“ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது,” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடும் கண்டனம்.
முன்னதாக, நேற்று மதுரை சென்ற ஆளுநர் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது,” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மதுரையில் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் எம்பியுமான சு.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், “இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் முறைகள், பிரச்சினைகள், துறைகளிடையே ஒருங்கிணைப்பு குறித்தும் விவாதிக்க உள்ளோம். மக்களுக்கு விரைவாக திட்டங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதில் துறைகளுக்கு இடையேயுள்ள பிரச்சினைகளை இடையூறுகளை சரி செய்துவிட்டு ஒவ்வோர் ஆண்டுக்கான இலக்குகளையும் முடிக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அவர்களது அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்யலாம். எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர், எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது. தேவையில்லாமல் ஆளுநர், அரசின் நிர்வாகத்தில் தலையிட்டால் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படும்.
கண்டிப்பாக எந்த அதிகாரிகளும் அரசின் அனுமதி பெறாமல் ஆளுநருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்பதை அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் தேவையில்லாமல் ஆய்வு செய்யக் கூடாது. அவ்வாறாக தலையிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது.” என்று கூறினார்.
முன்னதாக, இக்கூட்டத்தை தொடங்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி பேசியது: “இக்கூட்டத்தின் நோக்கம் மிக உயரியது. மத்திய, மாநில அரசு மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு அரசியல் சாசனம் தனித்தனி உரிமைகள் கொடுத்துள்ளது. இந்த உரிமைகள் ஒன்றோடொன்று முரண்பட்டு திட்டங்கள், பயனாளிகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதற்காக மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கும் கிராம பஞ்சாயத்து உரிமைகளுக்கு இடையில் எந்த முரணும் ஏற்படாமல் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டுசெல்வதன் அடிப்படைதான் இந்தக் கூட்டம், இந்தச் சட்டம்.



