காஷ்மீரிலிருந்து துறை ரீதியாக தண்டிக்கப்பட்ட காவல் அதிகாரி நானி கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கிறார். ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்கிறது. அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் போது, அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது.
அந்த உலகம் எங்கிருக்கிறது?, அதை இயக்குவது யார்?, அவர்களது கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் நானியின் வன்முறை பயணம் தான் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்
காக்கி சாட்டை போடாத காவல்துறை அதிகாரியாக வலம் வந்தாலும், காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் நானி, தனது ஒவ்வொரு அசைவுகள் மூலம் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். சண்டைக்காட்சிகளில் வன்முறை தாண்டவம் ஆடினாலும், தனது தனித்துவமான நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிஷம் மூலம் பார்வையாளர்களை நானி ரசிக்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் சைலேஷ் கோலானு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார். படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் பார்வையாளர்களை பயணிக்க வைத்து விடுவதோடு, அடுத்தது என்ன ? என்ற பரபரப்பை நமக்கு ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது திரைக்கதை.
என்னாவாக இருந்தாலும் அதிகபட்சமான ரத்தமும் கொலையும் நம் மண்ணுக்கு ஒத்துவராத காட்சிகளாக இருப்பதால் சில இடங்களில் ஒட்டமால் இருக்கிறது.
இயக்குனர் சைலேஸ் கோலானு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்ததன் மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.