பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் 2024 YR4 எனும் விண்கல் எதிர் வரும் 2032ம் ஆண்டு நிலவை மோதும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். இதனால், ஏற்படும் விண்கல் சிதறல்கள், பூமியின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கனடாவில் உள்ள Western Ontario பல்கலைக்கழகத்தின் வானியலாளர் பால் வீகர்ட், இக்கருத்தை தெரிவித்திருக்கிறார். நிலவில் ஏற்படும் தாக்கம் பூமியின் செயற்கைக்கோள் உள்கட்டமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
“பூமி நிலவிலிருந்து பார்க்கும்போது ஒரு சிறிய இலக்காகவே இருக்கும். எனவே அதிகமான விண் துகள்கள் பூமியை நேரடியாக தாக்காது. ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த விண் துகள்களை ஈர்க்கும் திறன் கொண்டது” என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது விண்கல் நிலவில் மோதினால் அதிலிருந்து வரும் துகள்கள், புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்படும். அந்த சிதறல்கள் பூமிக்குள் நுழைய முயலும்போது, வழியில் உள்ள செயற்கைக்கோள்களை முற்றிலுமாக நாசப்படுத்திவிடும் என தெரிவித்திருக்கிறார்.
கடந்த டிம்பரில் சிலியில் உள்ள ஒரு தொலைநோக்கியால் இந்த விண்கல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது பேரழிவு வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக கருதப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆய்வுகள் அந்த கூற்றை தவறென நிரூபித்தன. சமீபத்திய ஆய்வுகள் இந்த விண்கல் நிலவில் மோத வாய்ப்புள்ளதாக காட்டுகின்றன. இந்த மோதல் நிலவில் ஒரு கிலோமீட்டர் அகலமான பள்ளத்தை உருவாக்கும் என்று வீகர்ட் கணித்திருக்கிறார்.
கடந்த 5,000 ஆண்டுகளில் நிலவில் இவ்வளவு பெரிய பள்ளம் ஏதும் ஏற்படவில்லை. அந்த வகையில் 2032ல் 2024 YR4 எனும் விண்கல் ஏற்படுத்தும் பள்ளம் மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும் நிலவில் இயற்கையாக உருவான பள்ளங்களை விட இத சிறியதாகத்தான் இருக்கும். இப்படி மோதும்போது உருவாகும் சிதறல்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து 10,000க்கும் அதிகமான முறை செயற்கையாக கம்ப்யூட்டரில் செய்து பார்க்கப்பட்டிருந்தது.
சோதனை முடிவில், சிதறல் கற்கள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பூமியில் மின் அதிர்வுகள் மற்றும் சென்சார் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.