மக்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே ஆர்டர் செய்தால் போதும் பால், மளிகை பொருட்கள், மின்னணு சாதனங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் உள்ளிட்ட அனைத்தையும் டெலிவரி பெற்று கொள்ள முடிகிறது. குயிக் காமர்ஸ் செயலிகளின் வருகையே இதற்கு காரணம்.
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் நாம் வீட்டில் இருந்து கிளம்பி கடைக்கு சென்று வாங்கி வர வேண்டும் என்ற காலம் போய்விட்டது. காய்கறிகளை கூட நாம் இந்த செயலிகள் வாயிலாக வாங்கி கொள்ளலாம்.
இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது. பிளிங்கிட், செப்டோ, இன்ஸ்டாமார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ளன.
சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என இந்தியாவின் பெரு நகரங்களில் நாம் செல்லும் போதெல்லாம் கண்டிப்பாக பிளிங்கிட், செப்டோ டெலிவரி ஏஜெண்டுகளை சாலையில் பார்த்துவிடுவோம். அந்த அளவுக்கு இந்த பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது. மக்களும் முன்வந்து இந்த சேவைகளை பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவை எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி அடைகிறது என்றும் மெட்ரோ நகரங்களை தாண்டி மற்ற நகரங்களுக்கும் இந்த சேவைகள் வேகமாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் டெல்லி மும்பை சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் இந்த செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்த வண்ணம் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தங்களுகிகு தேவையான பொருட்களை வாங்க குயிக் காமர்ஸ் செயலிகளையே பயன்படுத்துகின்றனர். மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து போனில் ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையான பொருட்களை பத்திலிருந்து முப்பது நிமிடங்களுக்குள் டெலிவரி பெற்றுக் கொள்கின்றனர்.
இந்தியாவில் குயிக் காமர்ஸ் செயலிகள் எதிர்பார்த்ததை விட வேகமான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் குயிக் காமர்ஸ் பிரிவு மதிப்பு 57 பில்லியன் டாலர்களாக உயரும் என தெரிவித்திருக்கிறது இதற்கு முன்பு 42 பில்லியன் டாலர்களாக உயரும் என தெரிவித்த மார்கன் ஸ்டான்லி தற்போது அந்த மதிப்பை உயர்த்தி அறிவித்துள்ளது.
2026 – 28 ஆம் நிதியாண்டில் குயிக்காமர்ஸ் பிரிவின் கிராஸ் ஆர்டர் வேல்யூ என்பது 9இல் இருந்து 11 சதவீதமாக உயரும் என கூறி இருக்கிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் மற்ற நகரங்களுக்கும் தங்களுடைய சேவைகளை இந்த நிறுவனங்கள் விரிவாக்கம் செய்கின்றன. இதுவும் இந்த பிரிவு வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் தற்போது இவை பல்வேறு நகரங்களிலும் தங்களுடைய டார்க் ஸ்டோர் எனப்படும் கிடங்குகளை அமைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை தீவிர படுத்தியிருக்கின்றன. இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவை பிரிவில் முதலிடத்தில் இருப்பது சோமேட்டோவுக்கு சொந்தமான பிளிங்கிட் நிறுவனம் தான் மார்கன் ஸ்டான்லி குறிப்பிடுகிறது. இந்தியாவின் குயிக் காமர்ஸ் சந்தையில் பிளிங்கிட் நிறுவனம் 46 சதவீத பங்கினை கொண்டுள்ளது. செப்டோ நிறுவனம் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் 29 சதவீத சந்தையை கொண்டுள்ளது. அடுத்ததாக ஸ்விக்கிக்கு சொந்தமான இன்ஸ்டாமார்ட் நிறுவனம் 23 சதவீத பங்களிப்புடன் இந்த பிரிவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சோமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களின் வளர்ச்சி சற்றே மந்தமடைந்த நிலையில் அவை மீண்டு வந்திருப்பதாக மார்கன் ஸ்டான்லி கூறுகிறது. இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் சோமேட்டோ தான் முதலிடத்தில் இருக்கிறது என மார்கன் ஸ்டான்லி கூறுகிறது. உணவு டெலிவரி செயலிகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் , குயிக் காமர்ஸ் செயலிகள் அவற்றை விட வேகமாக வளர்ந்து வருகின்றன. உணவு டெலிவரி செயலிகளின் சேவைகள் பெரும்பாலும் பெரு நகரங்களுக்குள்ளேயே முடங்கி இருப்பதாக மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கூறுகிறது. ஆனால் குயிக் காமர்ஸ் செயலிகள் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.
எனவே இந்தியாவில் உணவு டெலிவரியை விட குயிக் காமர்ஸ் சேவை வேகமாக வளர்ந்து வருவது இதன் மூலம் தெரிய வருகிறது. குயிக் காமர்ஸ் செயலிகளில் பிளிங்கிட் உரிமையாளரான சோமேட்டோ, இன்ஸ்டாமார்ட்டின் உரிமையாளரான ஸ்விக்கி ஆகியவை ஏற்கனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. செப்டோ விரைவில் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட இருக்கிறது. இந்த சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் மினிட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
குயிக் காமர்ஸ் பிரிவில் தற்போது மருந்து, ஆடைகள், மின்னணு சாதனங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் உள்ளிட்டவை கூட தற்போது கிடைக்கின்றன. இந்த துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அண்மையில் மணி கண்ட்ரோல் வெளியிட்ட செய்தியில் குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கான பொருட்களை டெலிவரி செய்வதில் தீவிரம் காட்டுவதாக தெரிவித்தது.
அண்மையில் தான் பெங்களூருவை சேர்ந்த கவி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை 30 நிமிடங்களில் டெலிவரி செய்வதற்கான சேவையில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதே போல ஓஸி என்ற நிறுவனமும் இதே போன்ற செயலி உருவாக்கத்தில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு குயிக் காமர்ஸ் செயலிகளில் முதலீடு செய்கின்றனர் என மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டது.