கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்வு தான் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. இதனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை மாறிவிட்டது. மக்கள் தொகை சரிவு இப்போது பெரிய பிரச்சனையாக உலக நாடுகளுக்கு மாறியுள்ளது.
அமெரிக்காவுக்கு இணையாக ஒரு மிகப் பெரிய வல்லரசு என்றால் அது சீனா தான். கடந்த பல ஆண்டுகளாகவே சீனா மிக வேகமாக முன்னேறி வந்த நிலையில், இப்போது முக்கிய மாற்றம் நடந்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள இந்த ஒரு மாற்றம் சீனாவின் ஆதிக்கத்தையே மொத்தமாக காலி செய்யும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
உலகின் இரண்டாவது மிக பெரிய பொருளாதாரமான சீனா, தற்போது ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அதுதான் மக்கள் தொகை வீழ்ச்சி. இது வெறும் டேட்டா மாற்றம் மட்டுமல்ல.. சீனாவின் பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய ஆதிக்கம் மற்றும் சந்தை என அனைத்தையும் தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு மோசமான வீழ்ச்சி என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரும், மார்ட்டின் கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ராட் டி. மார்ட்டின், சீனாவின் இந்த நிலைமையை மாற்ற முடியாத ஒன்று என்று விவரிக்கிறார்.
சீனாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடி என்ற உச்சத்தைத் தொட்டுவிட்டு, தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இப்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 2010களின் மத்தியில் சீனாவில் ஆண்டுக்கு 1.8 கோடி குழந்தைகள் பிறந்தன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் கீழே சரிந்துள்ளது. சீனா உருவான காலத்திலிருந்து அங்குக் குழந்தை பிறப்பு விகிதம் இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறையாகும். இதே நிலைமை நீடித்தால் சீனாவின் மக்கள் தொகை 2100ஆம் ஆண்டிற்குள் பாதியாகக் குறையக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. சில ஆய்வாளர்கள் இது 30-40 கோடியாகக் கூட குறையலாம் என்று அஞ்சுகின்றனர்.
சீனாவின் இன்றைய நிலைக்கு 1980 முதல் 2016 வரை நடைமுறையில் இருந்த ஒரே குழந்தை திட்டம் முக்கிய காரணமாகும். இந்தத் திட்டத்தால் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் பாலின விகிதம் பாதிக்கப்பட்டு, இன்று குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சீனாவில் மிகக் குறைவாக உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ளப் பெண்களே இல்லாதபோது, நீங்கள் எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் மக்கள் தொகையை உயர்த்த முடியாது. பிறக்காத பெண்களுக்கு உங்களால் மானியம் வழங்க முடியாது என்கிறார் ராட் மார்ட்டின்.
இத்தனை ஆண்டுகள் சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அதன் உழைக்கும் வர்க்கமே முதுகெலும்பாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறுகிறது. அங்கு 15 முதல் 64 வயதுக்குட்பட்ட உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மறுபுறம், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வரி செலுத்தும் இளைஞர்கள் குறைவதாலும், ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் செலவு தேவைப்படும் முதியவர்கள் அதிகரிப்பதாலும் சீனாவின் நிதி நிலைமை மோசமடையும். இது சீனாவின் நுகர்வுச் சந்தையையும் பலவீனப்படுத்தும்.
மக்கள் தொகை சரிவைத் தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ஒரு குழந்தை திட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டனர். இப்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ரொக்கம் மற்றும் வீட்டு வசதிக்கான மானியங்களும் வழங்கப்படுகிறது. மகப்பேறு விடுமுறை நீட்டிப்பு, கல்விச் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது.
இருப்பினும், சீன இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். அதிகப்படியான வாடகை, கடுமையான வேலை நேரம், குழந்தைகளின் கல்விக்கான போட்டி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இது ஒரு சமூகப் பிரச்சனையாக மாறிவிட்டதால், வெறும் அரசு சலுகைகளால் இதைச் சரிசெய்ய முடியவில்லை.
சீனாவின் இந்த மக்கள் தொகை மாற்றம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். வேலை செய்யக்கூடிய வயதில் இருக்கும் இளைஞர்கள் நம்பர் குறைவதால் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி வேகம் குறையும். சீனாவில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதால், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இந்தியா, வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன.



