No menu items!

மலை அருவிகள் அழுது கொண்டே கேட்குமே… – வைரமுத்து

மலை அருவிகள் அழுது கொண்டே கேட்குமே… – வைரமுத்து

பாரதிராஜாவின் மறைவால் பேரதிர்ச்சியும் பெரும் துயரமும் அடைந்த கவிப்பேரரசு வைரமுத்து, தனது பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய ‘உடன்பிறப்பின்’ பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் மல்க இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார்.

“பிதாமகனே போய் விட்டாயா?
கிராமத்து ராஜாவே இறந்து பட்டாயா?
எங்கள் மண்வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?
அடைத்து கிடந்த திரை உலக கதவுகளை
திறந்த வெளிக்கு திறந்துவிட்டவனே!
ஆகாயத்திற்கு அடுத்து
அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே!

என்னையும் சுயமரியாதையோடு சுடர் ஒளி வீசச் செய்தவனே!
உடன்பிறப்பே.. ரத்தத்தின் ரத்தமே..
எங்கள் தலைவர்களின் மொழிக்கு இணையாக,
‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற ரத்தின சொற்களுக்கு
முத்திரை சேர்த்தவனே!

நீ மாயக்காரன்.. புழுதியை பொன் செய்தாய்!
சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை,
கருப்பு என்று மாத்திய கலை ஆளன் நீ!
இடிந்த சுவர்களும்.. உடைந்த மனிதர்களும்..
கிழிந்த வாழ்க்கையும் உன் கதையின் கச்சா பொருட்கள்!
இந்த கரட்டுப்பட்டியை டெல்லி நகரத்திற்கு
கொண்டு சேர்த்த அல்லிநகரத்து அரசன் நீ!

இனி நான் எப்படி தனியாக தேனி போவேன்?
மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகளால்
அழுது கொண்டே கேட்குமே.. ‘எங்கே பாரதிராஜா?’
கத்தாலம் காட்டுக்கு கருச்சா கேட்குமே.. ‘எங்கே பாரதிராஜா?’
கருவேலம் மரம் கேட்குமே.. ‘எங்கே பாரதிராஜா?’
என்ன பதில் சொல்வேன்? எப்படி நான் தனித்து இருப்பேன்?

நீ தூரிகை.. நான் வண்ணம்!
நான் தூரிகை.. நீ வண்ணம்!
தூரிகை இல்லாமல் வண்ணமும்,
வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்துக்கு ஆகும்?

நீ அறிவாள்.. நான் கைப்பிடி! நான் அருவாள்.. நீ கைப்பிடி! அருவாள் இல்லாத கைப்பிடியும், கைப்பிடி இல்லாத அரிவாளும் என்னத்துக்கு ஆகும்?

என்னை அழ விடு..
என் உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய் கரையட்டும்!
இனி என்ன எழுத..?
நடிகர் திலகம் மறைந்தபோது புலம்பியது போல்
நானும் புலம்புகிறேன்..

‘பூங்காற்று திரும்புமா.. என் பாட்ட விரும்புமா..’
பாராட்ட மடியில் வைத்து தாலாட்ட,
எனக்கு ஒரு தாய்மடி கிடைக்குமா?
முதல் மரியாதை செய்த வண்ணம் உனக்கு..
இதோ என் இறுதி மரியாதை!”

ஏற்றிவிட்ட ஏணி சரிந்துவிட்டதே: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இரட்டையர்களாக, காவியப் படைப்புகளைத் தந்த பாரதிராஜா – வைரமுத்து கூட்டணியின் நட்பு உலகம் அறிந்தது. தன் வாழ்விலும் திரையுலகப் பயணத்திலும் இமயமாய் நின்ற நண்பனின் மறைவை ஏற்கும் வலிமையற்று, வைரமுத்து தனது ட்விட்டர் (X) தளத்தில் பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த உருக்கமான கவிதை வரிகள், தற்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கலங்கச் செய்து வருகிறது. ஒரு கவிஞனாகத் தன்னைத் திரையுலகிற்கு ஏற்றிவிட்ட ஏணி, இன்று சரிந்துவிட்டதே என்ற ஏக்கத்தில் வைரமுத்து எழுதியுள்ள இந்த ‘நிறங்கள் கவிதை’ பாரதிராஜாவின் ரசிகர்களைக் கண்ணீரில் நனைய வைத்துள்ளது.

இதையடுத்து நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், வைரமுத்து, நடிகை ராதிகா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...