No menu items!

திராவிடக் கட்சிகளை weak ஆக்க சதி-திருமாவளவன்

திராவிடக் கட்சிகளை weak ஆக்க சதி-திருமாவளவன்

“தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலைநாட்டும் முனைப்பில் தவெக உள்ளது. அதேநேரத்தில் திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என சூது, சூழ்ச்சி அரசியலை பாஜக – ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது,” என திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தமிழக அமைச்சர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், “தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலை நாட்ட வேண்டும் எனும் முனைப்பு தவெகவுக்கு உள்ளது. ஆனால், திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும். அதிமுகவை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும் என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது.

அதிமுகவை குறி வைத்துதான் அண்ணாமலையும் காய் நகர்த்தினார் அல்லது அண்ணாமலையை நகர்த்தி இருக்கிறார்கள். அதனால் தான் அவர் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து மாநாடு பொதுக்கூட்டங்களை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவாக இருக்கக்கூடிய சமூகத்தின் வாக்கு வங்கியை, சமூகப் பின்னணியோடு தம் பக்கம் ஈர்த்துவிட்டால், அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி செயலிழக்க செய்ய முடியும் என சங்பரிவார்கள் கணக்கு போட்டு அண்ணாமலையை பின்னிருந்து இயக்குவதாக நான் ஊகிக்கிறேன்.

முதலில் அதிமுகவை குறிவைத்து பலவீனப்படுத்துவது. பின்னர் திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துவது என்கின்ற சங்பரிவார்களின் சூது அரசியல், சூழ்ச்சி நிறைந்த அரசியல் அரங்கேறிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

இந்த சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என்பது குறித்து தவெகவிடம் தான், நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தவெக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது.

சேலம் அருகே ஒதியத்தில் நிறுவப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை ஆட்சியரின் அனுமதி பெற்றே வைக்கப்பட்டது. ஆனால் அதை மூடுவதற்கு ஏற்ப ஒரு கலவர சூழலை ஏற்படுத்தியதற்கு காவல்துறைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

காமராஜர் நினைவு நாளில் தமிழ்நாட்டில் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வைக்கிறேன். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் உணர்வு தான் அரசின் நிலைப்பாடு என்பதில் மாற்று கருத்து இல்லை.

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் உறுதியாக உள்ளது என நம்புகிறோம்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவதாக முடிவு எடுத்தால், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

நாகர்கோவிலில் நடந்துள்ள கைதி சபரிவர்மனின் உயிரிழப்பு பெரும் துயரமானது. உடல்கூறாய்வு அறிக்கை அவரது உடம்பில் காயங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல் நிலையங்களில், சிறை கொட்டகையில் விசாரணைக் கைதிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறைக்கு உள்ளது. ஆனால் அவ்வப்போது இது போன்ற அத்துமீறல்களால் படுகொலைகள் அரங்கேறுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சபரிவர்மனின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை தொகுதி மறு வரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்தோம். இந்த முறையும் அதனை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மக்களவையில் இதனை எதிர்ப்போம்.

தமிழ்நாட்டில் மாறி மாறி எம்எல்ஏக்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதை விசிக தொடக்கத்திலிருந்து சுட்டிக்காட்டி வருகிறது.

தவெகவிலிருந்தும் சிலரை விலை கொடுத்து வாங்க முயற்சி நடப்பதாக 2 எம்எல்ஏக்கள் புகார் அளித்துள்ளனர். அதேபோல தவெக மீது திமுக, அதிமுக கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளன. இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு தீங்கிழைப்பதாக இருக்கிறது என்பதை விசிக சுட்டிக்காட்டுகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...