No menu items!

அண்ணாமலையின் அடுத்த குறி யார்? – மிஸ் ரகசியா

அண்ணாமலையின் அடுத்த குறி யார்? – மிஸ் ரகசியா

“எங்க இருந்து வர்ற ரகசியா? தமிழ்நாடா தமிழகமா?” என்று அலுவலகத்துக்குள் நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.

“உள்ளே நுழையும்போதே உங்க அரசியலை ஆரம்பிச்சிட்டிங்களா?” என்று கைப்பையை டேபிளில் வைத்து விட்டு அமர்ந்தாள்.

“கவர்னர் ஏன் திடீர்னு இந்தப் பிரச்சினையை பேசுனார்?”

“அதைதான் எல்லோரும் கேக்குறாங்க. அவர் சமீபமா தமிழ்நாட்டின் மூத்தப் பத்திரிகையாளர்களை தொடர்ச்சியா சந்திச்சுட்டு வரார். அது மாதிரி ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது இந்த ஆட்சி வந்தப் பிறகு தமிழ்நாடுனு பிரிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்கனு கொளுத்திப் போட்டிருக்கிறார். தமிழகம் – தமிழ்நாடு வித்தியாசத்தையும் கூறினாராம். கவர்னருக்கு இது ரொம்ப பிடிச்சுப் போயிருச்சு. அதனால அடுத்த மீட்டிங்லயே அதை பேசியிருக்கிறார்”

“யார் அந்த மூத்த பத்திரிகையாளர்?”

”ஜர்னலிஸ்ட்டா இருந்துட்டு இன்னொரு ஜர்னலிஸ்ட்டை காட்டிக் கொடுக்கிறது தர்மமில்லை” என்று சிரித்துக் கொண்டே டாபிக் மாற்றினாள் ரகசியா.

“அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் நடந்த சண்டைதான் இப்போ பிஜேபில ஹாட் டாபிக்கா இருக்கு. அண்ணாமலை கொஞ்சம் ஓவரா போயிட்டதா பாஜககாரங்களே சொல்றாங்க. இப்படியே போனா பாஜகவுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில ஆதரவு கிடைக்காது. அதனால தலைவரை மாத்தணும்னு ஒரு குரூப் டெல்லிக்கு தகவல் அனுப்பிச்சிருக்கு. ஆனா டெல்லி தலைமை இதையெல்லாம் கண்டுக்கலையாம். ‘என்ன நடந்தாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அண்ணாமலைதான் தலைவர். அதுல எந்த மாற்றமும் இல்லை. அதனால அவர் மீது புகார் மனுவெல்லாம் எடுத்துக்கிட்டு டெல்லிக்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கட்சியை வளர்க்கிறது எப்படி? நாடாளுமன்றத் தேர்தல்ல ஜெயிக்கறது எப்படின்னு யோசிங்க’ன்னு தகவல் அனுப்பியிருக்காங்க. இதனால அண்ணாமலை எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் அப்செட்ல இருக்கிறதா பேசிக்கிறாங்க”

“காயத்ரி ரகுராமுக்கு சப்போர்ட்டே இல்லையா?”

“கட்சில என்ன நடக்குதுனு எல்லோருக்கும் தெரியும். காயத்ரி ரகுராம் சொல்றது புதுசு இல்லை. மேலே இருந்து கீழ வரைக்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பெண்ணை நாகப் பாம்பு மாதிரி ஒருத்தர் சீண்டினாராம். அந்தப் பொண்ணு தீபமாய் சுட்டுருக்கு. அந்தப் பிரச்சினை மேலிடத்துக்கு வந்துருக்கு. ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசி கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கி செட்டில் பண்ணாங்களாம். கமலாலயத்துல கசிந்த நியூஸ் இது. அதனால காயத்ரி ரகுராம் சொன்னது எல்லாம் அவங்களுக்கு பிரச்சினையாவே தெரியல”

“அண்ணாமலை அடுத்து என்ன பண்ணப் போறாராம்?”

“அண்ணாமலையோட அடுத்த குறி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்னு சொல்றாங்க. அவர்தான் தனக்கு எதிரா கட்சியில் சிலரை கொம்பு சீவி விடறார்னு அண்ணாமலை நம்புறாராம். அதனால அவர் மேல சொல்லப்படுற சின்னச் சின்ன புகாரையெல்லாம் பெருசாக்குகிறாராம்”

“அப்படி எதை பெருசாக்கினார்?”

”சுனாமி பேரலை வந்த நாளை சுனாமிப் பேரழிவு நாளா எல்லா கட்சிகளும் அனுசரிக்குது. அந்த நாளன்று மத்திய அமைச்சர் முருகன் அஞ்சலி செலுத்த வரணும்னு பாஜக மீனவர் அணி அழைச்சிருக்கு. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரலையாம். இதுல மீனவர்களுக்கு வருத்தம். கோபம். இதை அண்ணாமலை தரப்பு ஊதி பெரிதாக்கும் வேலையை செஞ்சுட்டு வருது. விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் அப்போது முருகனை கழற்றி விட வைக்க ஏதாவது செய்யலாமான்னு வார் ரூமில் திட்டம் தீட்டப்படுது.”

“காயத்ரி ரகுராம் இனி என்ன பண்ணப் போறாராம்?”

“அவர் திமுகவுக்கு போகப் போறார்னு ஒரு பேச்சு இருக்கு”

“வானதி சீனிவாசனும் திமுகவுக்குப் போறதா ஒரு செய்தி வந்துச்சே”

“ஆமாம். வானதி சீனிவாசன் இப்போ கொஞ்சம் அதிருப்தில இருக்கிறார். அவரோட கணவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துல தென்மண்டல பிரிவுல ஒரு பதவி கொடுத்திருந்தாங்க. இப்ப அந்த பதவியில இருந்து அவரை எடுத்துட்டாங்களாம். அதனால வானதி சீனிவாசன் அப்செட். அதோட தன்னை மாநில தலைவர் ஆக்கலைங்கிற வருத்தமும் அவருக்கு இருக்கு”

“அவங்கதான் தேசிய அளவுல பொறுப்புல இருக்காங்களே”

“கரெக்ட். தன்னோட அதிருப்தியைக் காட்டுறதுக்கு திமுகவுக்கு போறாங்கன்ற நியூசை அவங்க தரப்பு ஆளுங்களே கிளப்பி விடுறாங்கனு சொல்றாங்க. இதையும் கமலாலயத்துலதான் சொல்றாங்க.”

”திமுகவுல என்ன நிலைமை? காயத்ரியை சேர்த்துப்பாங்களா?”

“காயத்ரி தரப்புல விசாரிச்சேன். அவங்க மாற்றுக் கட்சிக்குப் போகமாட்டேன். எப்பவும் தலைவர் மோடிதான்னு அவங்கத் தரப்புல சொல்றாங்க. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல வெடிகள் பாஜகவிலிருந்து வெடிக்கும்.”


“தமிழக சட்டசபை வர்ற 9-ம் தேதி கூடப்போகுது. முதல் நாள் ஆளுநர் உரையோட தொடங்கும். வழக்கமா அரசு அனுப்பற உரையைத்தானே ஆளுநர் வாசிப்பார். இந்த முறையும் அது தொடருமா?… இல்லை ஆளுநர் ஏதாவது வில்லங்கம் பண்ணுவாரா?”

“ஆளுநர் உரையை தமிழக அரசு ராஜ் பவனுக்கு அனுப்பி இருக்கு. ஆளுநர் மாளிகையில அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு திருப்பி அனுப்பியிருக்காங்க. இப்ப அந்த திருத்தங்களுக்கு அரசு ஒப்புதல் தந்து ஆளுநருக்கு அனுப்பி விட்டது ஆளுநர் உரையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எதுவும் இல்லாமல் உஷாராக ஆளுநர் உரையை தயாரித்திருக்கிறது தமிழக அரசு. அவர் அதை எப்படி வாசிக்கப் போகிறார் என்பதுதான் இப்போதைக்கு சஸ்பென்ஸாவே இருக்கு.”

“ஆளுநர் உரையை படிக்கும்போதுதான் தெரியும் என்ன வில்லங்கம் இருக்குனு”

“ஆளுநர் தொடர்பா இன்னொரு விஷயம். கடந்த வாரம் எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைக்க பல்கலைக்கழக வேந்தர்ங்கிற முறையில ஆளுநர்கிட்ட இருந்து துணைவேந்தர் சுதா சேஷய்யனுக்கு சொல்லப்பட்டது. சுதா சேஷய்யன் இந்தத் தகவலை சுகாதாரத் துறை செயலாளருக்கு சொல்ல சுகாதாரத் துறை அமைச்சர் மூலம் முதல்வருக்கு சொல்ல. இதுவரை பட்டமளிப்பு விழா எதற்கும் எந்த பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இப்போது ஒப்புதல் தந்திருக்கிறார். இதில் அரசியல் இருக்கிறது என்றாலும் நாம் அரசியல் செய்ய வேண்டாம் என்று ஓகே சொன்னாராம் முதல்வர்.”

“சின்னவர் பத்தின செய்திகள் ஏதாச்சும் இருக்கா?”

“உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான சில தினங்களில் சில திரை பிரபலங்கள் அரசுத் துறையில் சில சிபாரிசுகளை எடுத்து வந்து செய்து தருமாறு கேட்டிருக்கிறார்கள். அப்போது திரைப் பிரபலங்களிடம், ‘அண்ணே நான் யாருக்கும் எந்த சிபாரிசும் செய்யறதில்லை. இப்போது அமைச்சர் என்பதால் நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன் சினிமாவில் நான் ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லுங்க. செய்யறேன்’ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாராம்.”

“திமுகவில நேருவும், பிடிஆரும் ஏதோ அதிருப்தியில இருக்கறதா சொல்றாங்களே?”

“நேரு தன்னோட மகனுக்கு திமுக இளைஞர் அணியில மாநில அளவிலான பதவியைக் கேட்டிருக்கார். ஆனா அவருக்கு பதவி கொடுத்தா தனக்கு போட்டியா வருவார்னு அன்பில் மகேஸ் பொய்யாமொழி உதயநிதிகிட்ட சொல்லி இருக்கார். அதனால நேருவோட மகனுக்கு பதவி கொடுக்கல. இந்த விவகாரத்தால நேரு வருத்தமா இருக்கார். அதேமாதிரி தான் சொன்னபடி சரவணனை திமுகவுல சேர்க்கலைன்னு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வருத்தத்துல இருக்கார்.”

“இன்பநிதி படங்களும் கிருத்திகா உதயநிதி போட்ட ட்வீட்டும் வைரலாகியிருக்கே…திமுககாரங்க என்ன சொல்றாங்க?”

“அது ஃபோட்டோஷாப் படங்கள்னு சொல்றாங்க. அது மட்டுமில்லாம இதுக்குப் பின்னால அண்ணாமலையோட வார் ரூம் இருக்கிறதா நினைக்கிறாங்க. அரசியல்ல சம்பந்தமில்லாத ஒருத்தரை வச்சு அரசியல் செய்யறதுல திமுககாரங்க ரொம்பவே கடுப்புல இருக்கிறாங்க. இதற்கு பதிலடி நிச்சயம் இருக்குமாம்”

”‘அன்பை வெளிப்படுத்த அஞ்ச வேண்டாம். இது இயற்கையின் முழு மகிமையையும் புரிந்துகொள்ள ஒரு வழி’னு கிருத்திகா உதயநிதி ட்வீட் போட்டது எதற்கு?”

“அன்பை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்னு சொன்னது தப்பா? அதுக்கும் அந்தப் படங்களுக்கும் சம்பந்தமில்லைனு திமுக வட்டாரத்துல சொல்லப்படுது” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...