மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் மே 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள், முதல் 7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
மாநில காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக தேசிய சுகாதார ஆணையம் (என்எச்ஏ) இருக்கும்.
விபத்து நடந்த நாளிலிருந்து அதிகபட்சமாக ஏழு நாள்களுக்கு, பாதிக்கப்பட்டவர், ரூ.1.50 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு எந்தவொரு நியமிக்கப்பட்ட மருத்துவமனையிலும் பணமில்லா சிகிச்சையைப் பெற உரிமை உண்டு.
நாடு முழுவதும் உள்ள எந்தச் சாலையிலும் மோட்டார் வாகனம் தொடர்பான எந்தவொரு சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபரும் இதில் பலனடையலாம்.. அவரது வருமானம், பிரிவு உட்பட எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில், சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் ஆகியவை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நோடல் அமைப்பாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளரின் கீழ் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.