நாடு முழுவதும் இப்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட (இ20) பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ‘சி-வோட்டர்’ அமைப்பு நாடு தழுவிய அளவில் 1,641 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அமெரிக்கா- ஈரான் போரினால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இறக்குமதி சார்பைக் குறைக்க எத்தனால் கலப்பு உதவுமா என்பது உட்பட 12 கேள்விகள் இந்த ஆய்வில் கேட்கப்பட்டன.
கருத்துக் கணிப்பில் கிடைத்த விவரங்கள் வருமாறு: கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 52 % பேர் எத்தனால் கலப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 25.9 % பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் 22 % பேர் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர். 60 %-க்கும் அதிகமானவர்கள், போதிய ஆராய்ச்சி இல்லாமல் இந்தத் திட்டம் அவசரமாகச் செயல்படுத்தப்படுவதாக நம்புகின்றனர்.
வாகனப் பழுது (52.8 %) மற்றும் மைலேஜ் குறைவு (54.2 %) காரணமாக இ20 எரிபொருளைப் பயன்படுத்த விரும்பவில்லை என 55 %-க்கும் அதிகமானோர் தெரிவித்தனர். எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகிய இரண்டையும் தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டும் என்று 76 % பேர் வலியுறுத்தி உள்ளனர்.



