தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை விருதுகளை வழங்க அம்மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக நடிகை ஜெயசுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் மாநிலம் உருவான கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படம் என்ற ஒரு பிரிவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சிறந்த திரைப்படங்கள் பட்டியலை ஜெயசுதா தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. அதேநேரம், 2024-ம் ஆண்டுக்கு மட்டும் 14 பிரிவுகளில் சிறந்த விருது பெறுவோர் பட்டியலை இக்குழு நேற்று அறிவித்தது.
அதன்படி 2024-ல் வெளியான கல்கி 2898 திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக இப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2-வது சிறந்த திரைப்படமாக பொட்டேல், 3-வது சிறந்த திரைப்படமாக லக்கி பாஸ்கர் திரைப்படமும் தேர்வாகி உள்ளது.
சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. இவர் புஷ்பா-2 திரைப்படத்துக்காக இவ்விருதினை பெற உள்ளார். சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் (35 இதி சின்ன கத காது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா (சரிபோதா சனிவாரம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.