தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயை இனி அனைவரும் இளைய காமராசர் என்று அழைக்க வேண்டும் என்று கல்வி விழாவில் விருது பெற்ற மாணவரின் பெற்றோர் பேசிய சம்பவம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி நடிகரும், தவெக தலைவரும் விஜய் கடந்த 2 ஆண்டுகளாக கவுரவித்து வருகிறார். இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான கல்வி விருது மற்றுன் பரிசு வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடந்து வருகிறது.
இதில் 88 தொகுதிகளில் உள்ள 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கல்வி விருது விழா 3 நாட்களாக நடக்கவுள்ளது. இன்றைய விழாவில் விஜய் பேசுகையில், நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? உலகில் மாணவர்கள் சாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமானவை உள்ளது. பெற்றோர் மாணவர்களின் ஆசையை தெரிந்து வழிகாட்ட வேண்டும். எந்த அழுத்தமும் கொடுக்க கூடாது என்று தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த விஜய், இப்போது நீட் தேர்வு மட்டும் தான் உலகமா என்று பேசியது மக்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே கல்வி விழாவில் விஜய்-க்கு ஒருவர் இளைய காமராசர் பட்டம் அளித்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துளது.
இந்த விழாவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து வந்த தனியார் பள்ளியின் தலைமையாசிரியர் பேசுகையில், விஜய் கைகளால் பரிசு வாங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனைவரிடமும் இதனை என் மகன் சொல்லி வருகிறார். எல்லோரும் இப்படிதான் என்று நினைக்கிறேன். என் மகனுடன் சேர்த்து என்னையும் அழைத்து வந்த நிர்வாகிகளுக்கு நன்றி.
என் மகனுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி. சாதாரணமாக கோவிலில் தொடர்ந்து தர்மம் செய்பவர்களுக்கு தர்மப்பிரபு என்று சொல்வார்கள். அதையே தொடர்ச்சியாக செய்தால், வாழும் வள்ளல் என்று கூறுவார்கள். அதுபோல் விஜய் தேர்ந்தெடுத்த துறை சினிமாவாக இருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியும், மாணவர்களும் அவசியம் என்று உணர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்.
இதனை தொடர்ச்சியாக செய்வது கடினமான விஷயம். கல்வியின் வளர்ச்சிக்கு 3 பேர் முக்கியமானவர்கள். காமராசர், ஜவஹர்லால் நேரு மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் தான் முக்கியமானவர்கள். அந்த வகையில் இளைய தளபதிக்கு ஆசைப்பட்டு ஒரு பட்டம் கொடுக்க விரும்புகிறேன். கல்வி சேவையை விஜய் தொடர்ந்து செய்ய வேண்டும்.