பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன.
அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் அர்பித் ரங்கா உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகரான திண்ணன் கண்ணப்ப நாயனாராக எப்படி மாறுகிறார் என்பதை பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள்.
கண்ணப்ப நாயனார் கதையை டிஜிட்டலில் பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். வேடர் குலத்து ஐந்து பிரிவினர் இவர்களுக்குள் நடக்கும் மோதல் மற்றும் அதிகாரப்போட்டியை கற்பனையாக வடிவமைத்து அதன் பின்னணியில் திண்ணன் வாழ்க்கையும் அவன் நாத்திகனாக வாழ்ந்து வரும் சூழலையும் மிரட்டலாக சொல்லத்தொடங்கியதிலிருந்து படம் வேகமாக பயணிக்கிறது. ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் தலைமைக்கு முக்கிய நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதால் அழுத்தமான காட்சிகள் படம் முழுவதும் வருவது சிறப்பு.
திண்ணனாக நடித்திருக்கும் விஷ்ணு மன்சு, அவரது கதாபாத்திரத்துக்காக உடலை செதுக்கி, நடிப்பிலும் உயர்ந்து நிற்கிறார். அதேபோல அவரே கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். வாயு லிங்கத்துக்கு பூஜை செய்யும் மகாதேவ சாஸ்திரி (மோகன் பாபு), ருத்ரனாக வந்து சிவசக்தியை உணர வைக்கும் பிரபாஸ், அர்ஜுனனுடன் மோதும் கிராதாவாக வரும் மோகன்லால், திண்ணனின் காதலியாக வரும் ப்ரீத்தி முகுந்தன், திண்ணன் கண்ணப்பராக உருவெடுத்தக் கதையைக் கூறும் சிவபெருமான் – பார்வதி இணையாக வரும் அக்ஷய் குமார் – காஜல் அகர்வால் என ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்தின் திரை வெளியையும் திரைக்கதையின் சுவாரஸியத்துக்கும் திருப்பங்களுக்கும் வலுகூட்ட கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார்.
தமிழ் பதிப்புக்கான வசனத்தை எழுதிய ஷெசாங் வெண்ணலகாண்டியின் பங்களிப்பு முக்கியமானது.
படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கியத்தும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்த் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் மட்டும் இன்னும் பொருத்தமான இடத்தை தேர்வு செய்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது. உடைகள். ஆயுதங்கள் என்று அனைத்திலும் கவனம் செய்திருக்கும் விஷ்ணு மஞ்சு திரைக்கதையில் இன்னும் சுவராஸ்யம் சேர்த்திருக்கலாம். பல காட்சிகளில் பிரமாண்டம் இருந்ததே தவிர அதில் ஒரு ஈர்ப்பு கிடைக்கவில்லை. வசனம் பேசும் விதமும் பொருத்தமாக அமைவில்லை.