ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குனருமான எம்.ஆர்.பாரதி இயக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்.’. புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா உட்பட பலர் நடிக்கிறார்கள். இளமாறன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மட்டும் டிரைலர் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு பி.சி.ஸ்ரீராம் பேசுகையில்
‘‘இதற்கு முன்பு சினிமாவில் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்தவர். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் மீரா திரைக்கதையாக்கிக் கொடுத்தார். வெகு சுவாரஸ்யமாக மாற்றி இருந்தார். அது நன்றாக இருந்தது. பாரதி தொடர்ந்து இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் வசந்தபாலன் பேசுகையில், ‘‘ பி.சி.ஸ்ரீராம்சார் இயக்கிய ‘மீரா’ படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் . அவர் படங்களில், நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று அவரை பார்த்து வியந்தேன்.
‘திருடா திருடா ‘படத்தின் ‘தீ தீதித்திக்கும் தீ ‘ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் .கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.
வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் பி.சி. ஸ்ரீராம் என்ற ஒளிப்பதிவு மேதை.இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் .
அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது ‘குருதிப்புனல்’ ,’அக்னி’ நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் . ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் பி.சி.ஸ்ரீராமை கவுரப்படுத்த பாராட்டு விழா எடுக்க வேண்டும்’’ என்றார்