No menu items!

பாஜகவை வீழ்த்திய Single Man Army – யார் இந்த துருவ் ராத்தே?

பாஜகவை வீழ்த்திய Single Man Army – யார் இந்த துருவ் ராத்தே?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் பலருக்கும் பெரும் ஆச்சரியமளித்தது, வட இந்தியா, குறிப்பாக உத்தரப்பிரதேசம் பாஜகவை கைவிட்டதுதான். வட இந்தியாவில் பாஜகவின் பலமான வாக்கு வங்கியான நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் மனங்களில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு அனைவரும் சுட்டிக்காட்டும் ஒரு ஆள், துருவ் ராத்தே. “இவன் ஒரே ஆள்… ஆனா இவன் பண்ணின வேலை ரொம்ப பெரிசு…” என்று சோசியல் மீடியா நேற்றில் இருந்து துருவ் ராத்தேவை கொண்டாடுகிறது. தேர்தல் முடிவு வெளியாகத் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் வைரலாக இருக்கிறார் துருவ் ராத்தே. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் களத்திற்கே வராமல், தேர்தல் முடிவுகளை தீர்மானித்ததில், முக்கியமானவராக அறியப்படும் இந்த துருவ் ராத்தே யார்? ஒற்றை ஆளாக அவர் செய்த சண்டை என்ன?

யார் இந்த துருவ் ராத்தே?

இன்று உலகளவில் அறிமுகமான மிகச் சில யூடியூபர், விளாக்கர், சமூக ஊடக ஆர்வலர்களில் துருவ் ராதேவும் ஒருவர். குறிப்பாக சமூக அரசியல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த யூ டியூப் வீடியோக்களுக்காக இந்தியா முழுவதும் மிகப் பிரபலாக அறியப்படுகிறார், துருவ் ராதே.

இன்றைய (5-6-24) நிலவரப்படி, துருவ் ராதே சேனலை 2 கோடியே 16 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்; இதுவரை 282 கோடியே 67 லட்சம் பேர் அவரது வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள். துருவ் ராதேவை இன்ஸ்டாக்ராமில் 1 கோடியே 2 லட்சம் பேரும் வாட்ஸ் அப் சேனலில் 41 லட்சம் பேரும் ஃபேஸ்புக்கில் 30 லட்சம் பேரும் ட்விட்டரில் 20 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள்.

வட இந்தியாவில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே துருவ் ராத்தே சேனல் மிகப் பிரபலமாக இருக்கிறது. மெயின் ஸ்ட்ரீம் மீடியா பெரும்பான்மையும் மோடி ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளன என்ற கடந்த சில வருடங்களாகவே விமர்சனம் உள்ளது. Godi Media என்றே மீடியா குறிப்பிடப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் அது நிரூபனமானது. இந்நிலையில், மக்கள் ஊடகத் தேவைக்கு யூ டியூப் சேனல்கள் பக்கம் நகர்கிறார்கள். அவர்களுக்கு துருவ் ராத்தே வழிகாட்டுபவராக மாறியிருக்கிறார். கடைசியாக தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் துருவ் ராத்தே வெளியிட்ட My Final Message before 2024 Election Results என்ற வீடியோவை ஒரே நாளில் 1 கோடியே 88 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இதுபோல் பாஜகவுக்கும் குறிப்பாக மோடிக்கும் எதிராக அவர் வெளியிட்ட ஒவ்வொரு வீடியோவையும் கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளார்கள். அதன் விளைவுதான் வட இந்தியாவில் மக்கள் மனநிலை காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் துருவ் ராட்டியும் மோடி மீது நம்பிக்கை வைத்த அவரது ஃபாலோயர்களில் ஒருவராகத்தான் இருந்துள்ளார். 2014 தேர்தலின் போது கூட பாஜகவின் கறுப்புப் பண ஒழிப்பு கோஷங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால், பின்னாளில் மோடியை விமர்சித்துப் பேசிய துருவ், “ஊழல் ஒழிப்பில் பிரதமருக்கு உண்மையான அக்கறையில்லை என்று நான் உணர்ந்த தருணத்தில் மிகவும் வியப்படைந்தேன்” என்று கூறியுள்ளார். 2016 செப்டம்பர் 16-ல் தான் மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சியை விமர்சித்து முதல் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதன்பின்னரான இந்த எட்டு ஆண்டுகளில் துருவ் ராத்தே வெளியிட்ட  வீடியோக்களில் அதிகம் பாஜகவை விமர்சிப்பவைதான்.

யூடியூபர், விளாக்கர், சமூக ஊடக ஆர்வலர் என்பதுடன் இணையதள டெவலப்பர், டிசைனர், காப்பிரைட்டர், ப்ராஜெக்ட் டீம் லீடர், டேட்டா அனலிஸ்ட், இ-காமர்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகர் என பன்முகம் கொண்ட துருவ் ராதேவுக்கு 29 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ் ராதே குடும்பமும் கல்வியும்

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் 1994 அக்டோபர் 8 அன்று பிறந்தார் துருவ் ராதே. நடுத்தர குடும்பம்தான். தொழிலதிபர் தந்தையும் ஆசிரியையான தாயும் பணிகள் காரணமாக டில்லியில் வசித்தார்கள். எனவே, ராதேவும் டில்லியில்தான் வளர்ந்தார்; அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

ராதே, பள்ளிக் கல்வியை டெல்லி பப்ளிக் பள்ளியிலும் ஆர்.கே. உயர்நிலைப் பள்ளியிலும் முடித்த பிறகு, 2013-2015 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து 2015-2017இல் ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.

ராதேயின் இந்த வலுவான அடித்தளம் கொண்ட கல்விப் பின்னணியே அவரை ஒரு வெற்றிகரமான யூடியூபராகவும் கல்வியாளராகவும் ஆக்கியிருக்கிறது. ராதேயின் கல்விப் பின்னணி அவருக்கு பொருளாதாரம், அரசியல், பொறியியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் வலுவான அடித்தளத்தை அளித்துள்ளது. இந்த அடித்தளம்தான் அவருக்கு பல்வேறு தலைப்புகளில் தகவல் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களை உருவாக்க உதவியுள்ளது.

மேலும், கற்பது என்பதை கல்லூரியோடு முடிந்த ஒன்றாக ராதே கருதுவதில்லை. வாழ்நாள் முழுவதும் கற்பவர்களிலும் ராதேவும் ஒருவர். தனது அறிவையும் திறமையையும் மேம்படுத்த, “இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய வழிகளையும் தேடு”வதாக சொல்கிறார், ராதே.

இதனுடன், அவரின் அடர் பழுப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள், உயரமான – ஒல்லியான உடல் (183 செ.மீ. (6 அடி) உயரம், 165 பவுண்ட் (75 கிலோ) எடை), நட்பான – யாரும் அணுக தயங்காத முக அமைப்பு, அடிக்கடி புன்னகைப்பது, ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்கள் போன்ற சாதாரண ஆடைகளையே அதிகம் அணிவது (எப்போதாவதுதான் சூட் அல்லது சட்டையுடன் தோன்றுகிறார்) இவை எல்லாம் சேர்ந்துதான் ராதே வெற்றிகரமான யூ டியூபராக உதவியிருக்கிறது என்று சொல்லலாம்.

ராதேயின் குடும்பமும் ஆரம்பத்திலிருந்தே அவரது யூடியூப் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அவரது பெற்றோர்கள் அவரது கல்வியைத் தொடர ஊக்கப்படுத்தியது போல் கனவுகளைப் பின்பற்றவும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். ராதேயின் சகோதரரும் ஒரு யூடியூபர். அவரும் ராதேயின் பல வீடியோக்களில் ஒத்துழைத்துள்ளார்.

ராதே, தனது குடும்பத்தைப் பற்றி அதிக தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதில்லை. இருப்பினும், தனது குடும்பம் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் தனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசும்போது, “எனது குடும்பமே எனக்கு மிகப்பெரிய உத்வேகம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, இரக்கத்தின் முக்கியத்துவத்தை எனக்கு எனது பெற்றோர்கள் தான் கற்பித்தனர். அவர்கள் வழங்கிய ஆதரவிற்காக எனது வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன்” என்கிறார், ராதே.

காதல் திருமணம்

ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் நவம்பர் 2021இல், தனது நீண்டகால காதலியான ஜூலி எல்பிரை மணந்தார், துருவ் ராதே. ஜூலி ஒரு ஜெர்மன் குடிமகள். ஜூலியை ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிக்கும் போதுதான் முதன்முதலில் சந்தித்தார் ராதே. 2018இல் டேட்டிங் செய்து 2020இல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

தனது குடும்ப வாழ்க்கை பற்றி ராதே ஒரு நேர்காணலில், “திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. ஆனால், ஜூலியுடன் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க உற்சாகமாக இருந்தேன். இருவரும் குடும்பத்தை சிக்கலின்றி, சிறப்பாக நடத்த உறுதி பூண்டுள்ளோம். ஜூலி எனக்கு மிகப்பெரிய ஆதரவாளர். அவளை எனது வாழ்க்கையில் பெற்ற வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்று கூறியுள்ளார்.

ராதேவும் ஜூலியும் தற்போது ஜெர்மனியின் பெர்லினில் வசிக்கின்றனர்.

யூ டியூப்பர் அவதாரம்

2013 ஜனவரி 8இல் ‘துருவ் ராதே’ என்று தனது பெயரிலேயே யூ டியூப் சேனலை தொடங்கினார் துருவ். முதலில் தனது பயண வீடியோ ஒன்றை பதிவேற்றினார். அடுத்தும் ஒரு பயண வீடியோ. முதல் மூன்று வருடங்களில் இந்த இரண்டு வீடியோகளை மட்டுமே வெளியிட்டார்.

பின்னர் 2016 செப்டம்பரில் ‘BJP IT Cell Exposed: How lies and propaganda are spread’ என்ற வீடியோவில் இருந்து அரசியல் மற்றும் சமூக தலைப்புகளுக்கு மாறத் தொடங்கினார். குறிப்பாக உண்மைச் சரிபார்ப்பு (Fact Check), விளக்கமளித்தல் (Explanation) வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டார். 2022 முஹம்மது கருத்து சர்ச்சை, 2022 மோர்பி பாலம் சரிவு, 2019 புல்வாமா தாக்குதல், 2023 இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம், 2023 மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ராதே தனது வீடியோக்களில் உரையாற்றியுள்ளார்.

இந்த வீடியோக்கள் வெளியிடுவதன் நோக்கம் குறித்த கேள்விக்கு ஒரு நேர்காணலில், ” சிறு வயதிலிருந்தே வீடியோக்கள் எடுப்பதன் மீது பற்று இருந்தாலும் கூட 2011-ல் டெல்லியில் நடந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம்தான் செய்திகள், அரசியல் சார்ந்த தனது பார்வையைக் கட்டமைக்க உதவின. மேலும், இந்தியாவில் உள்ளவர்களுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் யூடியூப், வாட்ஸ்அப்பில் எதைப் பார்த்தாலும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர்” என்று கூறுகிறார், ராதே.

மேலும், “இப்போது யூடியூப் மூலம் அரசியல் எக்ஸ்ப்ளெய்னர் வீடியோக்கள் செய்வது என்பது வயது, மதம், சாதி, பாலினம் கடந்து எல்லா மக்களின் ஆதரவையும் பெற எனக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி என நினைக்கிறேன். அதனாலேயே அதன் மூலம் மக்களைச் சென்றுசேர முயல்கிறேன்” என்று கூறும் துருவ் ராட்டி, தன்னை வெறும் இன்ஃப்ளூயன்சர் என்று யாரும் அடையாளப்படுத்த வேண்டாம் எனக் கோருகிறார். மாறாக, தன்னை ஒரு ‘யூடியூப் எஜுகேட்டர்’ என்றே அழைக்க விரும்புகிறார். தேச நலனுக்காக தான் பேசுபவற்றை தேசப்பற்றுடைய யாராக இருந்தாலும் பகிர்வார்கள் என்றும் கூறுகிறார்.

Dhruv Rathee சேனலில் இதுவரை 622 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களை இதுவரை 282 கோடியே 67 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். அதிகபட்சமாக ‘Arvind Kejriwal Jailed! | DICTATORSHIP Confirmed?’ என்ற துருவ் வீடியோவை 3 கோடியே 51 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.

அரசியல் குறித்து தீவிரமான உரையாடல்களுக்கு இடையே, ‘ராதே பீ நியூஸ்’ என்ற நையாண்டியான ‘போலி செய்தி’ பிரிவையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘யூ டியூப்பை அரசியல் தளமாகப் பயன்படுத்திய முதல் இந்திய பயனர்களில் ராதேயும் ஒருவர்’ என்கிறது ‘ThePrint”.

இதனிடையே 2017 முதல் 2020ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, The Print இணைய தளத்தில் சில கருத்துக் கட்டுரைகளையும் எழுதினார்.

ஜூலை 2020இல், ‘ராதே துருவ் ராதே வ்லாக்ஸ்’ என்ற மற்றொரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். இதில் தனது சர்வதேச பயண பதிவுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த சேனலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதை 25 லட்சம் பின் தொடர்கிறார்கள். 214 வீடியோக்கள் பதிவேற்றியுள்ளார். இவற்றை இதுவரை 41 கோடியே 69 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இதில் துருவ் – ஜூலி திருமண வீடியோவை மட்டும் ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள்.

Spotifyஇல் ‘மஹா பாரத்’ எனப்படும் ஒரு போட்காஸ்டையும் துருவ் தொகுத்து வழங்குகிறார்.

தனது வீடியோக்கள் வெற்றிக்கு காரணமாக, “முடிந்தவரை எளிமையாக விஷயங்களை முன்வைப்பது, சிக்கல்களை எளிய வார்த்தைகளில் உடைப்பதுதான். எளிமையாக ஒரு காரியத்தைச் செய்வது மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதை பார்த்து நானும் ஆச்சரியப்படுகிறேன்” என்கிறார் ராதே.

தனது வீடியோக்களில் இந்திய அரசியல், கட்டுக்கதைகள், மதம், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளில் அச்சமின்றி ஆராய்வதற்காகவே துருவ் ராதே இன்று உலகளவில் அதிகமும் அறியப்படுகிறார். தேர்தல் பத்திரத்தை எதனால் மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறாகள் என்பது குறித்து புரியும்படி விரிவாக ராதே அலசிய வீடியோவை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார்கள். தமிழ்நாட்டில் தனக்கு நிறைய ஃபாலோவர்கள் இருப்பது தெரிந்ததும் தமிழிலும் ஒரு சேனல் தொடங்கினார் துருவ் ராத்தே.

இவ்வளவு ஆதரவு இருந்தால் எதிர்ப்பும் இருக்கும்தானே…

2020ஆம் ஆண்டில், கங்கனா ரணாவத்தின் அறிக்கைகளை விமர்சித்து விவாதிக்கும் வீடியோவை ராதே வெளியிட்டார். பதிலுக்கு ரணாவத், ராதேக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

2022 செப்டம்பரில் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி குறித்து ராதே வெளியிட்ட வீடியோவை இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியது. அதில், இந்தியாவின் சிதைந்த வரைபடம் இருப்பதாகவும், அதில் காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தானின் பகுதியாக அல்லது ‘சர்ச்சைக்குரியதாக’ சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு கூறியது.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் இரண்டாவது சீசனில், வைல்ட் கார்டு போட்டியாளராக ராதே பங்கேற்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது. அந்த தகவலை மறுத்த ராதே, “கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும், என் வாழ்நாளில் பிக்பாஸ் போன்ற முட்டாள்தனமான நிகழ்ச்சிக்கு செல்லமாட்டேன் என்பதை தெளிவாகச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சி சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது ” என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து, துருவ் ராதே மனைவி ஜூலிக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் அனுப்பப்பட்டது.

ஆபத்துகள் இருந்தபோதிலும் ராதே கலங்காமல் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.

தமிழில் துருவ் ராதே

துருவ் ராதேவின் அரசியல் வீடியோக்கள் இந்தி மொழி கடந்தும் வரவேற்பு பெறத் தொடங்கியதை உணர்ந்து தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய பிராந்திய மொழிகளில் தனது டப்பிங் வீடியோக்களை வெளியிடுவதற்கான ஐந்து புதிய யூ டியூப் சேனல்களை ஏப்ரல் 18, 2024 அன்று ராதே தொடங்கியுள்ளார்.

தமிழில் ‘ஜெயிலில் அரவிந்த் கெஜ்ரிவால்! சர்வாதிகாரம் உறுதி செய்யப்பட்டதா?’ என்ற தலைப்பில் துருவ் வெளியிட்ட முதல் வீடியோ 6 நாட்களில் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முத்துசாமி, “இச்சிறுவன் எனது முதல் குழந்தையை விட இளையவன் என்பதே என்னை வியக்க வைக்கும் முதல் செய்தி. இந்தியாவில் 2024க்குப் பிறகு மக்களாட்சி நிலைத்து நிற்கும் என்றால், அதற்கு முக்கியக் காரணங்களில் துருவ் ராதேவும் ஒன்று என உறுதியாகச் சொல்வேன்” என்கிறார்.

‘டைம்’ இதழ் 2023இல் வெளியிட்ட அடுத்த தலைமுறை தலைவர்களின் பட்டியலில் துருவ் ராதேவும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துருவ் ராட்டியின் அரசியல் வீடியோக்கள் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களைவிட மிகவும் வீச்சு அதிகம் கொண்டதாக இருப்பதாக பேசப்படும் நிலையில், இது பற்றி துருவ் ராட்டி ஒரு பேட்டியில், “அரசாங்கத்தை கேள்வி கேட்கிறேன். அப்படிக் கேள்வி கேட்பது ஒரு தேசமாக நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

சரி, தேர்தல் முடிவு பற்றி துருவ் ராத்தே கருத்து என்ன?

‘Never underestimate the power of a common man’ என்று கூறியுள்ளார் துருவ் ராத்தே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...