No menu items!

விஜயதாரணியின் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?

விஜயதாரணியின் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?

காங்கிரஸில் இருந்து பாஜக சென்ற விஜயதாரணி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நான்கு பெண்கள் போட்டியிடுகிறார்கள். வெற்றி வாய்ப்பு யாருக்கு?

காங்கிரஸ் கோட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைக்கு அருகிலுள்ள உள்ள தொகுதி விளவங்கோடு. இந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் இணைந்து, பதவியை ராஜினாமா செய்ததால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு ஏப்.19-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வேட்பாளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும், 3 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். இதுவரை நடைபெற்றுள்ள 17 சட்டப்பேரவை தேர்தல்களில் 12 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது.

கடந்த 2011, 2016, 2021 மூன்று சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதரணி வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு முன்பாக காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸும் இதுபோல் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்தார். அதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றிருந்தார்.

தற்போது இடைத்தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். ஆனால், இதில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முக்கிய கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்த 4 கட்சிகளும் பெண் வேட்பாளர்களையே களம் இறக்கியுள்ளன.

நான்கு முனையில் நான்கு பெண்கள்

காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அகில இந்தியக் காரிய கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் பேத்தி. இவரது தந்தை கத்பர்ட் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1976ஆம் ஆண்டு பிறந்த தாரகை கத்பர்ட் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். எம்ஏ, எம்.பில், பிசிடிசிஏ, எம்பிஏ, பிஎச்டி படித்துள்ள தாரகை கத்பர்ட் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர்.

தாரகை கத்பர்ட்-க்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தற்போது அவர் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

“விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய மிக்க தொகுதியாகும். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மீண்டும் இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டை என நிரூபிப்பேன்” என உறுதியுடன் தெரிவித்துள்ளார் தாரகை கத்பர்ட்.

பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டியிடுகிறார். 42 வயதான வி.எஸ் நந்தினி பாஜகவின் மாவட்டச் செயலாளர்களின் ஒருவராக உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக எந்தவித மனுக்களோ அல்லது பரிந்துரைகளோ செய்யாத நந்தினியை வேட்பாளராக பாஜக அறிவித்தது முக்கிய கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

“பிரதமர் மோடியின் பல சாதனை திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. மோடி தான் மீண்டும் பிரதமர் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே இந்த தொகுதியை மேம்படுத்தும் வகையில் நிச்சயம் பல்வேறு திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார், நந்தினி.

அதிமுக வேட்பாளராக ராணி நிறுத்தப்பட்டுள்ளார். 41 வயதான இவர் தற்போது அந்த கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளராகப் பதவியில் உள்ளார். நாகர்கோவிலில் உள்ள சைமன் நகர் பகுதியில் வசித்து வரும் ராணி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான தொழிற் பயிற்சிகளை அளித்து வருகிறார். விளவங்கோடு தொகுதிக்கு எந்தவித தொடர்பும் இல்லாத நிலையிலும் இவரது தொண்டு நிறுவனம் மூலமாகவும், இவர் நடத்தி வரும் பல அமைப்புகளின் மூலமாகவும் விளவங்கோடு தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர்.

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெண்களுக்காகவே பல்வேறு திட்டங்களைத் தந்தவர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மீனவர்கள், விவசாயிகள், மாணவ – மாணவிகள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களைத் தந்துள்ளார். நிச்சயம் இரட்டை இலை இங்கு வெற்றி பெறும்” என்கிறார் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார், ராணி.

நாம் தமிழர் கட்சி சார்பில் மைலோடு பகுதியைச் சேர்ந்த ஜெமினி என்பவர் போட்டியிடுகிறார். என்.எஸ்.சி விலங்கியல் மற்றும் பி.எட் எம்.பில் படித்து உள்ள ஜெமினி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சேவியர் குமார் சமீபத்தில் மைலோடு ஆலய பங்குத்தந்தை அலுவலகத்தில் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாக ஜெமினி செயல்பட்டார். ஆசிரியர் பணி காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கியதாகக் கூறப்பட்டது. தற்போது கணவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாம் தமிழ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த தொகுதியில் எனக்கு வாய்ப்பு தந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் படையின் உழைப்பால் நிச்சயம் இந்த தொகுதியில் நாங்கள் சாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார் ஜெமினி.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த விளவங்கோடு தொகுதியில், காங்கிரஸ் கட்சியே பலமுறை வெற்றி கண்டுள்ளது. தற்போது வரை, 17 தேர்தல்களை சந்தித்துள்ள இத்தொகுதியில், 12 முறை காங்கிரஸ் கட்சியே வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி 87 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்றிருந்தார். விஜயதாரணிக்கு 52.12 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயசீலன், 58 ஆயிரத்து 84 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு 35.04 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது.

இத்தொகுதியில் இதுவரை வென்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியாக இருப்பதால் மீண்டும் தங்களுக்கே வெற்றி என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி உள்ளது.

கடந்த 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் இங்கு காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற விஜயதரணி, பாஜக சார்பில் போட்டியிட்டு 2ஆம் இடம் வந்த ஜெயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு 3ஆம் இடம் பிடித்த மேரி ஆட்லின் இப்போது பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாஜகவினரும் நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

நான்கு முனை போட்டி இருந்தாலும் காங்கிரஸ் – பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...