சென்னை, கோவை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய எல்லா பெரிய நகரங்களிலும், ஏன் சிறிய நகரங்களில்கூட உள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடியும் என்கிற நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு கீழ் உள்ள 200, 100 ரூபாய் நோட்டுகளை இருப்பது இல்லை என கூறப்படுகிறது. ஏதாவது ஒரு சில ஏடிஎம்களில் தான் 100, 200 நோட்டுகள் வருகின்றன. இந்நிலையில் ஏடிஎம்களில் கண்டிப்பாக 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பலருக்கும் சம்பளக்கணக்கு ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி உள்பட சில குறிப்பிட்ட தனியார் வங்கிக்கணக்கில் தான் இருக்கும். அதேபோல் அரசு ஊழியர்கள் என்றால், எஸ்பிஐ, கனரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட சில பொதுத்துறை வங்கிகளில் தான் வரும்.
வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் மொத்தமாக சம்பளத்தை எடுக்க முடியாது. 10000, 10000 ரூபாய் ஆகவே எடுக்க முடியும். அதிகபட்சம் ஐந்து முறை மட்டுமே இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். அதாவது அதிகபட்சமாக 50000க்கு மேல் ஏடிஎம்களில் இலவசமாக எடுக்க முடியாது. அதற்கு கட்டணமாக 23 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வேறு வங்கி ஏடிஎம்களில் என்றால் 3 முறைக்கு மேல் இலவசமாக எடுக்க முடியாது. மக்களுடைய சம்பளத்தை எடுக்க கட்டணமும், அதற்கு தனியாக ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது.
அதேநேரம் அப்படி கட்டணம் வசூலிக்கும் வங்கிகள் ஏடிஎம்களில் சரியான முறையில் பணத்தை நிரப்புகிறார்களா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாட்டின் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது. அதற்கு கீழ் உள்ள தொகையினை கேட்டால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்று தான் வரும்.
அதனால் ஏழை-எளிய மக்கள் 100 ரூபாய், 200 ரூபாய் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது கணக்கில் இருக்கும் சிறிய தொகையை அவசரத்திறகு கூட எடுக்க முடியவில்லை. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் பறந்தன. இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதில், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும் ” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.