ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய மசோதாவை ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவரும் ஒரு புதிய கருவியாக இந்த முயற்சி இருக்கும். ட்ரம்பின் இந்த முடிவு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படையாகும். இந்தியாவும், சீனாவும் புதினின் கச்சா எண்ணெயில் 70% வாங்குகின்றன. அவர்கள் அவரது போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குகிறார்கள். ரஷ்யா மீதான இந்த தடைகள் மசோதாவிற்கு எங்களிடம் 84 ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே அந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.