.

சியாட்டில் செல்லும் வழியில் ஸ்டெய்ன் பெக் கொலம்பிய நதியைப் பார்த்தார். அமெரிக்க நீர் ஆதாரத்துக்காகவும் பசிபிக் சமுத்திரத்தை இணைப்பதற்காவும் பிரான்சிடமிருந்து 1803இல் விலைக்கு வாங்கப்பட்டு லூயிஸ், கிளார்க் இருவராலும் கண்டறியப்பட்ட அந்த இடம் அவருக்கு ஆச்சர்யம் தந்தது. இருபது வருடங்களில் முகமே மாறியிருந்த இந்த இடம், எதனை நோக்கிய வளர்ச்சி இது? அழிவை நோக்கியா என்ற எண்ணத்தை ஸ்டெய்ன் பெக்குக்கு தருகிறது.

அடர்ந்து வளர்ந்திருந்த செஞ்சந்தன மரங்களைக் கண்ட ஸ்டெய்ன் பெக், அம்மரங்களருகே சுற்றித் திரிந்த இன்பத்திற்கு இணையாக எதுவுமில்லை என்கிறார். நீண்ட நேரம் சுற்றியும் அந்த மரங்களின் மீது சிறுநீர் கழிக்காமல் வெளியில் வந்து சிறுநீர் கழித்த நாய் சார்லிக்கு தன் நூலில் அவர் நன்றியை பதிவிட்டுள்ளார்.

தான் பிறந்த சலினாஸ் பள்ளத்தாக்கு (Salinas Valley) பகுதிக்கும் இந்த பயணத்தில் ஸ்டெய்ன் பெக் சென்றார். இருபது வருடங்கள் கழித்து, வாழ்வின் கடைசியாக வந்த அந்த தருணம் அவருக்கு பால்ய நினைவுகளைக் கிளர்த்தி கசிந்துருக வைத்தது.

இந்த பயணத்தின் முடிவில், அமெரிக்கா திசையற்றும் நோக்கமற்றும் அசுரத்தனமாக, இயந்திரத்தனமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதையே உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார், ஜான் ஸ்டெயின் பெக்.

1 COMMENT

  1. அருமையான கட்டுரை.இந்த பேக்ஸ் சிஸ்டம் கண்டு அவர் வருந்திய அதே நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.அமெரிக்காவை விட பின்தங்கியது ஒருவகௌக்கு நல்லதுதான்.
    நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...