மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும் படமாக ‘மனிதர்கள்’ என்ற படம் உருவாகியுள்ளது. த்ரில்லர் டிராமா கதையான இதை, அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கியுள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அனிலேஷ் எல் மேத்யூ இசை அமைக்கிறார். ஸ்டூடியோ மூவிங் டர்டிள் மற்றும் கிரிஷ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
படம் பற்றி இயக்குநர் இராம் இந்திரா கூறும்போது, “இது நண்பர்களின் உதவியால், பலரிடம் பணம் வாங்கி ‘கிரவுட் ஃபண்டிங்’ முயற்சியில் உருவான திரைப்படம்.
மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்தப்படம். ஓர் இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்குள் ஏற்படும் சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சினையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம்.