பரந்தூரில் ஓடுதளம் அமைப்பது சாத்தியமற்றது என அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது உள்நோக்கம் கொண்ட மலிவான அரசியல் என பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக அரசின் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், பரந்தூரில் ஓடுதளம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது உண்மைக்கு மாறானது, தவறானது, தமிழ்நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்டது. முந்தைய திமுக அரசுதான், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு பரந்தூரை தேர்வு செய்தது. அதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விமான நிலைய திட்டத்துக்காக கையகப்படுத்தி முன்னெடுத்தது.
விமான நிலையம் அமைக்க பரந்தூர் பொருத்தமான இடம் என்பதற்கான விரிவான முன்சாத்திய ஆய்வரிக்கையை தமிழக அரசு தான் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதில் 4040 மீ x 45 மீ அளவிலான இரட்டை ஓடுதளங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்து ஆவணங்களை வழங்கியது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2024 ஜூலையில், இடத்திற்கான அனுமதியையும், 2025-ல் கொள்கை அளவிலான திட்ட அனுமதியையும் வழங்கியது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation), பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இவை நடைபெற்றன.
நீர்நிலைகள் முன்னரே அறியப்பட்டதோடு, மதிப்பீடும் செய்யப்பட்டன. நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓடுதளம் சீராக அமைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும், உறுதியான ஓடுதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளையும் நிபுணர் குழுக்கள் பரிந்துரைத்தன.
இந்நிலையில், இப்போது தவெக அரசின் அமைச்சர் நிர்மல் குமார் அதே ஓடுதளத்தை “சாத்தியமற்றது” என்று திடீரென சொல்வது தொழில்நுட்பப் பிரச்சினையால் அல்ல, தங்கள் தலைவரின் சுய விருப்பத்தால், மலிவான ஓட்டு வங்கி அரசியலால்தான். அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த பேச்சு உள்நோக்கம் கொண்டது, திசை திருப்பும் போக்கை வெளிப்படுத்துகிறது.
இது மாநில வளர்ச்சியைவிட தவெகவின் வளர்ச்சிதான் முக்கியம் என்ற அவர்களின் மாநில வளர்ச்சிக்கெதிரான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை தடுப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை முடக்கும் அபாயத்தை அதிகரிப்பதோடு, சென்னையின் விமானப் போக்குவரத்து நெரிசலை பல ஆண்டுகளுக்கு நீடிக்க வைக்கும்.
தவெக அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த தவறான தகவலை, நாடகத்தை, உள்நோக்கத்தை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. நம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை சீரழிக்க செய்யும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தவெக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்தை, வளர்ச்சியை தடுக்கும் துரோக செயலை நிறுத்த வேண்டும் என்பதோடு, ஏற்கனவே வழங்கப்பட்ட ஓடுதள அனுமதிகளை மதித்து பின்பற்ற வேண்டும். விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மாற்று வாழ்வாதாரங்களை சிறந்த முறையில் அளித்து பரந்தூர் திட்டத்தை மேலும் கால தாமதம் செய்யாமல், பொதுநிதி விரயம் இல்லாமல் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் அல்லது உண்மையிலேயே சிறந்த மாற்று திட்டத்தை முன்வைக்க வேண்டும்.



