‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘‘தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘‘கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்” எனத் தெரிவித்தார். ஆனால் கமல்ஹாசன், ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன்” என பதிலளித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில், ‘‘கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என முறையிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.