பொதுவாக வங்கி என்றால் கடன் கொடுத்து வட்டி சம்பாதிக்கும், தபால் நிலையங்கள் கடன் தருவதில்லையே, பின் எப்படி வட்டி கொடுக்கிறது?” என்ற என்றாவது உங்களுக்கு சந்தேகம் வந்துள்ளதா. சந்தேகம் வந்திருந்தால் அதற்கான விடை தான் இந்த தகவல்.
தபால் நிலையங்கள் நேரடியாக மக்களுக்குக் கடன் கொடுப்பதில்லை என்பது உண்மைதான், ஆனால் அது செய்யும் ‘ராஜதந்திரம்’ தான் மக்களுக்கு வட்டி அதிகமாக கிடைக்க காரணமாக உள்ளது.
நீங்கள் தபால் நிலையங்களில் போடும் ஒவ்வொரு ரூபாயும் தபால் நிலையத்தின் பெட்டியிலேயே தங்கிவிடுவதில்லை. அந்தப் பணம் அனைத்தும் ‘தேசிய சிறுசேமிப்பு நிதி’ என்ற மையப்படுத்தப்பட்ட ஒரு நிதிக்கு மாற்றப்படுகிறது. இது மத்திய நிதியமைச்சகத்தின் (Ministry of Finance) நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மத்திய அரசு எங்கே முதலீடு செய்கிறது?
‘தேசிய சிறுசேமிப்பு நிதி’ என்று அழைக்கப்படும் NSSF-ல் குவியும் பெருந்தொகையை மத்திய அரசு என்ன செய்கிறது தெரியுமா? உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறது. சாலைகள், பாலங்கள், ரயில்வே மற்றும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான முதலீடாக இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மத்திய அரசு தான் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போல, இந்த சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ள மக்களுக்கும் அந்த வட்டியிலிருந்து ஒரு பங்கைக் கொடுக்கிறது.
எனவே நீங்கள் அஞ்சலகத்தில் பணத்தைப் போடும்போது, அந்தப் பணத்தை இந்திய அரசுக்குக் கடனாகக் கொடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாக, அரசு உங்களுக்கு வட்டி கொடுக்கிறது.. அரசு ஏன் இதைச் செய்கிறத என்றால், அதற்கு காரணமும் இருக்கிறது. வங்கிகளில் பணத்தைப் போடும்போது, அந்த வங்கி திவாலானால் ஒரு ஆபத்து உள்ளது (இருப்பினும் காப்பீடு உண்டு). ஆனால் அஞ்சலகத்தில் போடும் பணம், இந்திய அரசு தரும் ‘சாவரின் கேரண்டி’ கொண்டது. அதாவது, இந்தியாவே திவாலானால் ஒழிய, உங்கள் பணம் பாதுகாப்பானது.
அந்த காலத்தில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வங்கிகள் இல்லாத காலத்தில், மக்களிடம் உள்ள சிறு தொகையைத் திரட்டி அதை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த, பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இந்த முறை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. வங்கிகள் மக்களின் பணத்தை எடுத்து மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து வட்டி சம்பாதிக்கின்றன. ஆனால் தபால் நிலையம், உங்கள் பணத்தை எடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு முதலீடு செய்கிறது. அதனால்தான் அஞ்சலகத் திட்டங்கள் “Risk-free” என்று அழைக்கப்படுகின்றன. சரி, 2026 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் சிறுசேமிப்பு வட்டி விகிதங்களை இப்போது பார்ப்போம்.
அஞ்சல் துறை சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின்படி, பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் (மக்களின் புரிதலுக்காக பெயர்களின் சுருக்கம் ஆங்கிலத்திலும் ) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு (Sukanya Samriddhi): 8.2% (அதிகபட்ச வட்டி)
மூத்த குடிமக்கள் சேமிப்பு (Senior Citizen Scheme): 8.2%
தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 7.7%
கிசான் விகாஸ் பத்ரா (KVP): 7.5%
மாதாந்திர வருமானத் திட்டம் (MIS): 7.4%
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): 7.1%
தொடர் வைப்பு நிதி (RD): 6.7%
சாதாரண சேமிப்பு கணக்கு (Savings Bank): 4%
காலமுறை வைப்பு நிதி : முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து வட்டி மாறுபடுகிறது:
1 ஆண்டு: 6.9%
2 ஆண்டுகள்: 7.0%
3 ஆண்டுகள்: 7.1%
5 ஆண்டுகள்: 7.5%



