தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2012 – ஜூன் 2022 காலக்கட்டத்தில் 20,829 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் 8,190 வழக்குகள் முடிக்கப்பட்டு 5,631 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதம் 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில் 3,500 வழக்குகள் விசாரணைக்குக் காத்திருக்கின்றன. போக்சோ வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த 19 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட நிலையில், அவற்றில் 8 நீதிமன்றங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
முடிவுக்கு வராத குற்றங்கள்
2012இல் உருவாக்கப்பட்ட ‘போக்சோ சட்டம்’ குழந்தைகள் பாதுகாப்புக்கான விரிவான சட்டம் என்று எல்லாத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகள் மீது கொடூரமாக நிகழ்த்தப்படுகிற செயல் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. குழந்தைகளைத் தவறான எண்ணத்துடன் தொடுதல், தடவுதல், தீங்கிழைத்தல் போன்ற எல்லா வகையான வன்முறைகளும் அந்தச் சட்டத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு விரிவான சட்டங்கள் இருந்தும், குழந்தைகள் மீதான குற்றங்கள் குறையவே இல்லை.
அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் – குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதற்கான சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். 12 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகும் எவ்வித அச்ச உணர்வுமின்றிக் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.