No menu items!

அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கு! –மலையாள நடிகையின் மகிழ்ச்சி

அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கு! –மலையாள நடிகையின் மகிழ்ச்சி

கடந்த வருடம் வீட்டுல விசேஷம் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் 26 வயது மகன் இருக்கும்போது அவனுடைய அம்மா மீண்டும் கர்ப்பம் தரிப்பார். குழந்தையும் பெற்றுக் கொள்வார். 2018ல் வெளியான பொதா ஹோய்யும் கிட்டத்தட்ட இதே கதையமைப்புதான். அதே போல் கடந்த வருடம் வெளியான ப்ரோ டாடி என்ற மலையாளத் திரைப்படமும் இதே போன்ற கதைதான்.

இப்போது மலையாள நடிகை ஆர்யா பார்வதி வாழ்க்கையில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பார்வதிக்கு இப்போது 23 வயதாகிறது. அவரது அம்மா ஒரு பெண் குழந்தையை இப்போது பெற்றெடுத்திருக்கிறார். அம்மாவுக்கு வயது 47. இது கேரளாவில் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பார்வதியையும் அவரது அம்மாவையும் பலர் கிண்டலடித்து வருகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் பார்வதி கண்டுக் கொள்ளவில்லை. ‘குழந்தைப் பெற்றுக் கொள்வது என் அம்மாவின் உரிமை’ என்கிறார்.

தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அம்மா வந்து சொன்ன போது பார்வதிக்கு அதிர்ச்சியாகதான் இருந்ததாம். ஆனால் இதுதான் வாழ்க்கை.

அவரவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொண்டேன் என்கிறார்.

”முதல்ல எங்க அம்மா, அப்பா என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லல. எனக்கு அவமானமாக இருக்கும் என்று நினைத்தார்கள். விடுமுறைக்காக நான் வெளியூர் சென்றிருந்தேன். வீடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன் அப்பாவிடமிருந்து போன் வந்தது. அவர் தயங்கித் தயங்கி பேசினார். என்ன என்றேன். அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 23 வயது பெண்ணிடம் பெற்றோர் சொல்லும் விஷயமில்லை என்பதால் எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. அப்போது அம்மா 8 மாத கர்ப்பமாக இருந்தார். 7 மாதத்துக்குப் பிறகுதான் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதையே அம்மா உணர்ந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் எனக்கு வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது” என்கிறார் பார்வதி.

அதன்பின் வீடு திரும்பிய பார்வதி, தன்னுடைய அம்மாவை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் மகளை கவனமாய் பார்த்துக் கொள்ளும் தாயைப் போல் கர்ப்பமாய் இருந்த அம்மாவை கனிவோடு கவனித்திருக்கிறார் பார்வதி.

’அம்மா கர்ப்பம் என்றதும் எங்கும் கேலி, கிண்டல். ஆனால் நான் இதை தைரியமாக எதிர்க் கொண்டேன். இதில் கேலி, கிண்டல் எதற்கு என்று தெரியவில்லை. என் தங்கையை நான் நல்ல முறையில் வளர்ப்பேன்.” என்று உற்சாகமாய் கூறுகிறார் அவர்.

கடந்த வாரம் பார்வதியின் அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.

”எப்போ அவள் என்னை அக்கா என்று அழைப்பாள் என்று காத்திருக்கிறேன். எங்களுக்குள் பெரிய வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் அது குறித்து எனக்கு கவலையில்லை” என்று மகிழ்ச்சியாக சொல்கிறார் பார்வதி.

இந்த மகிழ்ச்சி நீடிக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...