No menu items!

முரண்பாடுகளின் உருவமாக ஆளுநர் உரை – உதயநிதி

முரண்பாடுகளின் உருவமாக ஆளுநர் உரை – உதயநிதி

ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் உரை என்பது அரசு தயாரித்து கொடுக்கும் உரைதான். அந்த உரையில் ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இன்றைய ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்காக கண்டெண்ட் ஆக அமைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஒரு முறை கூட ஆளுநர் முழுமையாக வாசித்தது இல்லை, பல திருத்தங்களை செய்துள்ளனர். ஆனால், இந்த முறை அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஓர் எழுத்து, ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், பாஜகவுக்கும் இணக்கமான ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

தவெகவின் சொந்த சுய புராணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், ஒலிம்பிக் மையங்கள், திறன்பயிற்சி மையங்கள், இரு மொழிக் கொள்கை, 69% இட ஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நிலுவையில் உள்ள கல்வி நிதி கேட்டு கோரிக்கை, வறுமையில்லா தமிழ்நாடு, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி, சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை, கீழடி உள்ளிட்ட அகழாய்வுகள், இந்தியாவில் அதிகம் நகர் மயமான மாநிலம் தமிழ்நாடு. இப்படி எங்கள் அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளையே மீண்டும் படித்துள்ளனர்.

கடந்த அரசின் மீதான திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, இவர்கள் ஆட்சியின் தோல்விக்கான பழியை திமுக அரசின் மீது போட்டுள்ளார்கள். மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. சென்ற ஆட்சியின் நிர்வாகம் சரியில்லை என குறிப்பிட்டுக் காட்டியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அப்படி ஆட்சி நிர்வாகம் சரியில்லாமல் இருந்திருந்தால், எப்படி அவர்கள் சுட்டிக்காட்டியபடி பல்வேறு திட்டங்களை நம் அரசு நிறைவேற்றிக் காட்டியிருக்கும்.

சென்றவாரம் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில், இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக முதல்வர் விஜய் பெருமை பேசியுள்ளார். இது கடந்த ஒரு மாத கால ஆட்சியின் சாதனைகளா?. எங்கள் ஆட்சியின் சாதனைகளையே அவர் டெல்லியில் வாசித்து வந்திருக்கிறார். மொத்த முரண்பாடுகளின் உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது.

இந்த அரசு அமைந்து 38 நாட்கள் ஆகிவிட்டது. இந்த அரசுக்கென சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை. இவர்கள் சொல்வது அறிவிப்பது எல்லாமே எங்கள் அரசின் திட்டங்கள் தான். இந்த அரசு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை தவெக அளித்துள்ளது. அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முன்னோட்டமாக இந்த உரை இருக்கும் என எதிர்பார்த்தோம்.

சொன்ன வாக்குறுதிகளை, திட்டங்களை எப்போது நிறைவேற்றுவார்கள் என ஆளுநர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்த உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பித்துச் செல்ல முன்னோட்டமாக, வெள்ளை அறிக்கை என ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. இப்போது முதல்வராக இருப்பவர் தேர்தல் பிரச்சாரத்தில் வீர வசனம் பேசினார். பச்சைக் குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்கு போகும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையை சொல்ல முடியவில்லை சிஎம் சார் என, அப்போது எங்கள் தலைவரை பார்த்து வீர வசனம் பேசினார். இன்று அவர்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்களை பார்க்கும் போது, ‘கண்ணாடியை பார்த்து பேசுறீங்க சார்’ என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். அதுவும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, இன்று நடக்கும் குற்றங்களில் ஆளும் கட்சியினரே ஈடுபடுகின்றனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. ஏற்கெனவே நன்றாக இருக்கும் திட்டங்களை கெடுப்பதை எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்க முடியாது. எங்கள் அரசு கொண்டு வந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளார்கள். முதல்வன் என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் பெயர் தான் நியாபகம் வரும் என அந்த திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளார்கள்.

தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் நடந்தாலும், முதல்வர் கோட் சூட் போட்டுள்ளார், வேட்டி சட்டை போட்டுள்ளார், டிபன் பாக்ஸில் லஞ்ச் எடுத்துவந்து, அவர் வாயில் அவரே வைத்து சாப்பிடுகிறார் என அவரது கட்சியினர் ட்ரெண்ட் செய்கிறார்கள். எனவே உண்மையான பிரச்சினைகளை பற்றி முதல்வர் வாயைத் திறப்பாரா என்று கேட்பதற்காகவே, திமுக உறுப்பினர்கள் எல்லாம் ‘தயவு செய்து வாயைத் திறங்க சிஎம் சார்’ என்று சொல்வதற்காகவே, இன்று இந்த பேட்ஜ் அணிந்து வந்துள்ளார்.

எப்போதாவது பேசும் முதல்வர், தான் முதல்வர் என்பதையே மறந்து பிரச்சாரத்தில் பேசுவது போலவே பேசுகிறார். அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் முழுக்க முழுக்க ரீல்ஸ் வெறியில் சுற்றுகிறார்கள். முதல்வரின் ஒரே சிந்தனை, இந்த ஆட்சியை எப்படி காப்பற்றப் போகிறோம் என்பதுதான். அதனால்தான் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார். மாற்றம் என சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள். ‘இது மாற்றம் அல்ல, மாட்டிக்கிட்டோம்’ என மக்கள் சொல்கிறார்கள்.

தமிழக வளர்ச்சி, பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என எந்த தரப்புக்கும் எந்த திட்டங்களும் ஆளுநர் உரையில் இல்லை. கடந்த ஆட்சியின் மீது காழ்ப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்தும் இந்த ஆளுநர் உரையை வன்மையாக கண்டிக்கிறோம்.

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட அரசு கொடுத்த உரையை முழுமையாக ஆளுநர் வாசித்தது இல்லை. ஆனால் இப்போது ஒரு வார்த்தை, ஒரு புள்ளி, கமா கூட மாற்றாமல் ஆளுநர் வாசித்துள்ளார். எனவே தவெக ஆட்சியாளர்களுக்கும், பாஜகவுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. திமுக ஆட்சியில் எப்போதும் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும். நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். ஆனால் இப்போது இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக, தவெக இடையே ஒரு புரிந்துணர்வு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறந்து” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...