இந்தியளவில் பிரபலமான, பண்டிட் குயின் போன்ற படங்களில் நடித்த சீமா பிஸ்வாஸ், இயற்கை படத்துக்குபின் “ஓம் காளி ஜெய் காளி’ என்ற வெப் சீரியசில் நடித்துள்ளார். அந்த கேரக்டர் குறித்து அவர் கூறியது
‘‘நான் நடித்த ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ போன்ற படங்கள் பல மொழிகளில் பெரிதும் பேசப்பட்டன. 2003 ஆம் ஆண்டில், எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானேன். 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்தில் நடித்தேன். இப்போது கொஞ்சம் இடைவெளிக்குபின் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில் நடிக்கிறேன்.புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இதன் இயக்குநர் ராமு செல்லப்பா அர்ப்பணிப்பு, விடாமுயற்சி கொண்டவர். ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் எனக்கு கதை சொல்ல அவர் மும்பைக்கு வந்தார். படப்பிடிப்பு தளத்தில் மொழி எனக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டேன். ஆனால், படப்பிடிப்பு முழுக்க இயக்குநர் ராமு செல்லப்பா எனக்கு உதவி செய்தார்” என்றார்.
‘‘இதென்ன தலைப்பு, எந்த மாதிரியான கதை’’ என்று இயக்குனரிடம் கேட்டால் ‘‘துாத்துக்குடி மாவட்டம் குலசை தசரா பின்னணனியி்ல் கதை நடக்கிறது. அங்கே நடக்கும் திருவிழாவில் காளி வேஷம் போட்டு ஆடுபவராக விமல் வருகிறார். ஆக் ஷன், பழிவாங்கல் என பல தளங்களில் விறுவிறுப்பாக கதை நகர்கிறது.
கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். பவானிரெட்டி ஹீரோயின். திவ்யா, புகழ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இதற்குமுன்பு ‘எங்கிட்டே மோதாதே’ என்ற படத்தை இயக்கினேன். இப்போது ஓம் காளி ஜெய் காளியை’ இயக்குகிறேன். தசரா என்பது வெறும் பண்டிகையல்ல – அது ஒரு உணர்வு.