திருமணத்துக்குப் பிறகு சாய் தன்ஷிகா திரைப்படங்களில் நடிப்பதற்கு நான் எந்த தடையும் போடமாட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். மேடையில் பேசிய சாய் தன்ஷிகா, விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார். இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஷால் பேசும்போது, “சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஓர் அற்புதமான பெண். கண்டிப்பாக சினிமாவில் வடிவேலு – கோவை சரளா போன்று சண்டை போடும் ஜோடியாக நாங்கள் இருக்கமாட்டோம். காரணம், அந்த சண்டை காட்சிகளை பார்க்கும்போது நான் கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களுக்குள் சண்டை வராது.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்வேன். கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார். நாங்கள் இருவரும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க உள்ளோம்.